வணங்கும் பக்தருக்கு வாரி வழங்கும் வைகுந்தா!



கண்டுகொண்டேன் பெருமாளே
கண்மலர் அசைவில் உன் தரிசனம்
கருநீலமேனி திருவுருவை வியந்து
கண்களால் பருகி மெய்மறக்கையிலே!
வாள் கொய்யும் மனக்கவலைக்கு
தோள் கவ்விய மலரே மாமருந்து!
காற்றிலா கர்ப்ப கிரகத்தில்
கரைபுரளும் அருள் வெள்ளம் கண்டேன்!

மனசாட்சி மறைத்த மானிடரும்
மறைக்க முடியாத ஒரு சாட்சி
அரசாட்சி புரிபவரும் தவறிழைத்தால்
அஞ்சி நடுங்கவைக்கும் விஸ்வரூப காட்சி!
பணம் பதவி பட்டம் தேடி
மனம் குணமிழந்த மானிடரே
பொன்னை உருக்கினால் ஆபரணம்
தன்னை உருக்கினால் மெய்ஞானம்!
எத்தனை மலர் பறித்தோம்
அத்தனையுமா நாரில் தொடுத்தோம்!
வித்தனை முக்தனை வணங்கினால்
பக்தரை மலராய் மார்பில் ஏற்பான்!
கண்டுகொண்டேன் பெருமாளே
கால்கடுக்க சந்நிதியில் நின்றபோது!
கண்டுகொண்டேன் பெருமாளே
தொண்டருக்கு தொண்டராக வாழ்ந்தபோது!
வணங்குவோருக்கு வாரி வழங்கும் வைகுந்தா
வணங்காதோரை வாழ்த்தி அருளும் சீனிவாசா!
திருமலையை நினைத்தாலே அருள் சுரக்கும்
திருப்பதியை வலம் வந்தால் முக்தி நிச்சயம்!
குறையாது செல்வம் வளரும்
மறையா துன்பம் மனதில் அகலும்!
ஏழுமலையை நாடி செல்வோம்
ஏழு பிறவி பாவம் தொலைப்போம்!
எழும் சிந்தனை மாய்ந்தாலும்
எழும் அலைகடல் ஓய்ந்தாலும்
உடல் ரத்தம் வற்றினாலும்
உற்ற தேகம் அழிந்தாலும்
உள்ளத்துடிப்பு உள்ளவரை
பெருமாளே உன்னை சிக்கெனபிடிக்க
பெருவரம் அருள்வாய் கோவிந்தா!
திருப்பம் தரும் வாழ்வருளும்
திருச்சானூர் பத்மாவதி தாயே!
வேங்கடவனை நேசிக்கும் உன் மனம்
எனக்கும் அமைய அருள்வாய் நீயே!
விண்ணை, பொன்னை, மண்ணை
காற்றை, கடலை அளந்திடலாம்!
கருவாய் இருந்து உலகை இயக்கும்
பெருமாளின் பேரருள் அளப்பது அரிது!
காலச்சக்கரத்தை சுழற்றும் கலியுகவரதா
கண்டுகொண்டேன் உனை திருமலைவாசா!

- விஷ்ணுதாசன்