முக்குளத்தில் நீராடுவோர் மகிழ்ச்சி நிறையப் பெறுவர்!



திருமுறைக் கதைகள்

நடு நாட்டில் பெண்ணாகடம் என்ற ஊர். அதில் ஏறக்குறைய எழுநூறு ஆண்டுளுக்கு முன்னால் அச்சுதக் களப்பாளர் என்ற வேளாளர் ஒருவர் இருந்தார். அவர் சைவசமயத்தைத் தழுவி வந்தவர். இறைவனிடம் மிகவும் பக்தி பூண்டவர். அவருக்கு நெடுநாட்களாக மக்கட் பேறு இல்லாததால் வருத்தமுற்று மிகவும் மனம் நொந்தார்.

பலர் சொன்ன யோசனைகளின்படி பலவகையான பரிகாரங்களைச் செய்ய நினைத்தார். ஆனால், அதற்குமுன் தம் குருவைச் சந்தித்து தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு அவர் ஆசியைப் பெற்று வேண்டுவன செய்ய எண்ணினார். அதன்படியே தம்முடைய குலகுருவாகிய  சகலாகம பண்டிதரிடம் போய் தம் குறை நீங்க வழிகாட்டுமாறு கேட்டுக்கொண்டார்.

அவர் உடனே தம்முடைய திருமுறைப் பாராயணத்தில் உள்ள தேவாரத்தை எடுத்து கயிறு சாத்திப் பார்த்தார். அந்தக் காலத்தில் நிலவி வந்த ஒரு ஜோதிட சாஸ்திர முறை இது. கிளி ஜோசியம்போல. ‘கயிறு சாத்திப் பார்த்தல்’ என்று சொல்வார்கள். அதாவது, தேவாரம் போன்ற நூலை எடுத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு, ஒரு கயிறை எடுத்து ஏதாவது ஒரு பக்கத்தில் செருக வேண்டும்.

கயிறு எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ அந்தப் பக்கத்தைப் பிரித்துப் படித்தால் இறைவன் அருளால், அந்தப் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் பாட்டின் மூலம் தீர்வு காணலாம். பொதுவாக இந்தவகை சாஸ்திரம் அனைவருக்குமே தெரியும் என்றாலும், இப்படி குரு ஸ்தானத்தில் உள்ளவர் மூலமாகத் தீர்வு காண்பது அப்போதைய வழக்கமாக இருந்தது. அவ்வாறு பார்த்ததில், ‘பேயடையா பிரிவெய்தும்’ என்ற தேவாரப் பாசுரம் கிடைத்தது.

அதில் ‘பிள்ளையினோடு உள்ள நினைவாயினவே வரம் பெறுவர்’ என்று இருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றார். அச்சுதக் களப்பாளருடைய குறையும் பிள்ளை இல்லை என்பதுதானே! அவர் குறைக்கு இறைவனே பரிகாரம் கொடுத்தது போல அந்தப் பாட்டு அமைந்திருந்தது. அதைக் கண்ட பண்டிதரும் இறைவன் திருவருளை நினைத்து அதிசயித்து, மகிழ்ந்து சொல்லொணாத ஆனந்தம் அடைந்தார்.

பின் திருவெண்காட்டுத் தலத்திற்குச் சென்று அங்குள்ள முக்குள நீரில் மூழ்கி, இறைவனை வழிபட்டுக் கொண்டு அங்கு சிலகாலம் தங்கும்படி களப்பாளரைப் பணித்தார். தன் குரு சொல்லியபடியே திருவெண்காடு சென்று யாவையும் செய்த களப்பாளர், தன் மனைவியுடன் ஊர் திரும்பினார்.

அந்நிகழ்ச்சிக்குப் பிறகு களப்பாளரின் மனைவி கருவுற்று, ஓர் ஆண் குழந்தையை ஈன்றாள். திருவெண்காட்டு  மூர்த்தியை வழிபட்டதன் பயனாகப் பிறந்த குழந்தையாதலால் அதற்குச் ‘சுவேதனப் பெருமாள்’ என்று நாமம் சூட்டி பெற்றோர்கள் குழந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். அந்தக் குழந்தையே பிற்காலத்தில் சிவஞானபோதம் என்னும் சைவ சாஸ்திர நூலை இயற்றி, சந்தானாசாரியர்களில் முதல்வராகத் திகழ்ந்த மெய்கண்டார் ஆவார்.

சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் யாவற்றிற்கும் மூலம், சிவஞானபோதம். அது பிறக்கக் காரணமூர்த்தியாக இருந்தவர் மெய்கண்டார். அவர் திருஅவதாரம் செய்ய உறுதுணையாக இருந்தது, ‘பேய் அடையா பிரிவு எய்தும்’ என்று தொடங்கும் ஒரு தேவாரப்பாடல். கண்ணாலே காட்சியைக் காண்பது மனித இயல்பு. அதைப் போன்றுதான் மற்ற புலன்களினூடே அந்தந்த நுகர்ச்சிகள் தெளிவுற அமைய வேண்டும் என்பது மனிதனின் ஆசை.

ஐம்பொறிகளின் நுகர்ச்சிகள் இறைவனோடு சார்ந்த எண்ணங்களையே எழுப்புவனவாக இருந்தால் அதைவிடப் பேரானந்தம் வேறு எங்கும் இல்லை என்று சொல்லலாம். அந்த இடம்தான் இறைவன் வீற்றிருக்கும் கோயில். திருக்கோயில்களில் கண்ணுக்கினிய சிற்பங்களையும், மலர் நிறைந்த வனங்களையும், விக்ரகங்களின் திருவுலாக் காட்சிகளையும், நாட்டியங்களையும் கண்டு களிக்கலாம்.

இனிய தெய்வீக இசைப்பாடல் களைக் கேட்கலாம். இறைவனுக்கு நிவேதனம் செய்த அறுசுவை உண்டிகளை வயிறார  உண்டு  ருசிக்கலாம். கோயில் குளங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடித் தண்ணிய தென்றலை அனுபவித்து இன்புறலாம். நறுமணம் மிக்க மலர்கள், தூபம் ஆகியவற்றின் மணத்தை ஆனந்தமாக நுகரலாம்.

இந்த ஆன்மிகச் சூழலால் தீய எண்ணங்களெல்லாம் நம்மைத் தீண்டாது ஒழிந்து, நாம் இறைவனைச் சார்ந்த எண்ணங்களிலேயே லயிக்கலாம். இத்தனைப் பயன்கள் கருதியே நம் நாட்டில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஆன்மிக வழிகாட்டல்கள் யாவும் அமைந்தன. ‘மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே’ என்கிறார் தாயுமானவர்.

சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்து விளங்கும் திருவெண்காடு, பழமையான தலங்களில் ஒன்று. அங்கே சோம தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் உள்ளன. அவற்றை முக்குளம் என்று சொல்வார்கள். புனிதமான அந்தத் தீர்த்தங்களில் மூழ்கி எழுந்தவர், தாம் நினைத்த பல பயன்களைப் பெறுவர் என்ற ஆழ்ந்த நம்பிக்கை நிலவி வருகிறது.

திருவெண்காட்டிற்கு ஒருமுறை  திருஞான சம்பந்தப் பெருமான் எழுந்தருளினார். அவரைப் பார்த்தவுடன் பல ஊர்களிலிருந்தும் வந்த பக்தர்கள் தங்கள் குறைகளை அவரிடம்  சொல்லி, தங்கள் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தனர். ஒரு பக்தர், ‘‘என்னுடைய மனைவியை நெடுநாட்களாகப் பேய் பிடித்திருக்கிறது.

ஒரு பெரியவர் வெண்காட்டு முக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடி சுவேதாரண்யேஸ்வரரையும், பிரும்மவித்தியா நாயகியையும் வழிபட்டால் சரியாகிவிடும் என்று சொன்னார். அவர் கூறியதை நம்பி இங்கே வந்து முக்குள நீரில் நீராடி இறைவனை வழிபட்டோம். பீடித்திருந்த பழைய தொல்லை நீங்கி இப்போது என் மனைவிக்கு யாதொரு குறையும் இன்றி, நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம். எல்லாம் இந்த இறைவன் செயல்.

நாற்பத்தெட்டு நாட்கள் எங்கள் சங்கல்பத்தை முடித்துக்கொள்ள எண்ணி இங்கு இதுவரை தங்கியிருக்கிறோம். தங்களைத் தரிசிக்கும் பாக்கியமும் எங்களுக்குக் கிடைத்தது,’’ என்று கூறி அவரும் அவர் மனைவியும், சம்பந்தப் பெருமான் காலில் விழுந்து வணங்கினர். திருஞானசம்பந்தர் சுற்றுமுற்றும்  பார்க்க, வேறு சில மகளிர் பேயாடுவதைக் கண்டு மனம் நொந்தார். மற்றோர் அன்பரைப் பார்த்து, ‘‘உங்கள் குறை என்ன? அது நிறைவேறிவிட்டதா? அல்லது நிறைவேறப் போகிறதா’’ என்று அன்புடன் கேட்டார் ஞானசம்பந்தர்.

அந்த அன்பர் ஒரு பெரும் பணக்காரர். பங்களா, நிலம் என்று ஏகப்பட்ட சொத்துக்கள். ஆனால், அதனால் பயன் என்ன? தனக்குப் பின் அதை அனுபவிப்பதற்குத் தனக்கு ஒரு வாரிசு இல்லையே என்ற ஏக்கம் அவரைத் தூங்கவிடாமல் செய்தது. தானங்கள் பல செய்தார். ஊர் ஊராகச் சென்று பல கோயில்களைத் தரிசித்துத் தவம் புரிந்தார்.

அவர் திருஞான சம்பந்தரைப் பார்த்து, ‘‘இங்கும் அங்கும் அலைந்து இறுதியில் திருவெண்காட்டுக்கு என் மனைவியுடன் வந்து முக்குள நீரில் மூழ்கி சிலகாலம் இருந்து இறைவன் இறைவியைத் தரிசித்துச் சென்றோம். நாங்கள் ஊர் சென்ற ஓராண்டிலேயே என் மனைவி கருவுற்று, எங்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

அதற்கு ‘வெண்காடன்’ என்று பெயரிட்டோம். அந்தக்  குழந்தைக்கு இப்போது ஓராண்டு நிரம்பிவிட்டது. அதனால் இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில் அக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு இப்போது இறைவன் தரிசனத்துக்காக இங்கு வந்திருக்கிறோம். குழந்தை செய்த பாக்கியம், தங்களையும் வணங்குவதற்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தது,” என்று மகிழ்ந்து சொன்னார். இந்தச் செய்தியைக் கேட்டு தம்பதிகளையும், குழந்தையையும் வாழ்த்தி ஆசி கூறினார் திருஞான சம்பந்தர். அடுத்து நிற்பவரின் குறை கேட்டார்.

“எனக்கு வெகு நாட்களாக, தீராத நோய் ஒன்று ஆட்டி வைத்தது. நம்பிக்கையுடன் நாமும் முக்குளம் சென்று நீராடி, இறைவனைத் தொழலாமே என்று எண்ணினேன். இங்கு வந்து சிலகாலம் தங்கி நீராடினேன். என்ன ஆச்சரியம்! எனக்கு இருந்த நோய் முற்றிலும் மறைந்துவிட்டது,’’ என்று வியப்பு மிக கூறினார். யாவற்றையும் கேட்டு அக மகிழ்ந்தார் ஞானி.

இவ்வாறே ஒருவர் தன் மகளுக்கு  வெகுநாட்களாகத் தக்க வரன் தேடித் திண்டாடிக்கொண்டிருந்தார். முக்குளத்தில் நீராடியதின் பலன் சீக்கிரமே  நல்ல மாப்பிள்ளை கிடைத்து நல்ல முறையில் திருமணம் நடந்தேறியது என்று அவரும், வறுமை நீங்கிச்  செல்வம் பெற்றோம் என்று சிலரும், காணாமற்போன உறவினர் கிடைத்தார் என்று ஒருவரும், தாம் வேண்டிய கல்வித்துறையில் புலமை பெற்றோம் என்று சிலரும், மேன் மேலும் கல்வியில் வளம் பெற வேண்டும் என்று தொழுதாரும்.... என பலர் தங்கள் கதைகளை திருஞான சம்பந்தரிடம் தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றனர்.

அன்பர்களைச் சந்தித்து  இவ்வளவு நேரம் அவர்களுடைய ஆனந்தமான அனுபவங்களைக் கேட்ட திருஞான சம்பந்தர் அவர்கள் பாவம் போக்கி நினைத்தவற்றையெல்லாம் அருளும் முக்குளத்தையும், திருவெண்காட்டு அப்பனையும் கண்டு உருகி நின்றார். தாம் கண்டவற்றையும், கேட்டவற்றையும் தாம் பாடிய பதிகங்களில் இணைத்து மகிழ்ச்சியுற விரும்பினார்.  வந்தது, ஒரு பாடல்:

பேயடையா பிரிவு எய்தும்
பிள்ளையினோடு  உள்ள நினைவு
ஆயினவே வரம்பெறுவர்
ஐயுறவேண் டாஒன்றும்
வேயனதோள் உமைபங்கன்
வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார்அவர்தம்மைத்
தோயாவாம் தீவினையே
(இரண்டாம் திருமுறை, திருவெண்காடு, பாடல் -2)

பொருள்:- மூங்கிலைப்போல வழுவழுப்பும், பசுமை நிறமும் கொண்ட தோள்களைப் பெற்ற உமாதேவியைத் தன் பங்கிலே வைத்தருளும் இறைவனுக்குரிய திருத்தலமாகிய திருவெண்காட்டில் உள்ள முக்குள நீரில் தோய்ந்து ஆடும் செயலுடையாரைத் தீய செயல்கள் சாராது. அவர்களைப் பேய்கள் அண்டாது. முன்பே அடைந்திருந்தாலும், அவை பிரிந்து நீங்கி விடும். பிள்ளை வேண்டுமென்றால் அதனையும், அதனோடு மனத்தில் வேறு எவற்றை நினைத்தார்களோ  அவற்றையும் பெறுவர். இவற்றை அடைவது பற்றி சிறிதும் ஐயுற வேண்டாம்.

-உமா பாலசுப்ரமணியன்