ஆசையின் மரணத்தில்தான் அடக்கம் உயிர்பெறுகிறது



பகவத் கீதை  - 54

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காமஸங்கல்பவர் ஜிதா
ஞானாக்னிதக்தகர்மாணம் தமாஹு பண்டிதம் புதா (4:19)

‘‘எந்த ஆசை அடிப்படையிலும் அல்லாது, எந்தப் பிரதிபலன் நோக்கமும் இல்லாது, கர்மாக்களை இயற்றுபவனைப் பண்டிதன் என்று ஒரு ஞானி போற்றுவார். ஏனென்றால் அந்த கர்மாக்கள் எல்லாம் ஞான அக்னியால் எரியூட்டப்பட்டவை.’’யார் மனதில் ஞானாக்னி எரிந்துகொண்டிருக்கிறதோ, அவரை ஆசை நெருங்குவதில்லை. அப்படி நெருங்குமானால் அது உடனே பஸ்மமாகிவிடும். இப்படிப்பட்டவரே பண்டிதன். இந்தப் பண்டிதத்தன்மை கல்வி அறிவால் வருவதில்லை, வர முடியாது. ஏனென்றால் கல்வி கற்றலின் தன்மையே அடக்கத்தைத் தருவதாகவும், அகங்காரத்தைத் தருவதாகவும் இரண்டாகவும் வினைபுரியும்.

மெத்தப் படித்தவனின் மௌனம் அவனை ஞானவழியில் இட்டுச் செல்கிறது. அதேசமயம் அவனை அகங்காரமுடையவனாகவும் ஆக்குகிறது. மொத்தம் படித்தவர் என்று யாரும் இல்லை என்பதால் ஏற்படும் விளைவு இது. பிறந்தது முதல் இறப்புவரை ஒவ்வொரு விநாடியும் படித்தும், அனுபவித்தும் தெரிந்து கொள்ள இந்த உலகம் எத்தனையோ விஷயங்களை நம் முன் கொட்டுகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக அத்தனையையும் அறிந்துகொள்ள நமக்கு ஒரு ஜன்மம் போதாததாகிவிடுகிறது!

இவ்வளவு ஏன், தெரிந்துகொண்ட அல்லது அறிந்துகொண்ட ஒருசில விஷயங்களிலும்கூட முழுமையான அறிவைப் பெறமுடியவில்லையே! ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இதுதான் முடிவு என்று எல்லையை வரையறுக்க முடியவில்லையே! இதுதான் எல்லை என்று நாம் நினைத்துக்கொண்டு அந்தக் கோட்டைத் தொடும்போது அது நம்மை விட்டகன்று மேலும் சில பரப்புகளைக் கடந்து அந்த முனைக்குப் போய் நம்மைப் பார்த்து ஏளனம் செய்கிறதே!

ஆக, கல்வியில் முழுமை என்பது எங்கே இருக்கிறது, என்னவாக இருக்கிறது? அந்த இலக்கை நிர்ணயிக்க முடியாததால், யாவர்க்கும் கற்றது கைம்மண் அளவேயாகிறது! இந்த நிலையில் எந்த அளவுக்கு அமைதி காக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் ஞானம் பெறுகிறோம். வேடிக்கை பாருங்கள், உலகாயத விஷயங்களில் நாம் கற்றது கைம்மண் அளவேயானாலும் நம்மால் ஞானம் பெறமுடிகிறது! அதாவது ஞானம் பெற கல்விக் கடலை முழுவதுமாகக் குடிக்கவேண்டிய அவசியம் இல்லை.

‘‘ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசை பற்றி அறைய
லுற்றேன் மற்று இக்காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!’’

- என்று கம்பர் எத்தனை அடக்கத்துடன் தன் ராமாயணத்தை ஆரம்பிக்கிறார்! கல்வி மற்றும் கற்றலின் பரிமாணத்தைப் பாற்கடலுடன் அவர் ஒப்பிடுகிறார். அந்த மகா சமுத்திரத்தை அப்படியே குடித்துவிட ஓர் அற்பப் பூனை ஏங்குவதுபோலதான், தான் ராமனின் கதையைச் சொல்ல முற்படுவதும் என்று துவக்கத்திலேயே அடக்கம் காக்கிறார். இந்த அடக்கம் காரணமாகவே அவர் பண்டிதராகிறார், ஞானம் பெற்றவராகிறார். ராமனைப் பற்றி சிந்திப்பவர்களும், அவர் புகழைப் போற்றுவோருக்கும் இயல்பாகவே இந்த அடக்கம் தானாக அமைந்துவிடும் என்பதற்கு கம்பர் ஓர் உதாரணம்.

இந்த உணர்வு, கல்விக்கு மட்டுமல்ல, செல்வம், வீரம், கொடை, புகழ், சமுதாயப் பணி என்று எல்லா துறைகளுக்கும் பொருந்தும். ஏன், நம் வீடுகளிலேயே, அதிகபட்சமாக நாலைந்து உறுப்பினர்களிடையே குடும்பத் தலைவராகத் தன்னை நிலைநாட்டிக்கொண்டவர்தான் எத்தனை அகங்காரம் மிகுந்தவராக இருக்கிறார்! ஆசையின் மரணத்தில்தான் அடக்கம் உயிர் பெறுகிறது. தேவைகளின் கட்டுப்பாட்டில்தான் அடக்கம் பரிமளிக்கிறது. பட்டம், பதவிகளெல்லாம் மதிப்பற்றவையாகக் கருதப்படும்போதுதான் அடக்கம், மதிப்பு மிகுந்ததாகிறது.

இதை பண்டிதன் aவான். இதனை ஞானி அறிவான். தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள விரும்பும் ஆசைதான், உடலுக்கு அலங்காரம் தேவை என்கிறது. ஆபரணங்களைப் பூட்டச் சொல்கிறது. தன்னைப் பிறர் வியந்தோ, பொறாமையுடனோ பார்க்கச் சொல்கிறது. தன் சொல்லுக்குப் பிறர் கட்டுப்படவேண்டும் என்ற அகங்காரம்தான் பேச்சில் கடுமையைக் கூட்டுகிறது. உடலசைவில் முரட்டுத்தனத்தை ஏற்றுகிறது. பழக்கத்தில் பகையை உருவாக்குகிறது. பாரம்பரியமாக வன்மத்தை நீட்டிக்கிறது.

ஆசை ஒரு புள்ளியில் ஆரம்பித்தாலும் அது உலகளாவியதாக வியாபித்துவிடும் தன்மை கொண்டது. ஒன்று, அடுத்தது, அடுத்தது என்று அது வரையறை வகுத்துக்கொள்ள முடியாமல் திணறுகிறது. ஏதேனும் முட்டுக்கட்டை விழுந்தால், அதோடு திரும்பிவிடுவதில்லை. அந்த எதிர்ப்பையும் மீறிச் செல்ல முற்படுகிறது. இயலாதபோது அதனுடன் பொறாமை, பகை, குரோதம் எல்லாம் கைகோர்த்துக்கொள்கின்றன. இதனால் ஆசைக்கு ஆட்பட்ட ஒருவன் அழிந்து போகிறான். 

ஆகவே, ஆசையிலிருந்தும், அகங்காரத்திலிருந்தும் விடுதலை பெறும் ஒருவன், படிக்காவிட்டாலும் பண்டிதனாகிறான்! இவன் இயற்றும் கர்மாக்களில் பழுது இருப்பதில்லை, அவை ஆன்மாவுக்கு அர்ப்பணிக்கப்படுவதாகவே உள்ளன. ஒரு பக்கம் ஆசை என்றால், இன்னொரு பக்கம் துக்கம். தனக்கு நேர்ந்ததே மிகப் பெரிய துக்கம் என்று ஒவ்வொருவரும் நினைத்துக்கொள்வதால் துக்கத்தின் பரிமாணம் அவரவர் மனநிலைக்கு ஏற்ப பெரிதாகிக்கொண்டே போகிறதே தவிர, அடங்குவதாகக் காணோம்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி கைரேகை போல ஒவ்வொருவருக்கும் தனித்தனி துக்கம். பிற எல்லோருடையதை விடவும் தனக்கு ஏற்பட்டதுதான் தாங்கொணாதது என்ற மிகைப்படுத்துதல் ஒவ்வொருவருக்குள்ளும் அமைந்துவிடுகிறது. இதனாலேயே ஒப்பீடும் நேர்கிறது. சில சந்தர்ப்பங்களில் ‘நாம் தேவலை’ என்ற தற்காலிக ஆறுதலும் கிடைக்கிறது.

 உறவுகளையும், நட்புகளையும் எப்படி கொண்டாடுகிறோமோ இல்லையோ, ஆசையையும், துக்கத்தையும் வெகு கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிடுகிறோம். ஒன்று போனால் இன்னொன்று - அது நிறைவேறினாலும் சரி, நிறைவேறாவிட்டாலும் சரி. முற்றிலுமாக உதறிவிட முடிவதில்லை. அதனாலேயே நாம் இயற்றும் ஒவ்வொரு கர்மாவிலும் எதிர்பார்ப்புகள் கூடுகின்றன. இதனாலேயே இதெல்லாம் வெறும் செயல்களாகிவிடுகின்றன - வினை, எதிர்வினை என்ற பலாபலன்களோடு.

த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராச்ரய
கர்மண்யபிப்ரவ்ருத்தோ பி நைவ கிஞ்சித் கரோதி ஸ (4:20)

‘‘எந்தப் பற்றுமில்லாமல் எப்போதும் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதிலேயே திருப்தி கொள்பவன், தன் அபிமானங்களைத் தியாகம் செய்பவனாக இருக்கிறான். அதனாலேயே அவன் மிகச்சிறந்த முறையில் செயலாற்றுபவனாக இருக்கிறான். அதனாலேயே அவன் கர்மாக்கள் இயற்றாதவனாகவும் தோன்றுகிறான்.’’ வானம் நிர்மலமாக இருக்கிறது. அதனடியில் மேகங்களைக் கொண்டு சேர்க்கிறது காற்று. மேகங்கள் கறுக்கின்றன. ஒருசில நிமிடங்களில் மேகங்கள் தமக்குள் முட்டிக்கொண்டு மின்னலைப் பாய்ச்சுகின்றன.

அந்த மின்னல்கள் இடிமுழக்கங்களை உருவாக்குகின்றன. இன்னும் சற்று நேரத்தில் பெருமழை பொழிகிறது. மேகங்கள் கரைந்து போகின்றன. மீண்டும் வானம் நிர்மலமாகக் காட்சியளிக்கிறது. அதுவரை மேகங்கள் சூழ்ந்திருந்ததற்கான சுவடே இல்லை. இந்த வானத்திலிருந்தா மின்னல் ஒளிர்ந்தது, இடி பேரோசையுடன் இறங்கியது, தண்ணென்ற மழை பொழிந்தது என்று வியக்கும் அளவுக்கு வானம் நீல மௌனம் காக்கிறது.அதுதான் அதன் கர்மா. மேகம் சூழ்ந்ததும், மின்னல் மின்னியதும், இடி இடித்ததும், மழை பொழிந்ததுமான அதுவரை நடந்த செயல்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல வானம் சலனமடையாமல் இருக்கிறது.

வீடு வீடாகக் கடிதங்களைப் பட்டுவாடா செய்கிறார் ஒரு தபால்காரர். அவர் கொடுத்த கடிதத்தைப் பிரித்துப் படித்த ஒருவர் சந்தோஷத்தால் குதிக்கிறார். அவரை மகிழ்வூட்டும் செய்தி அந்தக் கடிதத்தில் இருக்கிறது. அதேபோல கடிதம் பெறும் இன்னொருவர் அதைப் பிரித்துப் படித்தபோது அப்படியே கதறி அழுகிறார். ஏனென்றால் இவரைத் துக்கப்படுத்தும் செய்தியை அந்தக் கடிதம் கொண்டுவந்திருக்கிறது.

தான் கொடுத்த கடிதத்தால் ஒருவர் சந்தோஷப்படுகிறார் என்பதற்காகத் தானும் மகிழ்வதும், இன்னொருவர் துக்கப்படுகிறார் என்பதற்காகத் தானும் அழுவதுமாக அந்த தபால்காரரால் நடந்துகொள்ள இயலுமா? அவருடைய கடமை கடிதங்களைப் பட்டுவாடா செய்வது மட்டுமே. பிறர் உணர்வுகளை இவர் பிரதிபலிக்கவேண்டிய அவசியம் இல்லை. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இந்த விஷயத்தை ஒட்டி ஒரு புராண சம்பவத்தைச் சொல்கிறார்:

வியாச முனிவர் ஒருமுறை யமுனைக் கரைக்கு வந்தார். எதிர்க்கரைக்குப் போகவேண்டும் அவர். ஆனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓடக்காரர்களோ அந்த வெள்ளத்துக்கு பயந்து ஓடத்தை இயக்க மறுக்கிறார்கள். இந்த சமயத்தில் ஏழெட்டு கோபிகைப் பெண்கள் அங்கே வருகிறார்கள். அவர்களும் யமுனை ஆற்றைக் கடந்து எதிர்ப்புறம் செல்லவேண்டும். ஓடமும் இல்லை. இந்தப் பெருவெள்ளத்தை எப்படிக் குறுக்காகக் கடப்பது? வியாசரைப் பார்க்கும் அவர்கள், அவர் ஏதேனும் யோசனை சொல்வார் என்று நினைத்து அவரிடம் போய், அவரோடு தங்களையும் பத்திரமாக எதிர்க்கரைக்குக் கொண்டு சேர்க்கமுடியுமா என்று கேட்கிறார்கள்.

உடனே வியாசர், ‘‘கவலைப்படாதீர்கள். நான் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கிறேன். ஆனால் அதற்கு முன் நான் பசியாற வேண்டும். உங்களிடம் ஏதேனும் உணவுப் பொருட்கள் இருக்கின்றனவா, எனக்குத் தரமுடியுமா?’’ என்று கேட்கிறார். இப்போதைக்குப் பசியைபோக்கிக்கொள்ளும் இவரால் தங்களையும் அழைத்துக்கொண்டு எப்படி இந்த வெள்ளத்தைக் கடக்கும் ஆற்றலைப் பெறமுடியும் என்று யோசிக்கிறார்கள் பெண்கள்.

ஆனாலும் அவர் கேட்டபடி தம்மிடம் இருந்த வெண்ணெய், பால், தயிர் ஆகியவற்றைக் கொடுக்கிறார்கள். அவற்றை வாங்கி உண்ட வியாசர், நதியிடம், ‘‘யமுனையே, இன்று நான் உபவாசம் இருப்பது உண்மையானால், உன்னைக் கடந்து நான் அக்கரை செல்ல எனக்கு உதவுவாயாக. எனக்கு வழி கொடுப்பாயாக,’’ என்று வேண்டிக்கொண்டார். உடனே ஆறு வழிவிட்டது. வாரிவிட்ட தலைபோல வெள்ளம் இரண்டாகப் பிரிந்து நடுவே வகிடு போன்ற நிலக்கோட்டைக் காட்டியது. வியாசர் அந்தப் பாதையில் முன்னேறிச் செல்ல, பெண்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

பெண்களுக்கு ஆறு வழிவிட்ட திகைப்பைவிட, வியாசர் தம்மிடமிருந்து பொருட்களை வாங்கி உண்டுவிட்டு, ‘உபவாசம்’ இருப்பதாகச் சொன்னாரே அது பொய் இல்லையா என்ற உறுத்தல் அதிகமாகத் தோன்றியது. வியாசரின் தன்மையே அதுதான். அவர் எதையும் தனக்காகச் செய்துகொண்டவரே அல்லர். பகவானுக்குப் பசிக்கிறது, பகவானுக்கு தாகமெடுக்கிறது என்று ‘தன்னை’க் கருதிக்கொள்பவர் அவர். அதனால் அவர் சாப்பிட்டதும் அவருக்காக அல்ல! ஐம்புல உணர்வுகள் யாவற்றையும் அவர் தனக்குரியதாகக் கருதியதே இல்லை. இது அந்தப் பெண்களுக்குப் புரியாதுதான்!

இப்படி ஒரு சம்பவத்தைச் சொன்னாரே தவிர, பரமஹம்ஸரும் வியாசரைப் போன்றவர்தான். அவர் திடீரென்று நடனமாடுவார். அதற்கான காரணம் சுற்றியிருப்போர் யாருக்கும் தெரியாது. பகலில் கண்மூடிப் படுத்திருப்பார். அது தூக்கமா, தியானமா என்று யாருக்கும் புரியாது. பிரகாசமாக சிரிப்பார். கை, கால்களை வித்தியாசமாக அசைத்து அபிநயம் பிடிப்பார். பிறகு கேட்டால், ‘நானா, நானா அப்படிச் செய்தேன்?’ என்று எதிர்க் கேள்வி எழுப்புவார்.

ஏனென்றால், அந்த இயக்கமெல்லாம் அவருடையது அல்ல. எல்லாமே சர்வேஸ்வரனுடையவை. அந்தப் பரம்பொருளே எல்லாமாகவும், அவற்றுள் தானாகவும் வியாபித்திருப்பதாக பரமஹம்ஸர் தீர்மானித்திருக்கிறார். இதனால் அவர் கர்மா இயற்றினாலும், இயற்றாதவராகவே தோன்றுகிறார். ‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்ற, எல்லாமே பரந்தாமனுக்கு அர்ப்பணிக்கும் சொற்றொடருக்குச் சரியான உதாரணமாகத் திகழ்ந்தவர் பரமஹம்சர்.

(தொடரும்)