தன்னைத் தந்து காவிரியை மீட்ட முனிவர்!



-திருவலஞ்சுழி

கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் அமைந்துள்ளது வலஞ்சுழி விநாயகர் ஆலயம். பொங்கிப் பெருகி நுங்கும் நுரையுமாக ஓடிவந்தது காவிரியாறு. ஆனால், ஆதிசேஷன் பூமியிலிருந்து வெளிப்பட்டதான் ஏற்பட்ட பெரும்பள்ளத்தினுள் பாய்ந்து பாதாளத்தில் இறங்கி விட்டது. காவிரி இல்லாமல் சோழ நாடா? மாமன்னன் திகைத்தான், நடுங்கினான். ‘இறைவனே, இது என்ன சோதனை!’ என்று கைகூப்பி மெய்ஒடுங்கிக் கடவுளைத் தொழுதான்.

இறைவனின் அசரீரி கேட்டது: ‘மன்னனோ அல்லது யாரேனும் மகரிஷியோ, அப்பாதாளத்தில் இறங்கித் தன்னை பலியிட்டுக் கொண்டால் பிளவு மூடிக்கொள்ளும், காவிரி வெளிப்படும்.’ அசரீரி கேட்டு மன்னன் மனங்கலங்கினான். பிறகு தன்னைத் தேற்றிக்கொண்டு, ‘ஏரண்ட முனிவர்’ எனும் முனிவரிடம் சென்று நடந்ததைச் சொன்னான்.

தவமுனிவர் மன்னனுக்கு ஆறுதல் கூறினார். தானே அப்பெரும் பிளவில் இறங்கினார். பிளவு மூடப்பட, காவிரி வெளிப்பட்டது. சிறப்பு வாய்ந்த ஏரண்ட முனிவர் வழிபட்ட தலம் ‘திருவலஞ்சுழி.’ இம்முனிவரின் உருவத்தை இக்கோயிலில் காணலாம். ‘கபர்த்தீஸ்வரர்’, ‘செஞ்சடைநாதர்’, ‘கற்பக நாதேஸ்வரர்’, ‘வலஞ்சுழிநாதர்’ என்றெல்லாம் இவ்வாலய ஈசன் வழிபடப்படுகிறார். இறைவியை ‘பிருகந்நாயகி, பெரிய நாயகி’ என்று அழைத்து வணங்குகிறார்கள். காவிரி, அரசலாறு மற்றும் ஜடாதீர்த்தம் ஆகியவை இவ்வாலயத்தின் தீர்த்தங்கள்.

தலவிநாயகரான வெள்ளை வாரணப் பிள்ளையாரே, இத்தலத்தின் சிறப்பு மூர்த்தி. பொதுவாக எல்லா விநாயகருக்கும் துதிக்கை இடப்பக்கமாக சுழித்துக் காணப்படும். இங்குள்ள விநாயகருக்கு துதிக்கை வலஞ்சுழியாகக் காணப்படுகிறது. அதனாலேயே இத்தலம் வலஞ்சுழி எனப்பட்டது. இவர் வீற்றிருக்கும் மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்டது.

‘சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்டு புராதனப் பெருமையைப் பறைசாற்றுகிறது இந்த அழகிய மண்டபம். கடல் நுரையால் வடிவாகி, இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே வெள்ளைப் பிள்ளையார். இதனால் இவ்விநாயகருக்கு பச்சைக்கற்பூரம் மட்டும் சாத்தி அபிஷேகம் செய்கிறார்கள். கிழக்கு பார்த்த அழகிய கோபுரம். கோயிலுக்குள் நுழைந்ததும் வலப்பக்கம் தெப்பக்குளத்தைக் காணலாம்.

அகண்ட விசாலமான கோயில். அம்பாள் வலப்பக்கத்தில் மணக்கோலத்தில் காணப்படுகிறாள். அஷ்டபுஜ காளி உருவம் காண்போரைக் கவர்ந்திழுக்கிறது. பைரவ மூர்த்தி விக்கிரகம் மிகவும் உக்கிரமானதாக இருந்ததால், அதைத் தணிக்க லேசாக பின்னப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். இக்கோயிலில் சனீஸ்வரர் சந்நதியும் உண்டு. அமைதியான ஆனால், பிரமாண்டமான கோயில்.

நின்று நிதானமாக சாமி தரிசனம் செய்ய முடிகிறது. சுவாமிமலைக்கும், திருவலஞ்சுழிக்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுதான். வலஞ்சுழியில் விநாயகர், சுவாமிமலையில் முருகர் என அண்ணனையும், தம்பியையும் அடுத்தடுத்து வணங்குவதும் ரொம்பவும் விசேஷம்.

- கோட்டாறு ஆ.கோலப்பன்