பூமிக்கு அடியில் சித்ரா பௌர்ணமி



காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே ஏழு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, ‘ஐயங்கார் குளம்’ எனும் திருத்தலம். இங்குள்ள சஞ்சீவிராயர் சுவாமி கோயிலையொட்டி உள்ள பெரிய குளத்தின் அருகே நடவாவிக் கிணறு என்ற சிறப்பு வாய்ந்த கிணறு உள்ளது. இந்தக் கிணற்றுக்குள் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகள் வழியாகக் கீழே சென்றால் கருங்கல்லால் ஆன, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபத்தைக் காணலாம். இது ஓர் அபூர்வ கட்டிட அமைப்பு என்று ஆய்வாளர்கள் கூறுவர். எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படும் இந்தப் பெரிய கிணற்றில் ‘சித்ரா பௌர்ணமி அன்று ஒருநாள் மட்டும் உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றிவிடுவார்கள்.



அன்று மாலை பூமிக்கு அடியில் (கிணறு) அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமானை எழுந்தருளப் பண்ணுவார்கள். மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். இரண்டு நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சுவாமிகளைத் தரிசிக்கலாம். அதன்பின் கிணற்றில் நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும். இந்த அபூர்வ காட்சியைத் சுற்றுவட்டாரத்து மக்கள் வந்து தரிசித்து பெருமாளின் திருவருளைப் பெறுகின்றனர்.

வித்தியாச கோலத்தில் ராமர்

மதுரை விளாச்சேரியில் பட்டாபிஷேக ராமர் கோயில் அமைந்துள்ளது. ராமர், ராவணனை வெற்றி கொண்டு சீதாதேவியுடன் ராமேஸ்வரம் சென்று லிங்கப் பிரதிஷ்டை செய்து, தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொண்டு, அயோத்தி நோக்கி சென்று கொண்டிருந்தபோது ராமர் இங்கு தவம் செய்தாராம். பெரும்பாலும் ராமபிரான் வில்லுடன் நின்ற கோலத்தில்தான் காட்சியளிப்பார். தியானம் செய்யும் நிலையில் சின்முத்திரையுடன், அபயம் அளிக்கும் விதமாக ராமர் அமர்ந்தபடி காட்சி தருவது மிகமிக அபூர்வம். இடது பக்கம் லட்சுமணன் நின்றிருக்க, வலப்பக்கம் சீதாதேவி அமர்ந்திருக்கிறாள். அற்புதமான தரிசனம்!

ராமர் லிங்கத்தை என்று பிரதிஷ்டை செய்தார்?

ராமேஸ்வரம் கடற்கரையில் லிங்கம் பிரதிஷ்டை செய்து தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார் ராமர். இந்த சிவலிங்கத்தை  ராமர் எப்பொழுது பிரதிஷ்டை செய்தார்? ஜ்யேஷ்ட மாதம் சுக்லபட்சம் தசமி திதி, புதன் கிழமை, ஹஸ்த நட்சத்திரம், கரானந்தம், வ்யதீபாதம். கன்யா ராசியில் சந்திரன், ரிஷபத்தில் சூரியன் - இந்த நன்னாளில் பரமேஸ்வரரான சிவபெருமானை ராமர் லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்கிறது  ஸ்காந்தபுராணம். ஜ்யேஷ்டம் என்பது வைகாசி (மே-ஜூன்) பெளர்ணமியில் தொடங்கும் சாந்த்ரமான மாதமாகும். அன்றைய நட்சத்திரம் கேட்டை (ஜ்யேஷ்ட). சுக்லபட்ச தசமியில் ஹஸ்த நட்சத்திரம் சேர்ந்து வருவது தசஹரா புண்ணிய காலம். ‘இந்த காலத்தில்தான் ராமலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தாராம்.

- டி.ஆர்.பரிமளரங்கன்