வணக்கம் நலந்தானே!
வழி நடத்திச் செல்லும் சேவை!
பார்வை இழந்த ஒருவர், தன்னை அழைத்துச் செல்ல உதவியை எதிர்பார்த்து நடைபாதையில் நின்றிருந்தார். அவருக்கு உதவ முன்வந்தார் ஓர் அன்பர். ‘‘வாருங்கள், நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்,’’ என்று மென்மையாகக் கூறி அதைவிட மென்மையாக அவருடைய கரத்தைப் பற்றினார். பளிச்சென்று, உறுதியாக அன்பரின் கரத்தைப் பற்றிக்கொண்டார் பார்வையிழந்தவர் - தனக்கு ஒரு சரியான வழிகாட்டி அமைந்துவிட்டார் என்ற நிம்மதியில்.அன்பர் சற்று முன்னே செல்ல, அவர் கரம் பற்றி மெல்ல பின்னே வந்தார்.
அன்பருக்கு, இயலாத ஒருவருக்குத் தான் உதவுகிறோம் என்ற சேவை மனப்பான்மை, மெல்ல கர்வமாக மாறியது. வேறு யாரும் செய்ய முன்வராத ஒரு சேவையைத் தான் செய்கிறோம் என்ற மெலிதான கர்வம். சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டார். பிற அனைவருமே தன்னை தம் பார்வையால் பாராட்டுவதாக கருதிக்கொண்டார்.
அந்தப் பெருமையில் வழியில் குறுக்கிட்ட ஒரு பள்ளத்தைத் தான் தாண்டி, பார்வையிழந்தவரும் தன்னைப் போலவே தாண்டி வரவேண்டும் என்று எதிர்பார்த்தார். எதிர்பாராத இந்த இழுப்பால் தடுமாறிப்போனார் பார்வையிழந்தவர். இதைப் பார்த்து திடுக்கிட்ட அன்பர், சட்டென அவரைத் தாங்கிக்கொண்டார். ‘மன்னித்துக்கொள்ளுங்கள்,’ என்று சொல்லித் தன் வழிகாட்டலில் நேர்ந்த பிழையை எண்ணி வருத்தம் தெரிவித்தார். அதாவது, பார்வை இழந்தவரின் ‘கண்ணோட்ட’த்திலேயே அவரை வழிநடத்துபவர் இயக்கவேண்டும்.
அவருடைய இயலாமையைப் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமே அவருடைய கையைப் பற்றிவிட்டதால் மட்டும் அவரைச் சரியாக வழிநடத்துகிறோம் என்று பொருளல்ல. மிகச்சிறு தடைகளையும், பள்ளங்களையும் அனுசரித்து, மிக மெதுவாக அவரை அழைத்துச் செல்லவேண்டும். மாறாக நம் இயல்புப்படி நாம் அவரை அழைத்துச் சென்றால் அது அவருக்குச் செய்யும் சரியான உதவியாக இருக்காது; மாறாக உபத்திரவமாகவே இருக்கும்.
தனக்குத் தெரிந்த விஷயத்தை, அதுபற்றி ஒன்றுமே தெரியாதவருக்குத் தெரியவைக்கும் செயலிலும் இந்த உத்தியைக் கடைபிடித்தல் நல்லது. ஆன்மிகமும் அப்படித்தான். அதில் ஆர்வம் கொண்டிருப்பவர், அதில் கொஞ்சமாகவோ, முற்றிலுமாகவோ சந்தேகத்துடன் இருப்பவருக்கு மென்மையாகப் புரிய வைக்கவேண்டும், பயிற்றுவிக்க வேண்டும். மக்களுக்கான இத்தகைய ஆன்மிக சேவையையும் சேர்த்துதான் மகேசனுக்கான சேவை என்கிறார்கள்!
பிரபுசங்கர் (பொறுப்பாசிரியர்)
|