மன உபாதைக்கு இறைத்துவம்!
எந்த வயதிலும் உடல் உபாதையை அனுபவிக்கவேண்டியது என்பது நம் வாழ்க்கை முறையாகிவிட்டது. உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் பொறுப்புதான் என்றாலும், எத்தனையோ காரணங்களால் உடல் நலிவு ஏற்பட்டுவிடுகிறது. சிறுவயதில் ஏற்படக்கூடிய நோய்களைத் தீர்த்துவைக்க பெற்றோர், பெரியவர்கள் நமக்குத் துணையாக இருக்கிறார்கள்.
இளவயதில் ஏற்படும் உபாதைகளுக்குத் தீர்வு காண நாமே உரிய மருத்துவரைப் போய்ப் பார்த்துவிடுகிறோம். நடுத்தர வயது அல்லது அதைக் கடந்த பருவத்தில், நமக்கு ஏற்பட்டது போன்ற உடல் நலக் குறைவை ஏற்கெனவே அனுபவித்திருக்கக்கூடிய நண்பர்கள், உறவினர்களின் ஆலோசனை நமக்குக் கிடைக்கிறது. முதுமைக் காலத்தில் நம் வீட்டிலிருப்போர், அக்கம் பக்கத்தார், பிற உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் நமக்கு உதவ முன்வரலாம்.
உடல் சரி, உள்ளம்? மனசு கெட்டுப்போவதற்குப் பலரும் காரணமாக இருப்பார்கள். ஆனால் உடல் உபாதைக்கு உதவ முன்வருவதுபோல கெட்டுப்போய்த் தடுமாறும் மனசுக்கு உதவ யார் வருவார்கள்?ஒருவர்தான் வருவார் - இறைவன். நாம் செய்த தவறுக்கு, அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் போய் மன்னிப்பு கேட்க நம் குற்ற உணர்வு தடுத்தாலும், இறைவனிடம் நம் மனதை நேர்ப்படுத்துமாறு முறையிட்டுக்கொள்ளலாம். ‘நடந்ததெல்லாம் நல்லதாகவே நடந்தது’ என்று பெரியவர்கள் ஏன் சொன்னார்கள்? நம்மால் ‘நடந்த’ சில விஷயங்கள் பலருக்கும் பாதமாக அமைந்திருக்கக்கூடு்மே, இது எப்படி நல்லதாகவே நடந்ததாகக் கொள்ள முடியும்? அந்தக் கசப்பான சம்பவங்களின் பின்விளைவுகளைப் பார்த்து வருந்தும் நாம், ‘இனி இப்படி ஓர் எண்ணம் கொள்ளமாட்டேன், சொல்லைச் சொல்லமாட்டேன், செயலைச் செய்யமாட்டேன்’ என்று மனமுருக தீர்மானித்துக்கொள்கிறோமே, அதுதான் பெரியவர்கள் குறிப்பிடும் ‘நல்லதாக நடந்தவை!’ இதனுடைய தொடர்ச்சிதான் ‘நடப்பவை எல்லாம் நல்லதாகவே நடக்கின்றன, நடக்கப்போகிறவை எல்லாம் நல்லதாகவே நடக்கும்’ என்பது. இந்த மனப்பக்குவத்தை நமக்கு ஊட்டுபவர் யார்? நிச்சயம் உடன் புழங்கும் மனிதர்கள் அல்ல; இறைவன்தான்! உடல் உபாதைக்கு மருத்துவம் என்றால் மன உபாதைக்கு இறைத்துவம்!
பிரபுசங்கர் (பொறுப்பாசிரியர்)
|