பிரசாதங்கள்



-சந்திரலேகா ராமமூர்த்தி

சோயா டிக்கி

என்னென்ன தேவை?

பொடித்த சோயா - 1/2 கப்,
பெரிய உருளைக்கிழங்கு - 1,
பொடித்த இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை - தலா 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பிரெட் தூள் அல்லது வறுத்த கடலை மாவு - 1/2 கப்,
முந்திரி, திராட்சை - தலா 6 (நறுக்கியது),
பச்சைப்பட்டாணி - 1/4 கப்,
வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சாட் மசாலா - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பச்சைப்பட்டாணியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடத்திற்கு மூடிவைத்து பின் வடித்து வைக்கவும். சோயாவை இரண்டு முறை கழுவி, சூடான தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி நன்கு பிழிந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், சாட் மசாலாவைத் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து, நன்கு கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து, விருப்பமான வடிவத்தில் டிக்கிகளாக செய்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்பு எடுத்து 10 நிமிடத்திற்கு ஆறவிட்டு, நான்ஸ்டிக் தவாவை சூடு செய்து சிறிது எண்ணெய் விட்டு டிக்கிகளை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும். மேலே சாட் மசாலாத்தூள் தூவி, புதினா சட்னியுடன் பரிமாறவும்.

சம்பா ரவை வெஜிடபிள் உப்புமா

என்னென்ன தேவை?

சம்பா ரவை - 1 கப்,
நறுக்கிய காய்கறிகள் கேரட் - 1,
பீன்ஸ் - 10,
உருளைக்கிழங்கு - 1,
பச்சைப்பட்டாணி - 1/2 கப்,
நீளமாக கீறிய பச்சைமிளகாய் - 2,
பொடித்த இஞ்சி - சிறிது,
வெங்காயம் - 1 (நறுக்கியது),
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க - கடுகு,
சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது,
காய்ந்தமிளகாய் - 1,
முந்திரி - தேவைக்கு,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் சம்பா ரவையை போட்டு வாசனை வரும்வரை வறுத்து தனியாக வைக்கவும். அதே கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், காய்ந்தமிளகாய், முந்திரி, கறிேவப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும். காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

பின்பு உப்பு, 2 கப் சூடான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் சம்பா ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கட்டியில்லாமல் கிளறவும். மிதமான தீயில் மூடிவைத்து வேக விடவும். உப்புமா பதத்திற்கு வந்ததும் இறக்கவும். தேவைப்பட்டால் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை தூவி படைத்து பரிமாறவும்.

தேன் தினை பஞ்ச்காடியா

என்னென்ன தேவை?

துருவிய கொப்பரை - 1 கப்,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
பேரீச்சம்பழம் - 100 கிராம் (நறுக்கியது),
உலர்ந்த பேரீச்சம்பழம் - 100 கிராம் (நறுக்கியது),
வறுத்த கசகசா - 2 டேபிள்ஸ்பூன்,
டைமன் கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன்,
சிறிது நெய்யில் வறுத்து பொடித்த தினை - 1/2 கப்,
தேன் - 1 டேபிள்ஸ்பூன் அல்லது தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் கொப்பரைத் துருவலை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும். பேரீச்சம்பழத்தையும், உலர்ந்த பேரீச்சம் பழத்தையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கொப்பரை-சர்க்கரை கலவை, பேரீச்சை கலவை, கசகசா, கற்கண்டு, தேன், தினை, ஏலக்காய்த்தூள் அனைத்தையும் சேர்த்து கலந்து படைத்து பரிமாறவும். அல்லது சிறு உருண்டைகளாக பிடித்து பரிமாறவும். அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகளாக வெட்டி பரிமாறவும்.