தில்லை மூவாயிரவர் என்போர் யாவர்?



சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பெருமானைப் பூஜித்துக் கொண்டிருக்கும் அர்ச்சகர்கள் தில்லைவாழ் அந்தணர்கள், தீக்ஷிதர்கள், தில்லை மூவாயிரவர் என்று பலவாறு அழைக்கப்படுகின்றனர். தில்லை மூவாயிரவருடன் நடராஜரும் ஒருவராகவே இருக்கின்றார். இவர்கள் தங்களுக்கு முறை வைத்துக் கோயிற்பூசனையைச் செய்து வருகின்றனர்.

தமது வாழ்வுக்கும் கோயில் நடைமுறைகளுக்கும் வேண்டிய உயரிய திட்டங்களை வகுத்து அதில் கூறப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடந்து வருகின்றனர். ஆதியில் இவர்கள் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டு திருமூலட்டானரையும், ரகசியத் தானத்தையும் மந்திர ரூபரான நடராஜரையும் பூஜித்து வந்தனர்.

பின்னர், சிற்றம்பலத்தைப் பெருமான் எல்லோரும் காண தோற்றுவித்து, அதில் அர்ச்சாமூர்த்தியாக எழுந்தருளிய நடராஜரை முதன்மையான மூர்த்தியாகக் கொண்டு தில்லைப் பெருங்கோயிலைப் பூஜித்து வருகின்றனர். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, இவர்கள் எல்லோரும் சிவகணநாதர்களாகத் தோன்றியதைக் கண்டு பாடிப் பரவினார் என்று கூறப்படுகின்றது.

சிவனடியார்களை வரிசைப்படுத்திச் சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகை தில்லைவாழ் அந்தணரை முதலிற் கொண்டே தொடங்குகிறது. இந்நாளில் இவர்கள் 500க்கும் குறைவாகவே உள்ளனர். பதஞ்சலி முனிவர் தமக்கு வகுத்துத் தந்த பூஜாபத்ததிகளின் வழியாகவே நடராஜரைப் பூஜித்து வருகின்றனர். இப்பூஜை முறைகள் பெருமளவு மகுடாகமத்தையொட்டியுள்ளதாகக் கூறுகின்றனர்.

தில்லைச் சிற்றம்பலத்துள் பூஜிக்கும் முறையுள்ள தீக்ஷிதரை நடராஜராகவே போற்றி வணங்கி விபூதி பெற்றுக் கொள்ளுகின்றனர். பெரிய புராண தொடர் சிற்பங்களில் இவர்கள் மூவாயிரவரைக் குறிக்கும் வகையில் மூன்று திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தில்லையைப் போற்றும் பனுவல்களில் நடராஜருக்கு ஒப்ப, தில்லை மூவாயிரவரின் பக்தியும் பெருமையும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

பதஞ்சலி - வியாக்ரபாதர் - ஜைமினி
ஆதியில் தில்லையம்பலத்தில் ஆடிக் கொண்டிருக்கும் நடராசப் பெருமானின் பிரபஞ்ச இயக்கத்திற்கான பஞ்சகிருத்திய பரமானந்தத் தாண்டவம் அதிசூட்சும நிலையில் நடந்து வந்தது. அந்த தாண்டவத்தைப் பலர் தமது அரிய தவமுயற்சியால் இறையருள் பெற்றுக் கண்டுகளித்தனர். அவர்களில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி ஆகியோர் முதன்மை பெற்றவர்கள். அவர்களுடைய வேண்டுகோளின்படியே பலரும்காண அங்கே சிற்சபை தோன்றியது.

பதஞ்சலி
அனந்தனில் அரிதுயில் கொண்டிருந்த விஷ்ணு ஆனந்தப் பரவசராகி முகம் பொலிவெய்தி ஆனந்தக் கண்ணீர் பெருகக் கைகளைக் கூப்பினார். இந்த வியப்புக்கு என்ன காரணம் என்றான் அனந்தன். திருமால், பெருமானின் ஆனந்தக்கூத்தை எண்ணி மகிழ்ந்ததால் உண்டானது என்றார். அனந்தனுக்குத் தானும் அக்காட்சியைக் காண விருப்பம் உண்டானது.

திருமாலிடம் விடைபெற்றுக் கொண்ட அவன் கயிலை மலைக்குச் சென்று தவம் புரிந்தான். சிவபெருமான் அவனிடம் ‘அத்திரி-அனசூயா தம்பதியருக்கு மகனாகப் பிறந்து தவம் செய்வாய்’ என்றார். அவன் சிறிய பாம்பு வடிவுடன் விண்ணில் பறந்து அத்திரி ஆசிரமத்தை அடைந்தான். அவ்வேளையில் அனசூயாதேவி ருது ஸ்நானம் செய்து விட்டு கைகளில் நீரை அள்ளியெடுத்தாள்.

அனந்தன் அவளது கரங்களில் வீழ்ந்தான். அவள் பாம்பென்று பதறி அவளது கைகளை விலக்க, பாதத்தில் வீழ்ந்த அவன், அவளைத் துதித்தான். அங்கு வந்த அத்திரி அவனுக்குப் பதஞ்சலி என்று பெயர் சூட்டினார். அவன் அவரிடம் தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். அத்திரியும், அனசூயாதேவியும் மகிழ்ந்து, அவனை மகனாக ஏற்று வளர்த்து வந்தனர்.

அவன் உரிய வயதை எய்தியபோது, அவனுக்கு உபநயனம் செய்வித்து மந்திரோபதேசமும் செய்து வைத்தார். அவன் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தில்லைவனத்தை அடைந்தான். தமக்கு முன்னமேயே அங்கு வந்து தவம் செய்து கொண்டிருந்த வியாக்ரபாதருடன் சேர்ந்து கொண்டான்.

அங்கு மூலட்டானரை வழிபட்டு மகிழ்ந்ததுடன் பாம்பரசர்களால் அங்கு நிறுவப்பட்டிருந்த அனந்தேஸ்வரர் சிவலிங்கத்தைக் கண்டு பூஜை செய்து மகிழ்ந்திருந்தான். தில்லையில் நடைபெற்று வரும் பூஜை முறைகளை வகுத்தளித்தவர் அனந்தனின் அவதாரமான பதஞ்சலியேயாவார். அவர் வகுத்தபடியேதான் இப்போதும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பதஞ்சலியின் வடிவம் ஆலயத்தில் உள்ளது.

வியாக்ரபாதர்
மத்தியந்தின முனிவரின் குமாரர் மாத்யானந்தினர். இவர் இளம் வயதிலேயே தந்தையிடம் சகல ஞானங்களையும் கற்றார். அவற்றின் மூலம் சிவபூஜையே உயர்ந்த பூஜை எனக்கண்டு தெளிந்து, பல்வேறு தலங்களில் வழிபாடு செய்தவாறே தில்லைக்கு வந்தார். மூலட்டானரைக் கண்டு நாள்தோறும் பூஜை செய்து மகிழ்ந்திருந்தார்.

அவர் பூஜைக்கென பூச்சி அரிக்காத, வண்டு மொய்க்காத மலர்களைப் பெற வேண்டி அதிகாலையிலேயே நந்தவனங்களுக்குப்பூப்பறிக்கச் செல்வது வழக்கம். நந்தவனங்களில் மரக்கிளைகளில் ஏறும்போது பனியால் கால் வழுக்கியதுடன், இருள் பிரியாத நேரத்தில் பூக்களைத் தேடிப் பறிப்பதும் துன்பமாக இருந்தது. அதனால் மிகுந்த வருத்தம் அடைந்தார்.

இறைவன் அவரது துன்பத்தை மாற்ற வேண்டி இடப வாகனத்தில் காட்சி கொடுத்தார். மாத்யானந்தினர் நாள்தோறும் அதிகாலையில் சிவபூஜைக்கு வேண்டிய மலர்களைப் பெற, எளிதாக இருக்க புலிக்கு இருப்பது போன்று இரவிலும் பார்வை நல்கும் கண்களும், வழுக்காது மரங்களில் ஏற, புலி போன்று நகமும், தசைப்பற்றுகளும் கொண்ட கை-கால்களைப் பெற்றார். புலி போன்ற பாதங்களைப் பெற்றதால் வியாக்ரபாதர் என்று பெயர் பெற்றார்.

இவர் வசிஷ்டரின் சகோதரியை மணந்தார். அவர்களுக்குப் பிறந்தவரே உபமன்யு முனிவர். ஒரு சமயம் உபமன்யு பால் வேண்டி அழுதபோது, இறைவன் அவருக்காகப் பாற்கடலையே வரவழைத்துத் தந்தார். பாற்கடலின் நினைவாக தில்லையில் அமைந்ததே திருப்பாற்கடல் தீர்த்தமாகும். உபமன்யு முனிவர், முனிவர்களில் உயர்ந்தவராகப் போற்றப்படுகின்றார். வியாக்ரபாதர் தில்லைவனத்தில் மூலட்டானரை வணங்கி வந்ததுடன், திருப்புலீச்சரம் என்னும் ஆலயத்தையும், அதன் முன்பாகப் புலிமடு என்னும் தீர்த்தத்தையும் தோற்றுவித்தார்.

அத்தீர்த்தமே இந்நாளில் இளமையாக்கின தீர்த்தம் என வழங்குகின்றது. புலிக்கால் முனிவர் வணங்கிப் பேறுபெற்ற இடமாதலின் வியாக்ரபுரம், திருப்புலீச்சரம், பெரும் பற்ற புலியூர், புலியூர் என்னும் பெயர்களால் சிதம்பரம் அழைக்கப்படுகிறது. தில்லையில் இரண்யவர்மனைக் கொண்டு பெரும் திருப்பணிகளை நடப்பித்தவர் வியாக்ரபாதரேயாவார்.

தில்லையில் வியாக்ரபாதர் ஜைமினி, பதஞ்சலி ஆகிய மூவரும் ஒரே பீடத்தில் அமைந்த உலாத் திருமேனி உள்ளது. தைப்பூசத்திற்கு முன்பாக ஒன்பது நாட்கள் மூவரும் திருமூலட்டானரை பூஜிக்கும் ஐதீக விழா நடைபெறுகின்றது. பத்தாம் நாள் நண்பகலில் மூவருக்கும் நடனக்காட்சி அருளும் ஐதீக விழா நடைபெறுகின்றது. மூவரையும் சிற்சபைக்கு முன்பாக எழுந்தருளுவித்து தீபாராதனை செய்து அவர்களுக்கு குஞ்சிதபாதத்தைச் சூட்டுகின்றனர்.

சிவபெருமானைப் பூஜிப்பவர்கள் யாவரும் சிவமாகவே போற்றப்படுகின்றனர். அவர்களை நடமாடும் சிவம் என்று சமய இலக்கியங்கள் கொண்டாடுகின்றன. தில்லையில் பூைஜ செய்யும் தில்லை மூவாயிரவர் சிவகணங்களாகவே திருஞானசம்பந்தருக்குத் தோற்றம் அளித்ததாக பழைய நூல்கள் கூறுகின்றன.

தில்லைப் பெருங்கோயிலில் சிற்சபையில் ஆறுகால பூஜைகளையும் மேற்கொண்டு நடத்தி வைக்கும் அர்ச்சகரை பூைஜ முறைக்காரர் என்று அழைக்கின்றனர். பூைஜ முறைக்காரரை குடை, தீவட்டி, சகிதமாக வீட்டில் இருந்து அழைத்து வந்து பூைஜகளை ஏற்கச் செய்வதுடன், பூைஜ முடிந்ததும், மேற்படி மரியாதையுடன் வீட்டில் திரும்பக் கொண்டு விடும் வழக்கம் இருந்து வந்துள்ளது.

முன்னாளில் பல்லக்கு பரிவாரத்துடன் பூைஜக்கு அழைப்பதும், பூைஜக்குப் பிறகு வீட்டிற்கொண்டு விடுவதுமாக இருந்ததைத் தில்லை மூவாயிரவர் வழியில் வந்த சித்தாந்த ஆசிரியரான உமாபதி சிவாச்சாரியாரின் வரலாற்றால் அறிய முடிகிறது. அர்த்தஜாமத்திற்குப் பிறகு முறைக்காரர் சண்டீசர் சந்நதிக்கு அருகில் நின்று விபூதி வழங்குவார். அதை பூஜை முறைக்காரர் விபூதி என்பர். நடராஜரே பூஜைக்காரர் வடிவில் இருந்து விபூதி வழங்குவதாகக் கருதுகின்றனர். இந்த விபூதி மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகின்றது.