தெளிவு பெறு ஓம்



1. நவகிரகங்களைச் சுற்றும்போது சொல்லவேண்டிய மந்திரம் என்ன?

பல்வேறு சாதனைகளை விஞ்ஞானம் மெய்ப்பித்து வரும் நிலையில், இந்த நாட்களில் மழை வரும், புயல் தாக்கும், பூகம்பம் இந்த  திசைகளில் இந்த நாடுகளில் ஏற்படும் என்று முன்கூட்டியே பஞ்சாங்கத்தில் எப்படி ஆய்வு செய்து எழுதுகின்றனர்?
- மீனாவாசன், சென்னாவரம்.

இதனை இகலோக சோதிடம் என்று தமிழில் சொல்வார்கள். ஆங்கிலத்தில் இதற்கு Mundane Astrology என்று பெயர். இது குறித்து நம்  முன்னோர்கள் பல ஆய்வுகளைச் செய்து பல கருத்துகளைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தமிழில் ‘புட்ப பந்தம்’ என்ற புகழ்பெற்ற  நூல் உண்டு. இந்த நூலில் மழை எப்பொழுது பெய்யும், மழையின் அளவு எவ்வாறு இருக்கும் என்பன போன்ற பல கருத்துகள் இடம்  பெற்றிருக்கின்றன. இது மாதிரியான நூல்களை அடிப்படையாகக் கொண்டு பஞ்சாங்கத்தில் மழை வரும், புயல் தாக்கும் என்று  குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இயற்கை சீற்றங்களை யாராலும் சரியாக கணித்துச் சொல்ல இயலாது. இதற்கு நாம் பல உதாரணங்களை  நடைமுறையில் கண்டு வந்திருக்கிறோம். இயற்கை சீற்றத்தினை இறைவன் ஒருவனால் மட்டுமே நிர்ணயிக்க இயலும்.

2. நவகிரகங்களில் சனீஸ்வரன்தான் சக்திமிக்கவர் என்கிறார்களே, விளக்க முடியுமா?
- கே.ஏ.என்.சிவம், பெங்களூரு - 43.

 முதலில் சனீஸ்வரன் என்ற சொல்லே தவறானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ‘சனைஷ்சரன்’ என்ற சொல் மருவி சனீஸ்வரன்  ஆகிவிட்டது. சனைஷ்சரன் என்றால் மெதுவாக நகரக்கூடியவன் என்று பொருள். நவகிரகங்களில் சனிதான் சக்தி மிக்கவர் என்ற கருத்தும்  தவறானது. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி உண்டு. தீய கிரகங்கள் என்பதால் சனி, ராகு, கேது போன்ற பெயர்களைக்  கேட்டாலே அஞ்சுகிறோம்.

உண்மையில் இந்த தீய கிரகங்களைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. தீய கிரகங்கள் நன்மையையும் செய்யும், அதேபோல குரு,  சுக்கிரன் முதலான சுப கிரகங்களால் தீமையும் விளையும். இது அவரவர் ஜாதக அமைப்பினைப் பொறுத்தது. ஆன்மிக ரீதியாக மட்டுமல்ல,  அறிவியல் ரீதியாகவும் சனிதான் சக்தி மிக்கது என்ற கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜ்யோதிஷம் என்ற சொல்லுக்கு ஒளி அறிவியல்  என்பதே பொருள். ‘ஸ்வர்ண ஜ்யோதீ:’ என்று வேதம் சூரியனைச் சொல்கிறது. அதாவது, சூரியனுடைய ஒளியினைதான் அனைத்து  கோள்களும் உள்வாங்கி தங்களுடைய குணத்திற்கு ஏற்றவாறு பிரதிபலிக்கின்றன என்பதே ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவம். சூரியனின்  ஈர்ப்பு சக்தியினால்தான் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று விஞ்ஞானமும் அடித்துச் சொல்கிறது.

இந்த கருத்துகளின் அடிப்படையில் சொன்னால் நவகிரகங்களில் சூரியனே மிகுதியான சக்தி படைத்தவர் என்று உறுதியாகச் சொல்லலாம்.  ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு குணம் அமைந்திருந்தாலும், பூமியில் வாழும் மனிதர்களின் மீது தங்களின்  தாக்கத்தினை செலுத்த அவற்றிற்கு சூரியனின் ஒளி தேவை. சூரியனின் ஒளியையே அவை பிரதிபலிக்கின்றன என்பதால் ஒன்பது கோள்களில்  சூரியனே சக்தி மிக்கவர் என்று அறுதியிட்டுக் கூறலாம்.

3. சில மிராசுதாரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் வீடுகளில் தினசரி பூஜையை புரோகிதர் மூலமாகச் செய்கிறார்கள். அதனால் இப்படிச்  செய்யும் அந்த கிருகஸ்தருக்கு, ஸ்வாமிக்கு தானே பூஜை செய்த நேரடி பலன் கிட்டுமா?
- வி.வெங்கட்ராமன்,
செகந்திராபாத்-9.

வீட்டைக் கட்டியது கொத்தனாராக இருந்தாலும் அதற்கான செலவினை யார் செய்கிறார்களோ அவர்களுக்குத்தானே வீடு சொந்தமாகிறது!   பூஜை செய்யும் புரோகிதருக்கு அதற்கான தட்சிணை சேர்ந்து விடுவதால் பூஜையின் பலன் முழுவதும் எஜமானரையே போய்ச் சேரும்.  உண்மையாகவே பூஜைக்கு என்று தனியாக நேரம் ஒதுக்க இயலாதவர்களுக்கு இந்த விதி பொருந்தும். அதேநேரத்தில் தினசரி பூஜையைக் கூட  செய்யாமல் சோம்பேறியாய் தூங்கிக் கொண்டு புரோகிதரை வைத்து ஒப்புக்காக பூஜை செய்பவனுக்கு நிச்சயமாக பூஜைக்குரிய பலன்  கிட்டாது.

4. இறைவன் சந்நதியில் கற்பூரம் ஏற்றி வழிபடுவது, தீபம் ஏற்றி வழிபடுவது எது சிறந்தது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

 இறைவன் ஜோதி ஸ்வரூபனாக நிறைந்திருக்கிறான் என்பதே இந்த வழிபாட்டில் உள்ள கருத்து. இறைவனை அக்னி ஒளியில் தரிசிக்கும்  போது மனம் தெளிவடைகிறது. இதனால்தான் கற்பூரம் அல்லது விளக்கு ஏற்றி வழிபடுகிறோம். கற்பூரம் என்பது திடப்பொருளாக இருந்து  நேரடியாக ஆவியாக மாறும் தன்மை உடையது. மற்ற பொருட்கள் அக்னியின் மூலம் முதலில் கரியாகி, பின்பு சாம்பலாகி அதன் பின்னரே  கரையும் தன்மை கொண்டவையாக இருக்கும். கற்பூரம் மட்டுமே நேரடியாக ஆவியாகும் திறன் உடையது என்பதால் கற்பூரம் ஏற்றி  வழிபட்டனர். தற்காலத்தில் சுத்தமான கற்பூரம் கிடைப்பது அபூர்வமாகிவிட்டது. ஆகவே கற்பூரம் ஏற்றி சுற்றுச்சூழலை மாசு
படுத்துவதைவிட, விளக்கு ஏற்றி தீப ஒளியில் இறைவனை தரிசிப்பதே நல்லது.

எந்த முறையில் வணங்கினாலும் அக்னியின் ஒளியில் இறைவனின் திருமுகத்தை தரிசனம் செய்யும்போது மனதை அங்குமிங்கும்  அலைபாயவிடாமல் முழுமையான ஈடுபாட்டோடு தரிசித்தால் முழுப்பயனையும் அடையலாம்.

5. நான் கோயிலுக்கு செல்லும்போதும் மற்றும் கோயிலிலும் சில சமயம் என் கால்கள் (பெருவிரல்) இடறிவிடுகிறது. மேலும் சில சமயம்  அடிபட்டு விடுகிறது. என் வீட்டார் இதை கண் திருஷ்டி என்கிறார்கள். இதைப்பற்றிக் கூறவும்.
- கே.கார்த்திக், திருச்சி.

இந்த நிகழ்வு கண் திருஷ்டியினால் உண்டாகிறது என்று சொல்ல முடியாது. ஆலயத்திற்குள் திருஷ்டியினால் பிரச்னைகள் ஏதும் உண்டாகாது.  தீய சக்திகள் ஆலயத்திற்குள் நுழைய முடியாது. உங்கள் கவனக்குறைவினால் நேர்ந்திருக்கலாம். எதற்கும் உங்கள் ஜாதகத்தை குடும்ப  ஜோதிடரிடம் காண்பித்து பலன் அறிந்துகொள்வது நல்லது.

6. பிறந்தநாள் நட்சத்திரம், ராசி எதுவும் தெரியாதவர்கள் எப்படி தங்களுக்கான பலன்களை அறிவது?
- எஸ்.புருஷோத்தம் ராஜன், பரமக்குடி.

ஜாதகம் இல்லாதவர்கள் எப்படி தங்களுக்கான பலனைத் தெரிந்துகொள்வது என்றும், பெயர் ராசியினைக் கொண்டு சொல்லும் பலன்  சரியானதாக இருக்குமா என்றும் கேட்டிருக்கிறீர்கள். ஜோதிடத்தில் ஜாதகம் இல்லாதவர்கள் பலன் தெரிந்துகொள்ள பல வழிமுறைகள்  உள்ளன. ஆரூடம், பிரசன்னம் (கேரள ஜோதிட முறை அல்ல) என்று பல முறைகளில் பலன் உரைப்பார்கள். தற்காலத்தில் பிரசன்ன  ஜோதிடத்தில் கிருஷ்ணமூர்த்தி பத்ததி (கே.பி.சிஸ்டம்) முறையில் பலன் சொல்லும் ஜோதிடர்கள் நிறைய பேர் உள்ளனர்.

ஆனால், இந்த முறையில் ஒரு நேரத்தில் ஒரு கேள்விக்கான விடையை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு என் மகனுக்கு  வேலை கிடைக்குமா, திருமணம் நடக்குமா, சொந்தமாக வீடு வாங்க இயலுமா என்று பல கேள்விகளைக் கேட்டீர்களேயானால் சரியான  விடை கிடைக்காது. ஏதேனும் ஒரு கேள்வியை மட்டுமே ஒரு நாளில் கேட்க வேண்டும். நீங்கள் கேள்வி கேட்கும் நேரத்தினைக் கணக்கில்  எடுத்துக்கொண்டு ஜோதிடர் அதற்கான விடையை துல்லியமாகச் சொல்ல முடியும். ஒரே நேரத்தில் பல கேள்விகளுக்கும் விடை தெரிய  வேண்டுமென்றால் அதற்கு பிறந்த ஜாதகத்தினைக் கொண்டுதான் சரியாக பலன் சொல்ல இயலும். பெயர் ராசிக்கு பலன் அறிதல் என்பது,  நாம் பிறந்த நட்சத்திரத்தின்படி பெயர் வைத்திருந்தால் பலன் சரியானதாக இருக்கும்.
 
7. நவகிரகங்களை சுற்றும்போது சொல்லவேண்டிய மந்திரம் என்ன?
- கே.விஸ்வநாத், பெங்களூர்-38.

‘ஆதித்யாயச  சோமாய மங்களாய புதாயச குருசுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நம:’ என்ற ஸ்லோகத்தைச் சொல்லி நவகிரகங்களை  பொதுவாக பிரதட்சிணம் செய்யலாம். ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியாகவும் கீழ்க்கண்ட ஸ்லோகங்களைச் சொல்லி வணங்கலாம்.

சூரியன்: ஜபாகுஸூம ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோச்மி திவாகரம்

சந்திரன்: ததிஷங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ சம்பவம்
நமாமி சசிநம் ஸோமம் ஸம்போர் மகுட பூஷணம்

செவ்வாய்: தரணி கர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்திஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம்யஹம்

புதன்: ப்ரியங்கு கலிகாஸ்யாமம் ரூபேணா ப்ரதிமம்புதம்
ஸௌம்யம் ஸௌம்ய குணாபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்

குரு: தேவானாஞ்ச ருஷீநாஞ்ச குரும் காஞ்சந ஸந்நிபம்
பக்திபூதம் த்ரிலோகேசம் நம் நமாமி ப்ருஹஸ்பதிம்

சுக்கிரன்: ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யாநாம் பரமம்குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்

சனி: நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்சரம்

ராகு: அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்ராதித்ய விமர்த்தனம்
சிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராகும் ப்ரணமாம்யஹம்

கேது:    பலாஸ புஷ்ப ஸங்காசம் தாராக க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராமகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்

நவகிரகங்களை ஒன்பது சுற்றுகள் சுற்றி வலம் வரும்போது ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி வணங்குவது நல்லது.

8. லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ‘சனியன்’ எப்படி இங்கிருக்கும் மனிதனை ஆட்டிப்படைக்க முடியும் என்று கிண்டல்  பேசுகிறார்களே, இது பற்றி உங்கள் கருத்து?
- சு.நடராசன், அடையாறு.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகைகளில் வெளியான ஒரு தகவலை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். காஸ்மிக்  கதிர்கள் பற்றிய வியப்பூட்டும் செய்தி அது.  பூமியின் தென்துருவமான அண்டார்டிகாவில் இக்கதிர்களைப் பற்றி ஆய்வு செய்து வருகின்ற  விஞ்ஞானிகள் குழு ‘பிரபஞ்சக் கதிர்கள்’ என்றழைக்கப்படுகின்ற இவற்றைப் பற்றி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். பூமிக்குத்  தென்திசையில் உள்ள வானத்தில், கப்பலின் பாய்மரம் போன்ற வடிவில் அமைந்துள்ள வெலா என்ற நட்சத்திரக் கூட்டத்தின் அருகில் இருந்து  இந்தப் பிரபஞ்சக் கதிர்கள் வருகின்றன.  இவை, பூமியின் வானிலை மாற்றத்தில் மேகமூட்டத்தை திசை திருப்புவது, காற்றில்  மின்னூட்டத்தை ஏற்படுத்தும் இடி, மின்னல்களை உருவாக்குவது போன்ற மிக முக்கியமான செயல்களில் ஈடுபடுகின்றன என்று கூறும்  விஞ்ஞானிகள் மேலும் தொடர்கிறார்கள்.

இவற்றில் உள்ள நியூட்ரினோ கதிர்கள் நிறை (mass) அதாவது, எடையும், மின்னூட்டமும் (electric force) இல்லாதவை என்பதால் பூமியில்  உள்ள பாறைகள், உலோகங்கள், மனிதர்கள் என அனைத்தின் மீதும் ஊடுருவிச் செல்கின்றன, இதனால் மனிதனின் மீது உண்டாகும் தாக்கம்  என்ன என்பதைப் பற்றி ஆராய்ந்து வருவதாகவும் கூறுகிறார்கள்.இங்கே நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் பல லட்சக்கணக்கான  மைல்கள் தூரத்தில் இருந்து வெளிப்படும் பிரபஞ்சக் கதிர்கள் மனிதனின் மீதும், பூமியின் தட்ப வெப்ப சூழ்நிலையின் மீதும் தனது ஆற்றலை  செலுத்த முடியும் என்றால் அதேபோல நவகிரகங்களிலிருந்து வெளிப்படும் கதிர்களின் தாக்கம் மனிதனை ஏன் பாதிக்காது? பூமியிலிருந்து   மிகத்தொலைவில் இருக்கும் கோள்கள் எவ்வாறு மனிதனை இயக்க முடியும், குருவும், சனியும் எவ்வாறு நன்மை தீமைகளை செய்ய முடியும்  என்றெல்லாம் கேலியும், கிண்டலுமாக வினா எழுப்பி வந்த நாத்திகர்களுக்கு சரியான பதில் தரும் வகையில் இன்றைய விஞ்ஞானிகளின்  இந்த ஆராய்ச்சி முடிவு அமைந்திருக்கின்றது என்றே கூறலாம்.
 
இவற்றையெல்லாம் பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாக ஆராய்ந்துதான் நமது முன்னோர்களும், வானவியல் அறிஞர்களும், சித்த  புருஷர்களும் நவகிரகங்கள் மனிதனின் மீதும், பூமியின் இயற்கையான தட்ப வெப்ப நிலையின் மீதும் தங்கள் ஆதிக்கத்தினை செலுத்துகின்றன  என்ற தகவலையும் கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள்.  இந்த மெய்ஞ்ஞானக் கருத்தினை இன்றைய நவீனகால விஞ்ஞானிகளும் தங்களின்  ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபித்து வருகிறார்கள்.

9. ‘அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி’ என்கிறார்களே.. இதனை சற்று விளக்கமுடியுமா..?
- எஸ்.சுவாமிநாதன், வியாசர்பாடி.
‘அகப்பட்டவனுக்கு அஷ்டமத்திலே சனி’ - இது ஏதோ எதுகை, மோனைக்காக சொல்லப்பட்ட சொற்றொடர் அல்ல. நம் முன்னோர்கள்  வாழ்க்கையில் அனுபவித்துச் சொன்ன வார்த்தைகள் இவை. பொதுவாக நம் எல்லோர் ஜாதகங்களிலும் அஷ்டம ஸ்தானம் எனும் எட்டாம்  இடம் முக்கிய அங்கம் வகிக்கும். வாழ்க்கையில் நாம் அனுபவிக்க உள்ள கஷ்டங்களைப் பற்றி எடுத்துரைக்கும் பாவகம் அது. எட்டாம்  பாவகத்தில் கிரகங்கள் ஏதுமின்றி சுத்தமாக அமையப்பெற்ற ஜாதகர் சிரமம் ஏதுமின்றி வாழ்வினில் நற்பலன்களை அனுபவித்து வருவார். சுப  கிரகங்கள் அமைந்தால் சுபசெலவுகளை வாழ்வினில் அடிக்கடி சந்திக்க நேரிடும். மாறாக எட்டாம் பாவகத்தில் சனி அமர்ந்தால் நிறைய  கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனாலேயே எட்டாம் பாவகத்தை மறைவு ஸ்தானம் அதாவது, மறைத்து பலன் உரைக்க  வேண்டிய ஸ்தானம் என்று ஜோதிடர்கள் அதனைப் பிரித்து வைப்பார்கள்.

“ஜனன ஜாதகத்தில் எட்டில் சனி இருக்க, தற்போது கோச்சார ரீதியாக அஷ்டம சனியும் நடக்க, சனி தசையோ அல்லது புக்தியோ நடக்கக்  காண்பவன் நிச்சயமாக அகப்பட்டுக் கொள்வான்” என்கிறது ஜாதகாலங்காரம் எனும் நூல். அதாவது, ‘சிறைக்குச் செல்வான்’ என்பதே இதன்  பொருள். இந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக அந்த ஜாதகனுக்கு அவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும் சரி, சிறைவாசம் என்பதனை  அனுபவிக்க வேண்டியிருக்கும். தியாகிகள், அறப்போராட்டத்தில் ஈடுபடுவோர் என நல்லோர் உட்பட எவராயினும்  அகப்பட்டுக்கொள்வதற்கு அஷ்டமத்துச் சனியும் ஒரு காரணம். 

தெரிந்தே தவறு செய்பவன்கூட அகப்படாமல் தப்பித்து வருவதையும் காண்கிறோம். இவர்கள் ஜாதகத்தில் சனியின் தாக்கம் அதிகம்  இல்லாமல் இருக்கும்.‘பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்’ என அடுத்தவர் செய்யும் தவறுக்கு, தவறு செய்யாதவர்கள் தண்டனை  அனுபவிக்கக் காண்கிறோம். இவர்களது ஜாதகத்திலும் அஷ்டமத்துச் சனி நன்கு தன் பணியினைச் செய்து கொண்டிருக்கும். அதற்குரிய காலம்  மாறும்போது அகப்பட்டவன் விடுபட்டு நன்மை காண்பான். ஏழரைச் சனியை விட அதிக சிரமத்தினை அஷ்டமத்துச் சனி தரும் என்பதனை  சுருங்கச் சொல்லவே ‘அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி’ என்ற பழமொழி உருவாகியிருக்கிறது. அஷ்டம சனியின் காலத்திற்குள்  இருப்பவர்கள் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, பிச்சைக்காரர்களுக்கு தங்களால்  இயன்ற தானம் செய்ய சனியினால் உண்டாகும் சிரமம் குறைந்து சற்று நிம்மதி காண இயலும்.