விரும்பியன எல்லாம் தரும் வெள்ளிக்கிழமை விரதம்!



ஒருசமயம் வைகுண்டத்தில் மஹாவிஷ்ணு பாம்பணையில் படுத்திருந்தார். மஹாலக்ஷ்மி அவருடைய கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்தாள். அப்போது லக்ஷ்மிக்கு ஒரு சந்தேகம் வந்தது. படைப்பால் மனிதர்கள் எல்லோரும் சமம்தானே; அப்படியிருக்க, அவர்களுக்கிடையே ஏன் ஏற்றத்தாழ்வு? படிப்பில், பொருளாதாரத்தில் வாழ்க்கை முறையில் என்று எல்லாவற்றிலும் வித்தியாசம் இருக்கிறதே ஏன்?

தான் செல்வத்துக்கு அதிபதியாக இருந்தும், மக்களுக்குப் பொதுவாக, எல்லோரும் ஒரே மாதிரியாக அனுபவிக்கும் வகையில் செல்வம் போய்ச் சேரவில்லையே என்ற ஆதங்கம் இருக்காதா? ஒரு உண்மையான தாயார் தன்னுடைய எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரிதானே பாவிப்பாள்? பாரபட்சம் என்னிடமிருந்தே ஆரம்பிக்கிறதே, அது எந்த வகையில் நியாயம்? தன்னுடைய இந்த சந்தேகத்தைப் பரந்தாமனிடமே கேட்டாள்; விளக்கம் சொல்லச் சொன்னாள்.

‘மனிதர்கள் எல்லோரும் ஒரேமாதிரியாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவரவருக்கென்று முன்வினைப் பயன் என்று உள்ளது. அதற்கேற்றார்போலத்தான் இந்த ஜென்மத்தில் அவர்களுடைய வாழ்க்கை அமையும்’ என்று பதிலளித்தார் மஹாவிஷ்ணு. அதேசமயம், அவர்கள் நல்ல ஒழுக்கங்களை மேற்கொண்டு, நல்லதையே நினைத்து, நல்ல செயல்களை மட்டுமே செய்துவந்தால், அவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

எல்லோரும் நல்லதையே நினைத்து, நல்லதையே செய்யவேண்டுமென்றால், அப்படி அவர்கள் செய்வதற்கு வழிகாட்ட வேண்டியதும் நம்முடைய பொறுப்புதானே?’ என்று மஹாலக்ஷ்மி கேட்டாள். அதற்கு மஹாவிஷ்ணு, ‘அதுவும் உன் கையில்தான் இருக்கிறது’ என்று சொன்னார். ‘ஒருவருக்கு எல்லா நலன்களும் கிடைக்கவேண்டுமென்றால், அவருக்கு லக்ஷ்மி கடாட்சம் இருக்க வேண்டும்.

அதாவது, உன்னுடைய அருட்பார்வை. இந்த கடாட்சம் பெறுவதற்கு அவர்கள் சில விஷயங்களைக் கடைப்பிடிக்கிறவர்களாக இருத்தல் வேண்டும்,’ என்றார். ‘அப்படி என்னென்ன விஷயங்களை அவர்கள் கடைப்பிடிக்கவேண்டும்?’ - லக்ஷ்மி கேட்டாள். ‘அதையும் நீயே நேரில் போய்ப் பார்த்துவிட்டு வாயேன். நீ வாசம் செய்ய வேண்டிய இடம் எது என்று உனக்கே புரியும். அப்படிப்பட்ட இடங்களில் இருப்பவர்களுக்கு நீயே ஆசியும் அருளும் வழங்கிவிட்டு வா’ என்று சொல்லியனுப்பினார்.

பூலோகத்துக்கு வந்த லக்ஷ்மிக்கு அங்கு வசிக்கும் எல்லோர் வீடுகளுமே, தான் தங்கத் தகுதியான இடம்தான் என்று நினைத்திருந்தாள். ஆனால், அவளுக்கு ஏமாற்றம்தான் பதிலாக அமைந்தது. ஆமாம். விடிந்து வெகு நேரமாகியும்கூட பெரும்பாலான வீடுகளில் வாசல் தெளிக்கப்படவில்லை. வீட்டுக்கு வெளியேதான் இப்படி என்றால், வீட்டுக்குள்ளேயும் ஒவ்வொரு அறையும் குப்பையும் கூளமுமாக இருந்தன. அதைப் பார்த்ததுமே முகம் சுளித்தாள் லக்ஷ்மி.

அந்த வீடுகளுக்குள் போகவே பிடிக்கவில்லை அவளுக்கு. பெருத்த மனவேதனையுடன் தெரு வழியே போய்க் கொண்டிருந்த அவள், ஒரு வீட்டு வாசலில் பளிச்சென்று அழகாகக் கோலம் போடப்பட்டிருந்ததைக் கண்டாள். பசுஞ்சாணம் கரைக்கப்பட்ட நீரால் அந்த வீட்டு வாசல் மெழுகப்பட்டிருந்தது. அதில் அழகான கோலம். அதற்கு செம்மண்ணால் ஓரங்கள் வரையப்பட்டிருந்தன. மிகவும் மங்களகரமாகத் தெரிந்த அந்த வீட்டைப் பார்த்ததுமே லக்ஷ்மிக்கு உடனே பிடித்துப் போயிற்று.

சந்தோஷத்தோடு அந்த வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள். வீட்டுக்குள்ளேயும் சுத்தம் ஒளிர்ந்தது. சிறிய வீடுதான் என்றாலும் சுத்தமாகப் பெருக்கி குப்பைகள் முழுமையாகக் களையப்பட்டிருந்தன. வீட்டில் வசிப்பவர்களுடைய தேவைக்கு மட்டுமான பொருட்களை வாங்கி வைத்திருந்ததால் அடைசல் இல்லை. அந்த சில பொருட்களையும் அப்போதுதான் புதிதாக வாங்கியவைபோல பளிச்சென்று துடைத்து வைத்திருந்தார்கள். அந்த வீட்டை அவ்வளவு தூய்மையாக வைத்திருந்த வீட்டுப் பெண்மணியின் பெயர், சோமதேவம்மா.

தன் கணவர் பிைக்ஷ எடுத்துக் கொண்டு வரும் பொருட்களை வைத்து, மிக நல்ல மாதிரியாகக் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தாள் அவள். லக்ஷ்மி தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் வாயிலில் நின்றபடியே குரல் கொடுத்தாள். தன் பசிக்கு ஏதாவது தரும்படி கேட்டாள். வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த சோமதேவம்மா, லக்ஷ்மியை வீட்டுக்குள் வரச்சொன்னாள். தன் கணவர் பிைக்ஷ எடுத்துக்கொண்டு வரும் பொருட்களை வைத்து அவளுக்கு உணவு தயாரித்துத் தருவதாகச் சொன்னாள்.

அவளுடைய உபசரணை லக்ஷ்மியைப் பெரிதும் கவர்ந்தது. தான் வறுமையில் உழன்றாலும் தன்னைக் காத்திருக்கச் சொல்லி, உணவளிப்பதாகவும் சொல்கிறாளே இந்தப் பெண் என்று சந்தோஷப்பட்டாள். வெகு எளிதாக, ‘எதுவும் இல்லே, போ,’ என்று சொல்லி விரட்டியிருக்கலாம். ஆனால், அவள் அப்படிச் செய்யவில்லை. அதனால் சோமதேவம்மாவுக்கு தன்னுடைய முழு கருணையையும் அருளவேண்டும் என்று நினைத்தாள். 

லக்ஷ்மி எங்கே தங்குகிறாளோ, அங்கெல்லாம் சுபிட்சம் பொங்கும், சகல ஐஸ்வர்யங்களும் நிறையும். ஆனால் லக்ஷ்மி உடனே அப்படி எல்லாவற்றையும் அப்போதே, ஒரேயடியாக அனுக்ரகித்துவிடவில்லை. வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அந்த விரத மகிமையால் அவளுக்கு எல்லா வசதிகளும் கிடைப்பதுதான் முறை என்று லக்ஷ்மிக்குத் தோன்றியது. அதனால் சோமதேவம்மாவின் கணவர் வரும்வரை, அவளுக்கு அந்த விரதம் கடைப்பிடிக்கும்  முறையைச் சொல்லிக் கொடுத்தாள்.

பிறகு கணவர் வந்தப் பிறகு அவர் பிைக்ஷ எடுத்துக் கொண்டு வந்திருந்த பொருட்களில் தயாரித்தளிக்கப்பட்ட எளிமையான உணவை உட்கொண்டு சந்தோஷத்துடன் விடைபெற்றுக் கொண்டாள் லக்ஷ்மி. சோமதேவம்மா, லக்ஷ்மி தனக்குச் சொல்லிக்கொடுத்த விரதம் பற்றி கணவரிடம் விவரித்து அடுத்த வெள்ளிக்கிழமையே தான் அந்த விரதத்தை மேற்கொள்ளப்போவதாகச் சொல்லி அப்படியே கடைப்பிடித்தாள்.

அந்த விரதத்தின்போது மஹாலக்ஷ்மியே ஒரு சுமங்கலிப் பெண்ணாக வந்திருந்து, சோமதேவம்மா கொடுத்த மஞ்சள், குங்குமம், தாம்பூல பிரசாதத்தை அன்போடு வாங்கிக்கொண்டாள். விரதத்தின் பலனாக, சோமதேவம்மாவின் குடும்பத்தில் வளம் கூடியது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றபடி, தனக்குக் கிடைத்த இந்த நற்பலன்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பி, அக்கம்பக்கத்துப் பெண்களுக்கும் அந்த விரதம் பற்றிச் சொல்லி, அவர்களும் பயனடையும்படி செய்தாள் சோமதேவம்மா. சரி, இந்த வெள்ளிக்கிழமை விரதத்தை எப்படி அனுஷ்டிப்பது?

ஏதாவது ஒரு தமிழ் மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது நான்காவது வெள்ளிக்கிழமையன்று விரதம் மேற்கொள்ளலாம். அன்று விடியற்காலையிலேயே எழுந்து, மஞ்சள் பூசி குளித்துவிட்டு (விரும்பாதவர்கள் மஞ்சளை விட்டுவிடலாம்) நெற்றியிலே குங்குமப் பொட்டு வைத்துக்கொள்ளுங்கள். பசுஞ்சாணம் கரைத்த நீரால் வாசல் தெளியுங்க. ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் சுத்தமான நீரை கொஞ்சமாகத் தெளித்து, வழுக்கிவிடாதபடி துடைத்துவிட்டு, அதன்மேல் அழகாக ஒரு கோலம் போட்டு, அதுக்கு செம்மண் பார்டர் போடலாம்.

வீடு முழுவதும் பெருக்கி, துடைத்து சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.  பூஜையறையையும் சுத்தமாக்கி தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே தீபம் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்தி வைக்கலாம். சாம்பிராணிப் புகை போடலாம். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி அழகுபடுத்தலாம். ஒட்டுமொத்தமாக வீடு முழுவதும்  அன்றைக்குப் பளிச்சென்று இருப்பது நல்லது. அன்று முழுவதும் மஹாலக்ஷ்மி ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம் அல்லது ஆடியோ ஸிடி போட்டுக் கேட்கலாம்.

லக்ஷ்மி ஸ்லோகங்கள் மட்டுமில்லாமல், தெரிந்த அம்பாள் பாடல்களையும் சொல்லலாம். அன்று முழுவதும் எளிமையாக பால், பழம் என்று மட்டும் சாப்பிட்டு விரதமிருக்கலாம். முடியாதவர்கள் அல்லது அவரவர் உடல்நலத்தைப் பொறுத்து பகலில் ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்ளலாம். இப்படி விரதம் மேற்கொண்டபிறகு தொடர்ந்து பதினோரு வெள்ளிக்கிழமைகளில் கடைபிடிக்கலாம். நடுவே ஏதேனும் காரணத்துக்காக ஏதாவதொரு வெள்ளிக்கிழமை முடியாமப் போனால், அதற்கடுத்த வெள்ளிக்கிழமையிலேர்ந்து தொடரலாம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நேரத்தில் பக்கத்துப் பெருமாள் கோயிலில் தாயாரை தரிசிப்பது முக்கியம். இதை முதல் வெள்ளிக்கிழமை விரதத்தன்றாவது செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் வந்தபிறகு, முடிந்த பிரசாதங்களை (சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி மாதிரி) தயாரித்து, வீட்டு பூஜையறையில் மஹாலக்ஷ்மிக்கு நிவேதனம் செய்யுங்கள். அவரவர் வசதிகேற்ப சுமங்கலிகளை அழைத்து, அவங்களுக்கு குங்குமம், மஞ்சள், பூ, பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துணி என்று அளிக்கலாம்.

இதே மாதிரி பதினொரு வெள்ளிக்கிழமைக்கும் செய்தால் நல்லது. சில குடும்பங்களில் பரம்பரை வழக்கப்படி எல்லா வெள்ளிக்கிழமைகளிலேயும் இந்த விரதத்தை அனுசரிப்பதுண்டு. கீழ்க்காணும் ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமை விரதத்தன்று சொல்லி வரலாம்.

நம: கமலவாஸின்யை, நாராயண்யை நமோ நமஹ
க்ருஷ்ண ப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ
வைகுண்டே யா மஹாலக்ஷ்மீ: யா லக்ஷ்மீ: க்ஷீரஸாகரே
ஸ்வர்க்க லக்ஷ்மீ ரிந்த்ரகேஹே, ராஜலக்ஷ்மீ: ந்ருபாலயே
க்ருஹலக்ஷ்மீஸ்ச க்ருஹிணாம், கேஹே சக்ருஹதேவதா
இதம் ஸ்தோத்ரம் மஹா புண்யம், த்ரிஸந்த்யம்: ய: படேந் நரஹ
குபேர துல்யஸ் ஸ பவேத் ராஜராஜேஸ்வரோ மஹான்

பொதுப் பொருள்: தாமரையில் வாசம் புரியும் திருமகளே நமஸ்காரம். நாராயணியாய் திகழ்பவளே, கிருஷ்ணருக்குப் பிரியமுள்ளவளே, மஹாலக்ஷ்மியாய் துலங்குபவளே, வைகுண்டத்தில் மஹாலக்ஷ்மியாகவும், பாற்கடலில் ஸ்வர்க்க லக்ஷ்மியாகவும், தேவேந்திரனின் மாளிகையில் ராஜலக்ஷ்மியாகவும், அன்பான குடும்பத்தில் கிரக லக்ஷ்மியாகவும் திகழும் தாயே, நமஸ்காரம். முடிந்தால் நாகை மாவட்டம், சீர்காழியில் உள்ள  அண்ணன் பெருமாள் (வெங்கடாசலபதிக்கே அண்ணன்!) கோயிலுக்குச் சென்று மஹாலக்ஷ்மி தாயாரை வழிபடுங்கள். அல்லது பக்கத்திலுள்ள வெங்கடாசலபதி கோயிலில் தாயாரை வணங்குங்கள்.