விளாங்குளம்



தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது விளாங்குளம். இங்குள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம். இங்கு பிராகாரத்தில் அருள்பாலிக்கும் இரட்டை விநாயகர்கள் தம்மை ஆராதிக்கும் பக்தர்களை கடன் மற்றும் வழக்குப் பிரச்னைகளிலிருந்து விடுவிக்கக்கூடியவர்கள்.

கீழகபிஸ்தலம்

தஞ்சை-கும்பகோணம் சாலையில் பாபநாசம் ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழகபிஸ்தலம். இங்கு அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் அருள்பாலிக்கிறார்கள் இரட்டை விநாயகர்கள். பகைவர்களின் தொல்லை மற்றும் வழக்குகளிலிருந்து பக்தர்களை காக்கக் கூடியவர்கள்
இவர்கள்.

சோழிய விளாகம்

சீர்காழி-திருப்பனந்தாள் பேருந்து தடத்தில், பந்தநல்லூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. சோழிய விளாகம். இங்கு சோழமன்னன் கோசெங்கட்சோழன் கட்டிய  சாமுண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு மகாமண்டபத்தில் அருள்பாலிக்கும் இரட்டை விநாயகர்கள், கைவிட்டுப்போன பொருள் திரும்பக் கிடைக்க அருள்புரிபவர்கள்.

மரத்துறை

தஞ்சை மாவட்டம் மணல்மேட்டுக்கு அருகே உள்ள மரத்துறையில் உள்ளது இரட்டை விநாயகர்களுக்கென்றே பிரத்யேக ஆலயம். இந்த இரட்டை விநாயகரை வணங்கிவிட்டு பயிர் தொழிலைத் தொடங்கினால் அமோகமாக அறுவடை செய்யலாம் என்பது அங்குள்ள
விவசாயிகளின் நம்பிக்கை.

இலுப்பைப்பட்டு

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகே உள்ள மணல்மேட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இலுப்பைப்பட்டு. இங்குள்ள நீலகண்டேஸ்வரர் ஆலயத்தின் மேற்கு திருச்சுற்றில் திரௌபதி பூஜை செய்த வலம்புரி விநாயகர் மற்றும் நிருதி விநாயகர் என இரட்டை விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். குடும்ப ஒற்றுமையைக் காக்க இவர்கள் பேரருள் புரிகிறார்கள்.

- திருச்சி சி.செல்வி