பக்தி தமிழ்
காத்திருந்து என் நிலையைச் சொல் கிளியே!
இறைவன் மீது வைக்கும் பக்தியை எல்லாருமே நேசமாகதான் வெளிப்படுத்துவார்கள். குறிப்பாக, பக்திக் கவிதைகளில் அன்பின் வெளிப்பாடு அதிகம் காணப்படும். இதனால், பல நேரங்களில் பக்திக் கவிதைகளுக்கும் காதல் கவிதைகளுக்கும் பெரிய வித்தியாசமே தென்படாது. இறைவன் மீது பக்தர்கள் வைப்பதும் உண்மைக் காதல்தானே!
இதனை ஒருபடி முன்னெடுத்துச்சென்று, இறைவன் மீது காதல்வயப்பட்ட பெண்ணாகவே தன்னை எண்ணிக்கொண்டு பாடியவர்களும் உண்டு. ஆழ்வார்கள், நால்வர் தொடங்கி இன்றுவரை பல புலவர்கள் இப்படிப்பட்ட அழகிய பாடல்களைத் தந்திருக்கிறார்கள். பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய ‘அழகர் கிள்ளைவிடுதூது’ என்ற நூல், அழகர் மீது நேசம்கொண்ட ஒரு பெண்ணின் குரலாக ஒலிக்கிறது. அவள் தன் நிலைமையை ஒரு கிள்ளை(கிளி)யிடம் சொல்லுகிறாள். ’அழகரிடம் சென்று என்னைப் பற்றிச் சொல்வாயா?’ என்று கெஞ்சுகிறாள். சரி, சொல்கிறேன், ஆனால், யார் அந்த அழகர்? அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்!’ என்கிறது கிளி.
கேட்கிற கிளிக்கும் அழகரைத் தெரியும், பதில்சொல்கிற காதலிக்கும் தெரியும், பாடலையெழுதிய புலவருக்கும் தெரியும், வாசிக்கிற நமக்கும் தெரியும். ஆனாலும், பாடல் வடிவத்தில் மீண்டும் அவர் பெருமையைக் கேட்பதில் ஒரு சந்தோஷம். ஆகவே, அந்தப் பெண் அழகரின் மாண்புகளை ஒவ்வொன்றாக விவரிக்கிறாள், கிளியும் ஆவலுடன் கேட்கிறது!
‘அரிவடிவுமாய்ப் பின் நரன் வடிவும்ஆகிப் பெரியதொரு தூணிற் பிறந்து, கரிய வரைத்தடம்தோள் அவுணன் வன்காயம் கூட்டி அரைத்திடும் சேனை அருத்தி, உருத்திரனாய்ப் பண்ணும் தொழிலைப் பகைத்து நிலக்காப்பும் அணிந்து உண்ணும்படியெல்லாம் உண்டு அருளி, வெண்ணெயுடன் பூசனை தந்தபால் போதாமலே பசித்து வேதனையும் பெற்று வெளிநின்று, பாதவத்தைத் தள்ளுநடைஇட்டுத் தவழ்ந்து விளையாடும் பிள்ளைமை நீங்காத பெற்றியான்.’
கிளியே, அவன் பல வடிவங்கள் எடுத்தவன், ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். சிங்கமும் மனிதனும் கலந்த நரசிம்மமாகப் பெரிய தூணொன்றில் தோன்றினான் அவன். எதிரில் கருப்பான மலையைப் போன்ற பெரிய தோள்களுடன் ஓர் அசுரன் (இரணியன்) நின்றான். அவனைப் பிடித்துத் தரையிலே தேய்த்து அழித்தான். தடுக்கவந்த இரணியனின் படைகளையும் அழித்தான். அதன்பிறகு, அவன் உருத்திரனான சிவனின் தொழிலை (அழித்தல்) ஏற்றுக்கொண்டு செய்தான். நிலத்தைக் காக்கின்ற தொழிலையும் அவனே செய்தான். படைக்கும் தொழிலைச் செய்கிற பிரம்மனையும் அவனே படைத்தான். ஊழிக்காலத்தில், அந்த நிலத்தை அவனே உண்டான். அதன் மூலம் அந்நிலத்தைக் காத்து அருளினான்.
அவன் பூமியை மட்டுமா உண்டான்? கண்ணனாக அவதாரம் எடுத்தபோது, வெண்ணெய் உண்டான், பூதகி கொடுத்த பாலையும் உண்டான், அவை போதாமல் மேலும் பசியோடு அக்கம் பக்கத்து வீடுகளில் வெண்ணெயைத் திருடுவதுபோல் விளையாடினான். கண்ணனின் குறும்புகளைத் தடுப்பதற்காக, அவன் காலில் ஓர் உரலைக் கட்டினார்கள். அதை இழுத்துக்கொண்டு தவழ்ந்தான், அந்த உரலாலேயே இரண்டு மருத மரங்களைச் சாய்த்துவிட்டான். இத்தனைக் குறும்புகளைச் செய்த பிறகும், அவனுடைய தன்மை மாறவில்லை. இன்னும் சிறுபிள்ளைபோலவே பக்தர்களிடம் அன்பாகப் பழகுகிறான், தீயோரை விளையாட்டாக அழிக்கிறான்!
‘கல்லைப் பெண்ஆக்கும் மலர்க்காலினான், சொல்கவிக்குப் பார முதுகுஅடைந்த பாயலான், விண்ணவர்க்கா ஆரமுது கடைந்த அம்கையான், நாரியுடன் வன்கானகம்கடந்த வாட்டத்தான், வேட்டுவற்கு மென்கானகம்கடந்த வீட்டினான், என்காதல்வெள்ளத்து அமிழ்ந்தினோன், வேலைக்குமேல் மிதந்தோன்.’
அவன் ராமனாக அவதரித்தபோது, தன்னுடைய மலர்த்திருவடிகளால் ஒரு கல்லைப் பெண்ணாக்கினான், திருமகளான சீதையுடன் வனத்தில் நடந்தான். திருமழிசையாரின் பாடலைக் கேட்டு, தன்னுடைய பாம்புப் படுக்கையைச் சுருட்டி முதுகில் வைத்துக்கொண்டு நடந்தவன் அவன். விண்ணவர்களுக்காக அரிய அமுதத்தைக் கடைந்தவன். அழகிய கைகளைக் கொண்டவன். வேடன் ஒருவனுக்காகத் தன்னுடைய கால்நகத்தைத் தந்தவன். கடல்மேல் மிதந்த திருக்கோலத்தைக் கொண்ட அந்தப் பெருமான், என்னுடைய காதல் வெள்ளத்தில் திளைக்கிறவன். சரி, அவனை எங்கே பார்ப்பது? அதுதான் பிரச்னை. அவன் மாயனாயிற்றே, அவன் எங்கே இருக்கிறான் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?
‘உள்ளத்து உள்ளான், உலகுக்கு அப்பாலான், தெள்ளிதின் வெட்டவெறுவெளியிலே நின்றும் தோற்றாதான், கிட்ட இருந்தும் கிடையாதான்... ...எண்ணிலே மாயன் எனும் பேரினால் ஒளிப்போன், கண்ணன்எனும் பெயரால் காண்பிப்போன், எண்ணுங்கால் எங்கும் இலாது இருந்தே எங்கும் நிறைந்திருப்போன், எங்கும் நிறைந்திருந்தே எங்கும்இலான்.’
அவன் என் உள்ளத்தில் உள்ளான். அதேசமயம் இந்த உலகெங்கும் இருக்கிறான். அதைக் கடந்தும் இருக்கிறான். அதற்காக, அவனை எளிதில் பார்த்துவிடலாம் என்று நினைக்காதே. அவன் வெட்டவெளியில் தெள்ளத் தெளிவாக நின்றாலும், யார் பார்வைக்கும் அகப்படமாட்டான். அருகிலேயே இருந்தாலும், அவனை யாரும் எளிதில் பெற்றுவிட இயலாது.
ஆனால், அவனுக்குக் ‘கண்ணன்’ என்ற பெயரும் உண்டு. ஆகவே, அவன் நம் கண்ணிலேயே இருப்பான். அன்புள்ளவர்களுக்குத் தன்னை அவனே காட்டுவான். மற்ற பொருட்களையும் காட்டுவான். அவன் வழியாகதான் நாம் இந்த உலகையே காண்போம்! சுருக்கமாகச் சொல்வதென்றால், அவன் எங்கும் இருக்கமாட்டான், ஆனால், எங்கும் நிறைந்திருப்பான்!
‘துன்றுபிர மாவும்நான், மன்னுயிரும்நான், அவ்இருவரையும் ஏவுவான்தானும்நான் என்று உணர்த்தக் கோவலர்பால் ஆனுமாய் ஆன்கன்றும்ஆகி அவற்றைமேய்ப் பானுமாய் நின்ற பரஞ்சோதி.’
அவன் கண்ணனாகப் பசுக்களை மேய்த்தபோது, அந்தப் பசுக்களும் அவனே, பசுக்களின் கன்றுகளும் அவனே, அவற்றை மேய்க்கிறவனும் அவனே என்று ஒரு திருக்காட்சியைக் காட்டினான். இதைக் காணும்போது, அவனே பிரம்மன், அவனே சிவன், அவர்கள் இருவருக்கும் (ஆக்கல், அழித்தல்) பணிகளை வழங்கி அருள்பவனும் அவனே. இந்த உலக உயிர்கள் எல்லாம் அவனே என்பது புரிகிறது.
‘பாதம்எனும் செந்தாமரைமலரில் சிந்தியதேன்போல மந்தாகினிவழியும் வண்மையான், சந்ததமும் ஆன்ற உலகம் அறியும் அறியாமையுமாத் தோன்றத் துயிலாத் துயில்கொள்வோன், ஈன்றவளைத்தெள்ளுமணிவாயில் காட்டிச் செகம்புறமும் உள்ளும்இருப்பது உணர்வித்தோன்.’
அவனுடைய பாதம் செந்தாமரைமலர்போல் அழகானது, அதில் சிந்துகிற தேன்போல கங்கைநதி வழிகிறது. இந்த உலகம் அறிவோடும் அறியாமையோடும் இருக்கச் செய்கிறவன் அவனே. அதற்காக, அவன் உறங்கியும் உறங்காமலும் ‘துயிலாத் துயில்’ கொண்டிருக்கிறான். கண்ணனான அவன், தன் வாயில் உலகங்களைக் காட்டினான், அதைப் பார்த்த அவனுடைய தாய்க்கும் பிறருக்கும், உலகம் வெளியில் மட்டுமல்ல, அவனுக்குள்ளும் உள்ளது என்பதை உணர்த்தினான்.
‘இசைத்துஇசைத்து ஊன்பிடிக்கும் வேடர் ஒரு பாவையால்நூறு மான்பிடிக்கின்ற வகைஎன்னத் தான்படைத்த என்பிறவி எண்பத்துநான்குநூறாயிரமும் தன்பிறவி பத்தால் தணித்திடுவோன்.’
வேடர்கள் ஒரு மான் பொம்மையைக் கொண்டு வருவார்கள், அதை வைத்து ஒலிஎழுப்பி நூறு மான்களைப் பிடித்துவிடுவார்கள். அதுபோல, அந்தப் பெருமான் தன்னுடைய பத்து அவதாரங்களால் என்னுடைய ஆயிரக்கணக்கான பிறவிகளைப் போக்கினான், எனக்குப் பிறவாத பெருநிலையை அருளினான்.
அதெல்லாம் சரி, நான் அவனைப் பார்க்கவேண்டுமென்றால் எங்கே செல்வது? எந்த நாடு? எந்த நகரம்? ‘பார்மகட்கு......கனகவரைமீது புகழ் தீட்டும் புனல்நாடும் தென்னாடும் நாட்டமாம், அந்நாடு இரண்டில் அருள்சேர் வலக்கண்எனும் நல்நாடாம் தென்பாண்டி நாட்டினன்... அமராபதிபோலும் சீர்பதியான திருப்பதியான்.’
இமயமலை மீது புகழை எழுதிய சோழநாடும், பாண்டியநாடும்தான் புவிமகளுடைய இரண்டு கண்கள். அந்தக் கண்களிலே வலக்கண்ணாகிய அருள்நிறைந்த நல்ல நாடு, தென்பாண்டிநாடு. அதுதான் அழகரின் நாடு. அங்கே தேவர்களுடைய பட்டினமான அமராபதிபோலச் சிறப்பு நிறைந்த நகரமான திருமாலிருஞ்சோலை உள்ளது, அங்கேதான் அழகர் எழுந்தருளியிருக்கிறார். அவருடைய தோற்றம் எப்படிப்பட்டது தெரியுமா?
‘நவநீதம் மேனியில் சிந்தியதும் மென்கையில் ஏந்தியதும் வானில் உடுவும் மதியும்எனத் தான் உண்டோன், செங்கதிரும் வெண்கதிரும் என்னத் திருவிழியும் சங்கமும் சக்கரமும் தாங்கினோன், அம்கண்உல(கு) உண்ட கனிவாயான், உறையும் திருவயிற்றான், கொண்டபடி ஈன்ற கொப்பூழான், மண்டி அளந்த திருத்தாளான், அன்றுஏற்ற கையான், விளைந்தபொருள் காட்டும் மெய்யான்.’
அவன் வெண்ணெயை அள்ளி உண்கிறவன், அப்போது அவன் கையில் கொஞ்சம் வெண்ணெய் இருக்க, உடலில் கொஞ்சம் வெண்ணெய் ஆங்காங்கே சிந்தியிருக்க, அதைப் பார்க்கும்போது, வானத்தில் சந்திரனும் நட்சத்திரங்களும் நிறைந்திருப்பதுபோல் தோன்றும். அவனுடைய இருவிழிகள், சிவந்த சூரியனையும் வெண்ணிறச் சந்திரனையும்போல் தோன்றும், கையில் சங்கு, சக்கரம் ஏந்தியிருப்பான். அவனுடைய வாய், அழகிய உலகை உண்டது, அவனுடைய வயிற்றில் அந்த உலகு தங்கியது, அவனுடைய தொப்பூளில்தான் உலகம் பிறந்தது, அவனுடைய கால், அந்த உலகை அளந்தது, அவனுடைய கை, அந்த உலகை (மாபலியிடம்) கேட்டுப் பெற்றது. உலகில் விளையும் பச்சைப்பசுமைதான் அவனுடைய திருமேனியின் நிறம்!
‘விருப்பமுகம் சந்திரன்ஆன சவுந்திரவல்லியுடன் சுந்தரராசன்எனத் தோன்றினோன், அந்தம் சொலநலம்கொடு தோள்அழகுஆர் சுந்தரத்தோளன், மலைஅலங்காரன் என வந்தோன், பலவிதமாய் நண்ணிய தெய்வத்தை நரர்எல்லாம் பூசித்த புண்ணியமே தன்னைவந்து பூசித்தோன்.’
சந்திரன்போன்று திகழும் முகத்தைக்கொண்ட சவுந்திரவல்லித் தாயாருடன் சுந்தரராசன் என்ற திருப்பெயருடன் தோன்றுகிறான் அவன். அழகிய தோள்களைக்கொண்டதால் அவனைச் ‘சுந்தரத்தோளன்’, ‘மலையலங்காரன்’ என்றும் அழைத்துப்போற்றுவார்கள். மக்கள் எந்தத் தெய்வத்தை அன்போடு வணங்கினாலும் சரி, அனைத்தும் அவனையே சென்றுசேரும். புண்ணியங்களெல்லாம் அவனைப் பூசித்துவணங்கும்!
இப்படிப்பட்ட அழகரைச் சட்டென்று சந்தித்துவிடலாமா? அதற்கென்று ஒரு முறை இருக்கிறதல்லவா, கிளிக்கு அதை விளக்குகிறாள்: ‘...தாள்வணங்க ஆர்த்த திருவோலக்கமாய் இருப்பன், அப்பொழுதுஉன் வார்த்தை திருச்செவியில் வாயாது, சேர்த்தியிலே மெல்ல எழுந்துஅருளும் வேளைபார்த்து, அவ்வேளை ...தத்தையே, நீஉரையாய்.’
கிளியே, எம்பெருமானைப் பலரும் வணங்கிக்கொண்டிருப்பார்கள். திருவோலக்க மண்டபத்தில் அவர் அழகாக எழுந்தருளியிருப்பார். அந்த நேரத்தில் அவரிடம் நீ ஏதேனும் பேசினால், அவருடைய திருச்செவிக்குச் சென்றுசேராது. அவர் தூங்கச் செல்லும்வரை காத்திரு. அப்போது அவர் அருகே சென்று என் நிலைமையைச் சொல்!
அவ்வளவுதானா? சொல்லிவிட்டுத் திரும்பி வந்துவிடலாமா? அத்தனை தூரம் சென்று அழகரைப் பார்த்த பிறகு வெறுங்கையோடு வரலாமா? என்னுடைய காதல் நெஞ்சம் அதைத் தாங்குமா?
‘நேசமுடன் எம்முடைய மாலை இருபுயத்து மாலை கேள். உம்முடைய மாலை உதவீரேல், அம்மைதிருக் கோதையார் சூடிக் கொடுத்துவரவிட்ட தாதைஆர் மாலைதனைத் தம்மின்என்பாய், நீதி அடுப்பவர் யாவர்க்கும் ஆடித்தியாகம் கொடுப்பவன் இல்லையென்று கூறான், தடுக்கும் அருமாலை நீக்கும் அழகன் புயத்து மருமாலை நீ வாங்கிவா.’
அவரிடம் என்னுடைய நிலையைச் சொன்ன பிறகு, ’நீங்கள் அணிந்திருக்கும் மாலையைத் தாருங்கள்’ என்று அன்பாகக் கேள். ஒருவேளை அவரால் அதைத் தர இயலாது என்றால், ஆண்டாள் சூடிக்கொடுத்த, மகரந்தங்கள் நிறைந்த மாலையையாவது தரச்சொல்லிக் கேள். ஆடித்திங்களில் தன்னிடம் வந்து வரம் கேட்பவர்களுக்கு அள்ளித்தருகிறவன் அவன். நீ மாலை கேட்டால் மறுக்கமாட்டான், நிச்சயம் தருவான்.
என்னுடைய இந்த அரிய மயக்கத்துக்கு ஒரே மருந்து, அழகர் தோளில் அணிந்த மணம் மிகுந்த மாலைதான். கிளியே, நீ அதைக் கேட்டு வாங்கிவா. அழகரின் மாலை என்பது, இங்கே ஒரு குறியீடுதான். இறைவனின் திருவடிகளைச் சென்றடையவேண்டும் என்கிற தவிப்புதான் காதலாக வெளிப்படுகிறது. அவரது மாலையைக் கேட்பதன் மூலம், என்றும் அவரைப் பிரியாமல் சேர்ந்திருக்கவேண்டும் என்கிற பக்தர்களின் எண்ணம் பாடலாகத் தோன்றுகிறது!
(தொடரும்)
|