சந்தான பாக்கியம் தரும் சஷ்டி விரதம்!



சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் குழந்தைப் பேறுக்காக ஏங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்பதைத்தான் ‘சட்டியில் (சஷ்டியில்) இருந்தால் அகப்பையில் (கருப்பையில்) வரும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். சஷ்டி விரதம் என்றால் மாதாமாதம் வரக்கூடிய திதி நாளா அல்லது ஐப்பசி மாதம் தீபாவளியன்று வரும் கந்த சஷ்டியா?

ஐப்பசி மாத கந்த சஷ்டியின்போது விரதம் இருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. ஆனால், ஐப்பசி வரை காத்திருக்காமல் ஒவ்வொரு மாதமும் சஷ்டி விரதத்தைக் கடைபிடிக்கலாம். முருகன் அருளால் கர்ப்பப்பையில் கரு வளர, உடனே அந்த விரதத்தை மேற்கொள்வதும் சரிதானே?

சூரபத்மன் மிகக் கொடுமையான ஓர் அரக்கன். மூவுலகத்தோரையும் மிரட்டி, உருட்டி, அதட்டி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்தான். அவனுக்கு பயந்து ஒதுங்கிப் பணிந்தவர்கள் எல்லாம் தொடர்ந்து அப்படி பணிந்துகொண்டேயிருக்க, அவர்களுடைய பலவீனத்தைத் தன்னோட வெற்றியாக நினைத்து குரூரமாக சந்தோஷப்பட்டான் சூரபத்மன். மேலும் மேலும் அவர்களைத் துன்புறுத்தி மகிழ்ந்தான்.

அவனுடைய அக்கிரமத்தையும், அதனால் அவன் அடையும் அல்ப சந்தோஷத்தையும் பார்த்த பிற அரக்கர்கள், தாமும் ஏன் அவனைப்போலவே நடந்துகொள்ளக்கூடாது என்று யோசித்து அவர்களும் எதிர்ப்பட்ட முனிவர்களையும், பொது மக்களையும் கொடுமைப்படுத்தினர். அப்படி அடிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவன் ஜயந்தன். இவன் இந்திரனுடைய மகன். தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் மகனையே அரக்கர்கள் சிறைப்பிடித்துப் போனது கொடுமையின் உச்சம்.

அதோடு இந்திரனின் மனைவி இந்திராணியையும் விரட்ட, அவள், சூரபத்மனுக்கு பயந்து எங்கேயோ போய் ஒளிந்துகொண்டாள். தேவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தித் தன் சர்வாதிகார சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினான் சூரபத்மன். அவன் செய்வதை தப்புன்னு சொல்றதுக்கோ, அவனை எதிர்ப்பதற்கோ யாருக்கும் தைரியமில்லை. அப்பாவிகளின் துயரத்தைப் போக்க வேல் முருகன் முன்வந்தார். அவன் தன் தவறுக்கு வருந்துகிறானா என்பதை அறிய, தன்னுடைய தளபதி வீரபாகுவை அவனிடம் தூது அனுப்பினார்.

சூரபத்மன் பிடித்துவைத்திருப்பவர்களையெல்லாம் அவன் விடுதலை செய்தானானால் சமாதானமாகப் போய்விடலாம் என்று சொல்லி அனுப்பினார். ஆனால், சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தப்போன வீரபாகுவை சூரபத்மனுடைய ஆட்கள் தடுத்தார்கள். அவன் சொல்ல வந்தது எதையும் கேட்காமல், அவனைத் தாக்க ஆரம்பித்தார்கள்.

ஆகவே தன்னைக் காத்துக்கொள்வதற்கும், சூரபத்மனிடம் நேரடியாக முருகன் சொல்லியனுப்பிய தகவலைச் சொல்வதற்கும் இடையூறாக இருந்த அரக்கர்கள் சிலரை அவன் திருப்பித்தாக்க வேண்டியதாயிற்று. அதனால், பல அரக்கர்கள் மடிந்தனர். ஆனால், சூரபத்மன் கொஞ்சமும் இறங்கி வரவில்லை. யாரையும் விடுவிக்க முடியாது, மன்னிப்பும் கேட்கமுடியாது என்று இறுமாப்பாகச் சொல்லிவிட்டான். ஜயந்தன் மட்டுமல்ல, இந்திரன், இந்திராணி இருவரையும் விரைவில் சிறைபிடிப்பேன் என்றும் கொக்கரித்தான்.

சாத்வீகமாகப் போனால் இவன் சரிப்பட்டு வரமாட்டான் என்று தெரிந்துகொண்ட வீரபாகு, முருகனிடம் வந்து விவரம் சொன்னான். இனிமேலும் பொறுப்பதில்லை என்று முருகன் தீர்மானித்தார். தன் வீரர்களை அழைத்துக்கொண்டு சூரபத்மனை பந்தாடப் போனார். ஆனால், முருகனைப் பார்த்தால் சண்டை போடும் குணமுடையவனாகவே தெரியமாட்டார். அழகான குழந்தை முகம், சாந்தமான அழகான புன்னகை. இந்த மலருக்கும் கோபம் வருமா என்றுதான் பார்ப்போருக்குத் தோன்றும்.

அக்கிரமங்கள் அடுக்கடுக்காகப் பெருகிக்கொண்டே போகும்போது பூக்களும் புயலாவதுதானே வழக்கம்? ஆனால், சூரபத்மனும், அவனைச் சேர்ந்தவர்களும் முருகனை ஒன்றும் தெரியாத பாலகன் என்றுதான் தவறாக மதிப்பிட்டார்கள். ஆனால், அவர்களுடைய நினைப்பெல்லாம் தவிடுபொடியாவதுபோல துர்க்குணன், தருமகோபன், சண்டன் ஆகிய அரக்கர்களையும், சூரபத்மனுடைய  பிள்ளைகளான பானுகோபன், இரணியன் ஆகியோரையும், அவனுடைய தம்பிகளான அக்கினி முகன், சிங்கமுகாசுரன்னு என்று எல்லோரையும் முருகன் பந்தாடிக் கொன்றான்.

தன்னைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் இழந்தும் சூரபத்மனுக்கு முருகனின் பராக்கிரமம் புரியவில்லை. இன்னும் கோபம் அதிகமாயிற்று. முருகனைப் பார்த்து அலட்சியமாக சிரித்தான். இந்தப் பொடியனோடு சண்டை போடுவது தன்னுடைய பராக்கிரமத்துக்கே இழுக்கு என்று கர்வப்பட்டான். ஆனால், போகப்போக குமரனுடைய ஆற்றலைப் பார்த்த சூரபத்மன் திகைத்தான். அவரை எதிர்ப்பது தனக்குப் பேராபத்தாகத்தான் முடியும் என்பதை உணர்ந்த அவன் உடனே மாயமாக மறைந்துவிட்டான்.

தனக்குக் கிடைத்திருந்த அபூர்வ சக்தியால் யார் கண்ணிற்கும் தெரியாதபடி மறைந்தபடி போரிட்டான் அவன். ஆனால், எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி மாயப்போர் புரிய முடியும்? சக்கரவாகப்பட்சியாக, பெரிய பூமி உருண்டையாக, மும்மூர்த்திகளாக, தேவர்களாக, அசுரர்களாக, கூற்றுவனாக, இறந்த தன் பிள்ளைகள், தம்பிகள் என்று பலவாறாக மாய உருவம் கொண்டு முருகனை எதிர்த்தான். ஆனாலும் புன்னகை மாறாமல் அப்படி புதிதுபுதிதாகத் தோன்றிய சூரபத்மனுடைய எல்லா உருவங்களையும் அழித்து ஒழித்தான்.

இறுதியாக சூரபத்மன் மாமரமாக மாறி கடலிலிருந்து பிரமாண்டமாக எழுந்து, முருகவேளை எதிர்த்தான். அவனை தன் முயற்சிகளால் மட்டும் வெல்ல முடியாது என்று தோன்றியது முருகனுக்கு. உடனே, (இப்போதைய நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள) சிக்கல் என்ற தலத்துக்குப் போய் அங்கே கோயில் கொண்டிருந்த தன் தாயான அம்பிகையிடமிருந்து ஒரு வேலை வாங்கி வந்தார்.

இன்றைக்கும் சிக்கல் தலத்தில் உற்சவத்தின்போது, தாயிடமிருந்து வேல்வாங்கும் முருகன் விக்கிரகத்தின் முகத்தில் வியர்வை அரும்புவதைப் பரவசத்துடன் காணலாம்! அந்த சூரசம்ஹார உற்சவத்தின்போது அப்படி முருகன் விக்கிரகத்தின் முகத்தில் துளிர்க்கும் வியர்வையைத் துடைத்துவிடுவதற்கென்றே ஒரு அர்ச்சகர் துணியோட காத்திருப்பார்!

தாயாரிடமிருந்து வாங்கி வந்த சக்தி வேலை எடுத்து சூரபத்மனை நோக்கி எறிந்தார் முருகன். அது அசுரனை நேரடியாகத் தாக்கி அவனை இருகூறுகளாகப் பிளந்தது. மாய்ந்து வீழ்ந்தான் அரக்கன். ஆனால், அந்தக் கொடிய அரக்கனுக்கும் நற்கதி தந்தார், முருகன். மாமரமாகத் தோன்றிய அவனை இருகூறுகளாகப் பிளந்து, அவற்றில் ஒன்றைத் தன் சேவற்கொடியாகவும், இன்னொன்றை மயில் வாகனமாகவும் மாற்றித் தன்னுடனேயே இருத்திக் கொண்டார்.

இந்த சூரசம்ஹாரம் நடந்தது திருச்செந்தூரில். இப்போதும் ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இந்த சூரசம்ஹார சம்பவத்தை நடத்திக் காட்டுகிறார்கள். பொதுவாகவே இந்த சூரசம்ஹார வைபவம் உலகத்திலுள்ள எல்லா முருகன் கோயில்களிலும் கொண்டாடப் படுகிறது.

சரி, கந்த சஷ்டி விரதத்தை எப்படி மேற்கொள்வது?
ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி ஆரம்பிக்கும் நாளிலிருந்தே விரதத்தை ஆரம்பிக்கலாம். கந்த சஷ்டி முடிவில், சூரசம்ஹார தினத்தன்று விரதத்தை முடித்துவிடலாம். மொத்தம் ஆறு நாட்கள். ஆறுமுகன் விரதத்துக்கு ஆறு நாட்கள்! அந்த ஆறு நாட்களும் ஆறுமுகனைத் துதித்து உபவாசம் மேற்கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பால், பழம் என்று மட்டும் உட்கொண்டு, ஆறாம் நாள் முழு உபவாசம் இருக்கலாம்.

இந்த காலத்தில் பொதுவாக இப்படி உபவாசம் இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆகவே ஆறாம் நாள், சூரசம்ஹாரம் அன்றாவது முழு உபவாசம் இருப்பது நல்லது. ஆனால், கந்த சஷ்டி ஆரம்பிக்கும் நாளிலிருந்து அதாவது, வளர்பிறை பிரதமை திதியிலிருந்து தினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தலைக்குக் குளித்துவிட்டு மூச்சிழையாக முருகன் நாமத்தை ஜபித்துக்கொண்டே இருப்பது நல்லது.

இந்த ஆறு நாட்களும் தினமும் பக்கத்தில் இருக்கும் முருகன் கோயிலுக்குப் போய்வரலாம். தினமும் வீட்டு பூஜையறையில் முடிந்த உணவுப் பொருட்களை முருகனுக்கு நைவேத்யமாகப் படைக்கலாம். அதேபோல் பக்கத்து முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் மற்றும் முருகன் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முருகன் அருளைப் பெறலாம்...’’ சிலர் இந்த கந்த சஷ்டி நாட்களில் சில பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதும் உண்டு.

குறிப்பிட்ட  ஒரு முருகன் கோயிலுக்கு போவதற்கும், அங்கே காவடி எடுக்கவும், மொட்டை போட்டுக்கொள்வதாகவும் வேண்டிக்கொண்டு அப்படியே செய்வார்கள். இன்னொன்றையும் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். அதாவது, இந்த ஆறு நாட்களும் தினமும் அதிகாலையில் குளித்து முடித்தபிறகு, பூஜையறையில் அறுகோண கோலம் வரைந்து, ஒவ்வொரு முனையிலேயும் ‘ச-ர-வ-ண-ப-வ’என்ற சடாட்சர மந்திர எழுத்துகளை எழுதி பிரார்த்தனை செய்யலாம்.

அறுகோண கோலம் என்பது ஆறு முனை கொண்ட நட்சத்திரக் கோலம். நடுவில் ஒரு வட்டம் போட்டு, அதிலிருந்து ஆறு கூம்புகள் வெளியே நீட்டியிருப்பதுபோல வரைந்துகொள்ளலாம். பொதுவாக இதை அவரவர் குடும்ப வழக்கப்படி வரைந்துகொள்வது நல்லது அல்லது ஆன்மிகப் புத்தகக் கடைகளில் பூஜையறைக் கோலங்கள் என்றே புத்தகம் கிடைக்கும். அதைப் பார்த்தும் வரையலாம்.

முக்கியமாக, குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இந்த விரதம் சிறப்பானது. இந்த குறிப்பிட்ட காலத்தில் அதாவது மழையும், குளிருமாக இருக்கக்கூடிய காலத்தில் இப்படி உபவாசம் இருந்து முருகன் நாமத்தையே உள்ளார்ந்த பக்தியோடு ஜபித்துக்கொண்டிருந்தால் அந்த ஒலியலைகளும் சேர்ந்து ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்கு வழி செய்யும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.

தம்பதி சமேதராக இந்த விரதத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது, ஏக்கம் தீர்ந்து குழந்தை பாக்கியமும் கிடைத்ததென்றால் அடுத்த கந்த சஷ்டியின்போது மறுபடி உபவாசம் இருந்து முருகனுக்கு நன்றி தெரிவிக்க மறக்கக்கூடாது! கந்த சஷ்டி மட்டும் என்றில்லாமல் ஒவ்வொரு மாத சஷ்டி திதியன்றும் இவ்வாறு உபவாசமும் விரதமும் மேற்கொள்ளலாம், பயன் பெறலாம்.

கீழ்க்காணும் துதியை கந்தசஷ்டி ஆறுநாட்களிலும், ஒவ்வொரு மாத சஷ்டி நாளன்றும் பாராயணம் செய்தால் முருகப்பெருமானின் திருவருள் முழுமையாகக் கிட்டும்.

மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்
மனோஹாரி தேஹம் மஹத்சித்தகேஹம்
மஹீதேவதேவம் மஹாவேதபாவம்
மஹாதேவபாலம் பஜே லோகபாலம்

பொதுப்பொருள்: மயில் வாகனத்தில் ஆரோகணித்திருப்பவரே, ஓம் என்னும் பிரணவத்தின் உட்பொருளானவரே, மனதைக் கவரும் வண்ணம் ஒளிபொருந்திய தேகம் கொண்டவரே, சுப்ரமண்யா, நமஸ்காரம். மகான்களின் இதயத்தை வீடாகக் கொண்டவரே, பூதேவர்களான வேதவித்துக்களால் உபாசிக்கப்படுபவரே, உபநிஷத்துக்களின் பொருளும், பரமசிவனின் புத்திரனும் ஆனவரே, உலகங்களைக் காப்பவரே, சுப்ரமண்யா, நமஸ்காரம். முடிந்தால் திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். இயலாதவர்கள் பக்கத்துக் கோயிலில் முருகனை வழிபடலாம்.