கவிராயருக்குப் பார்வையளித்த கட்டபொம்மன்!



ஜமீன்கோயில்கள் - பாஞ்சாலங்குறிச்சி

முருகப்பெருமான் மீது கட்டபொம்மன் வைத்திருந்த பக்திக்கு ஈடு இணையே இல்லை எனக்கூறலாம். அதை அங்கீகரிக்கும் விதமாக அவர் மூலமாக முருகன் சில அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறான். அவர் தினமும் திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு பூஜை, நிவேதனம் நடந்த பிறகே தன் மதிய உணவை உண்பார். எங்கோ தொலைவில் இருக்கும் கோயிலில் அவ்வாறு நிவேதனம் நடப்பதை அவர் எப்படித் தெரிந்துகொள்வார்?



பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து திருச்செந்தூர்வரை ஆங்காங்கே கல் மண்டபங்கள் அமைக்கப்பட்டு உள்ளே மணிகள் பொருத்தப்பட்டன. திருச்செந்தூரில் உச்சிகால பூஜை நடந்து முடிந்தவுடனே கோயில் கோபுர மணி ஒலிக்கும். தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு மண்டபமாக மணி ஒலித்து இறுதியில் பாஞ்சாலங்குறிச்சி மண்டபத்தில் மணி ஒலிக்கும். அதன் பிறகே கட்டபொம்மன் உணவு அருந்துவார். இதற்காக ஆறுமுகநேரி, ஆத்தூர், ஒட்டபிடாரம், பாஞ்சாலங்குறிச்சி உள்பட பல இடங்களில் மணி மண்டபம் அமைந்திருந்தன. அவற்றில் சில மண்டபங்களைத் தற்போதும் காணலாம். 

திங்கட்கிழமைதோறும் அதிகாலையில் கட்டபொம்மனுக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலிலிருந்து இலை விபூதி பிரசாதத்தை குதிரை வீரர்கள் கொண்டு செல்வார்கள். விபூதி கையில் கிடைத்தபிறகே அன்றாட பணியை கட்டபொம்மன் துவங்கியுள்ளார். திருச்செந்தூர் முருகன் கோயில் கோபுரத்தின் ஏழாவது நிலையில் கட்டபொம்மன் மணி அமைத்திருந்தார். பல வருடங்களாக ஒலிக்காமல் இருந்த இந்த மணி, சமீபத்தில் கோயில் கும்பாபிஷேகம் நடந்தபோது மீண்டும் ஒலிக்கச் செய்யப்பட்டது. தற்போது உச்சிகால பூஜையில் இந்த மணி ஒலிக்கிறது.

அது மட்டுமல்லாமல், தன்னுடைய நெற்களஞ்சியங்களிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அன்னதானம் அளிக்க பல ஆயிரம் கோட்டை நெல்லை அனுப்பி யிருக்கிறார் கட்டபொம்மன். குடிமக்களும் தம் வயல்களிலிருந்து நெல்லைக் காவடியாகச் சுமந்து கோயிலுக்குச் செலுத்தும் நடைமுறையையும் கொண்டுவந்திருந்தார். 

தன் மனைவிக்கு தங்க அட்டிகை ஒன்றை அன்பளிப்பாக வழங்க விரும்பி பொற்கொல்லரிடம் அதைத் தயாரிக்கும்படி சொன்னார் கட்டபொம்மன். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முருகன்  “அந்த அட்டிகையை நீ எனக்கல்லவா தரவேண்டும்?” என்று கேட்டுள்ளார். அட்டிகை தயாரான உடனேயே அதை திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒப்படைத்து விட்டார். ஒருசமயம் திருச்செந்தூரில் மாசி திருவிழா கொண்டாடப்பட்டது. தேரோட்டத்துக்குத் தேர் தயாராக நிற்கிறது. கட்டபொம்மன் வந்து வடம் பிடித்து கொடுக்க வேண்டும்-. ஆனால், வரவில்லை. ‘சரி, நாமே தேரை இழுப்போம்,’ என பக்தர்கள் தேரை இழுக்க ஆரம்பித்தனர்.

ஆனால், திடீரென்று தேர்ச் சக்கரம் ஓரிடத்தில் சிக்கிக் கொண்டது. எவ்வளவோ முயற்சித்தும் தேர் நகரவில்லை. இதற்கிடையில் கட்டபொம்மன் அங்கு வந்துசேர்ந்தார். தேர்வடம் பிடித்துக் கொடுத்தார். உடனே தேர் நகர்ந்தது. இதுபோல பல அற்புதங்களை கட்டபொம்மனின் பக்தியை மெச்சி அருளியிருக்கிறார் முருகப்பெருமான். தாமிரபரணி ஆற்றங்கரையில், முத்தாலங்குறிச்சி ஓர் அழகிய கிராமம். இங்கு வாழ்ந்த கவிராயர் கந்தசாமிப் புலவர்  மிக ஆழ்ந்த முருகபக்தர். இவர் பார்வையற்றவர். இவர் பாடும் பாடலைக் கேட்க முருகப்பெருமானே நேரில் வந்து விடுவாராம்!

ஒருநாள் கவிராயர் கவி பாடிக் கொண்டிருந்தார். வெற்றிலை போடும் பழக்கமுடைய கவிராயருடைய வெற்றிலை எச்சில் முருகனின் பரிவட்டம் மீது பட்டுவிட்டது. அது திருச்செந்தூர் மூலஸ்தானத்தில் மூலவர் பரிவட்டத்தில் தெரிந்தது. இதைக் கண்ட பட்டர் பதை பதைத்து போனார். இப்படி ஏற்பட்டது எப்படி என்று தெரியாமல் மனம் குமைந்தார். அன்றிரவு அவர் கனவில் முருகன் தோன்றி, “பட்டரே, என்மீது ஆழ்ந்த பக்தி கொண்டவன் முத்தாலங்குறிச்சி கவிராயர்.

அவர் பார்வையற்றவர். அவருக்குப் பார்வையளிக்க நான் முடிவு செய்து விட்டேன். ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிதோறும் என்னை தரிசிக்க அவர் நடந்தே திருச்செந்தூர் வருவார். அவரைக் கூப்பிட்டு வந்து எனக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து அவர் ஒரு கண்ணில் ஒத்து. உடனே அந்தக் கண்ணில் அவருக்குப் பார்வை கிடைக்கும். மறு கண்ணை எப்போது முருகப்பெருமான் திறப்பார் என்று கேட்பார். அவரைப் பாஞ்சாலங்குறிச்சிக்குப் போகுமாறு சொல்.  அங்கே என் பக்தன் கட்டபொம்மன் அவருக்கு மறுகண்ணைத் திறப்பான்” என்று கூறினார்.

அடுத்த வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் வந்த கவிராயர் கடலில் நீராடிவிட்டு வந்தார். அவரைக் கண்டுபிடித்து முருகன் சந்நதிக்குக் கூட்டி வந்த பட்டர், முருகன் ஆணைப்படியே ஒரு பூவை எடுத்து கவிராயர் கண்ணில் ஒற்றினார். பளிச்சென்று அந்தக் கண்ணில் பார்வை  கிடைத்தது கவிராயருக்கு. “மறுகண் திறக்க பாஞ்சாலங்குறிச்சி போங்கள்” என்று முருகன் ஆணையைக் கூறினார் பட்டர். அதன்படி பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்த கவிராயரிடமிருந்து விவரம் தெரிந்துகொண்ட கட்டபொம்மன் வியப்பில் ஆழ்ந்தார். ‘மறுகண்ணைத் திறக்க என்னிடம் முருகன் அனுப்பினாரா?’ என்று கேட்டு நெகிழ்ந்துபோனார்.

உடனே ஜக்கம்மாள் கோயிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார். பின் கவிராயரை ஒரு கையில் பிடித்து கொண்டு மறுகையில் உருவிய வாளுடன் கோயிலுக்கு நுழைந்தார். அதிர்ந்து போன கவிராயர், “என்ன இது? உருவிய வாளுடன் கோயிலுக்குள் வரலாமா?’’ என்று சினந்து கேட்டார். கோயிலின் புனிதத்தை அவர் சிதைக்கிறாரே என்ற ஆதங்கம்! ஆனால், கட்டபொம்மன் ஏதும் பேசாமல் ஜக்கம்மா தேவிக்கு அணிவிக்கப்பட்டிருந்த மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து கவிராயரின்  மறு கண்ணில் ஒற்றினார். என்ன ஆச்சரியம்! அந்தக் கண்ணும் பார்வை பெற்றது!

கவிராயர் ஆனந்தப்பட்டாலும், கட்டபொம்மனின் ஒழுங்கீனத்தால் கோபப்பட்டார். ‘‘நீ ஆணவம் பிடித்தவன். அதனால்தான் தேவியின் சன்னிதானத்திலும் அதிகார மமதையில் உருவிய வாளுடன் நிற்கிறாய். அம்மனை அவமதித்த உன்னால் எனக்குக் கிடைத்த இந்தப் பார்வை எனக்கு வேண்டவே வேண்டாம்,’’ என்று கூறியவர் கட்டபொம்மனின் வாளை பிடுங்கி தன் கண்ணில் குத்திக்கொள்ள முயன்றார்.

அவருடையகரம் பற்றித் தடுத்த கட்டபொம்மன், “கவிராயரே நான் ஆணவத்துடன் வாளைக் கொண்டுவரவில்லை, முருகப்பெருமானின் உத்தரவுப்படி என்னால் உமக்குப் பார்வை மீளாதுபோனால், இந்த வாளால் என்னையே குத்திக்கொண்டு உயிர் துறக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் கொண்டுவந்தேன்,’’ என்று நிதானமாகச் சொன்னார். கவிராயர் அப்படியே ஸ்தம்பித்துப் போனார். ‘‘என்னது? உன் உயிரையே மாய்த்துக்கொள்ள நினைத்தாயா! நீ அல்லவா முருகனின் சிறந்த பக்தன்! என்னை மன்னித்து விடு கட்டபொம்மா!’’ என்று கண்களில் நீர் ததும்பச் சொன்னார்.

அப்போது முருகப்பெருமானின் அசரீரி கேட்டது: ‘‘கவிராயரே உமக்குப் பார்வை தரவேண்டும் என்றால் முத்தாலங்குறிச்சியிலேயே அதைச் செய்திருப்பேன். திருச்செந்தூரிலும், பாஞ்சாலங்குறிச்சியிலும் பார்வை கொடுத்த பட்டரும், கட்டபொம்மனும் என் கடமைகளைச் செய்ய பிறந்தவர்கள் என உமக்கு உணர்த்தவே இந்தத் திருவிளையாடல்!” இந்த சம்பவத்துக்குப் பிறகு கவிராயரும், கட்டபொம்மனும் நெருங்கிய நண்பர்களானார்கள். கவிராயரைப் பார்க்க கட்டபொம்மன் முத்தாலங்குறிச்சி வந்தபோது அவர்  தாமிரபரணி ஆற்றில் குதிரையைக் குளிப்பாட்டிய இடம். தற்போதும் வீரபாண்டியன் கசம் என்று அழைக்கப்படுகிறது.

அங்கிருக்கும் கோயிலில் அதுவரை முகில்வண்ணநாதராகத் திகழ்ந்த ஈசன், அதன்பின் வீரபாண்டீஸ்வர் என அழைக்கப்பட்டார். தற்போது வீரபாண்டிய கசம் சிறு குட்டையாக மாறிவிட்டது! கட்டபொம்மன் உருவாக்கிய திருவிழா வழிபாடுகள் திருச்செந்தூர் ஆலயத்தில் அவரது வாரிசுகளால் இன்றளவும் தொடர்ந்து  நடத்தப்பட்டுவருகின்றன. இதற்காக “வீர சக்கதேவி ஆலய குழு” என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தற்போது இதன் தலைவராக மு.முருகபூபதி  செயல்பட்டு வருகிறார்.

ஆவணி திருவிழாவில் 9வது மண்டபகப்படியும், மாசி திருவிழா 9 வது மண்டகப்படியும் இவர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக தூத்துக்குடி, வைப்பாறு, சிங்கிலிப்பட்டி உள்பட சுமார் 110 ஊர்களில் உள்ள கட்டபொம்மனின் வாரிசுகள் ஒன்றுகூடி மண்டகப்படியை எப்படி நடத்துவது என்று முடிவெடுக்க, அப்படியே நடைபெறுகிறது. மண்டகப்படி காலத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று அங்குள்ள கட்டபொம்மன் மண்டபத்தில் இந்த வாரிசுகள் காத்திருப்பார்கள். 

ஆலயத்தினுள் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். கட்டபொம்மன் வழங்கிய நகைகளால் இறையுருவங்கள் அலங்கரிக்கப்படும். வைர கிரீடம், வைரவேல், தங்க அணிகலன்கள் ஆகியவை அவற்றில் அடங்கும். வள்ளி-தேவசேனா சமேதராக முருப்பெருமான் பேரெழிலுடன் கம்பீரமாகக் காட்சியளிப்பார். இதன்பின் வாரிசுகள் மேளதாளம் முழுங்க தேவராட்டம் ஆடியபடியே கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள். மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை ந டைபெறும்.

அதன்பின் பல்லக்கில் வள்ளி-தேவசேனாவுடனான சுப்பிரமணியரை மண்டத்துக்கு அழைத்து வருவார்கள். கோயில் திருவிழா கோலம் பூண்டிருக்க புன்முறுவலுடன்  முருகப்பெருமான் ஊர்வலம் வருவார். பல்லக்கு மீண்டும் மண்டபத்தை வந்தடைய, உற்சவரை பாசம் பொங்க அரவணைத்தபடியே நடுப்பகுதிக்கு எடுத்து வருவார்கள். உடனே மேளதாளங்கள் உச்சத்தில் ஒலிக்கும்.

அங்கே வாரிசுகள் முன்னிலையில் 21 வகை அபிஷேகங்கள் நடைபெறும். தொடர்ந்து அலங்காரம், அணிகலன்கள் அணிவிப்பு என அமர்க்களமாக திருவிழா நடந்தேறும். நிறைவாக அலங்கார சிறப்பு பூஜை முடிந்தபின் பஞ்சாமிர்தம் உள்பட பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும். அதன்பின் அவர்கள் பிரியாவிடை கொடுக்க, தம்பதி சகிதமாக முருகன் தனது இடத்துக்குப் புறப்படுவார். வாரிசுகள், தம் மூதாதையான கட்டபொம்மனே அங்கிருந்து விடைபெறுவதாக நினைத்து ஆனந்த கண்ணீரோடு வழியனுப்பி வைப்பார்கள்

(தொடரும்)
 படங்கள்: மயிலேறி,
அபிஷ்விக்னேஷ்