முதலைமேல் பயணம் செய்த பூசாரி
அணைக்கரை
அணைக்கரை என்ற ஊரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றுத் தண்ணீரில் ஒரு குழந்தை மிதந்து வந்தது. ‘‘என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்,’’ என்ற அந்தக் குழந்தையின் குரல் கேட்டு, ஊர் மக்கள் ஒன்று கூடினர். ஆற்றில் மிதந்து வரும் குழந்தையைப் பார்த்தனர். பதறினர். குழந்தையை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் மக்கள் திகைத்து நின்றனர்.
அப்போது ஓர் அசரீரி ஒலித்தது: ‘‘குழந்தையை காப்பாற்றுங்கள். நீங்கள் வரும்போது ஆறு உங்களுக்கு வழிவிடும்’’ உடனே மக்கள் ஆற்றில் இறங்கினர். அவர்கள் முன்னே செல்லச் செல்ல ஆற்று நீர் அவர்களுக்கு வழிவிட்டது. குழந்தையைக் காப்பாற்றி, ஊருக்குக் கொண்டுவந்தனர். ஆனால், குழந்தையை சுமந்துவந்தவர் அந்தக் குழந்தையை மேலும் சுமக்க முடியாதவாறு அதன் கனம் அதிகரிக்கவே, அதை அங்கிருந்த ஏரழஞ்சி மரத்தடியில் வைத்தனர்.
அந்தக் குழந்தை திடீரென உருமாறியது. கற்சிலையாய் அங்கேயே நிலைத்தது. அக்குழந்தையே வில்லியாண்டவர் என்னும் திருநாமத்தோடு தன் ஆலயத்திலிருந்தபடி மக்களை காத்து வருகிறார். இந்த இறைவனைக் காண ஆலயத்திற்கு வந்த நல்லநாயகி என்ற பெண் அங்கேயே தங்கிவிட அவளைத் தேடி பெண்ணின் உறவினர்கள் ஆலயத்திற்கு வந்தனர். ‘‘கவலை வேண்டாம். இவள், என் தென்புறத்தே கோயில் கொண்டு நல்ல நாயகி அம்மன் என்னும் பெயரோடு விளங்குவாள்’’ என்று அசரீரி ஒலிக்க, அப்படியே அமைந்தது. பெருக்கெடுத்து ஓடும் கொள்ளிடம் நீரை சேமித்து வைக்க நினைத்த ஆங்கிலேயர்கள் இந்த ஆலயத்தின் அருகே ஒரு அணையை கட்ட முயன்றனர். ஆனால், அணையை கட்ட கட்ட, அது இடிந்து விழுந்துகொண்டே இருந்தது.
ஆண்டவனை நினையாது நாம் பாலம் கட்டும் பணியை துவங்கி விட்டோமே என எண்ணிய ஆங்கிலேயர்கள்,வில்லியாண்டவரை வணங்கி, அவர்முன் சுமார் நாற்பது அடி உயரமுள்ள சுதையாலான யானையை வடிவமைத்து, இறைவனை வேண்டி பாலப் பணியினைத் தொடர, பணி நல்ல முறையில் நிறைவடைந்தது என்கிறார்கள்.ஆலயத்தின் வெளியே தென்புறம்வெள்ளங்காத்த விநாயகர் ஆலயமும், வடபுறம் அகோர வீரபத்திரர் திருக்கோயிலும் உள்ளன. அடுத்துள்ளது தூண்டில் கருப்பன் திருக்கோயில்.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் விஸ்தாரமான பிராகாரம். வலதுபுறம் பைரவர் தனிச்சந்நதியில். மகாமண்டபத்தை அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் இருபுறமும் துவார பாலகர்கள் காவல் நிற்க, இடதுபுறம் பிள்ளையார், வலதுபுறம் ஆதி வில்லியாண்டவர் திருமேனிகளைத் தரிசிக்கலாம்.
கருவறையில் இறைவன் வில்லியாண்டவர் பூர்ணா-புஷ்கலா சமேதராக அருள்பாலிக்கிறார். வலதுபுறம் உள்ள அம்மன் சந்நதியின் அர்த்த மண்டப வாயிலில் துவார பாலகிகள் கம்பீரமாய் நிற்க, கருவறையில் இறைவி நல்லநாயகி தன் தோழியோடு அருள்பாலிக்கிறாள்.இக்கோயில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. கொள்ளிடத்தில் ஆங்கிலேயர் அணை கட்டிய காலத்தில், இக்கோயிலின் வடமேற்கே உள்ள கோடாலி கருப்பூர் என்னும் ஊரிலிருந்து பூஜை பொருட்களுடன் ஆலய பூசாரி கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அங்கிருந்த ஒரு முதலையின் மேல் அமர்ந்து பயணம் செய்து பூஜையை முடித்துவிட்டு அதே முதலைமேல் அமர்ந்து கருப்பூர் துறைக்கு திரும்புவாராம். பின், சுவாமிக்கு படைத்த நிவேத்தியத்தை முதலைக்கு உணவாகக் கொடுப்பாராம்.
இதற்கு சாட்சியாக கருவறை கோபுரத்தின்மேல் முதலையின் மேல் பூர்ணா-புஷ்கலா சமேதராக வில்லியாண்டவர் சுதைவடிவில் காட்சி தருகிறார். குழந்தை வரம் வேண்டுவோர் இறைவன் சந்நதியில் மரத்தால் ஆன தொட்டிலைக் கட்டிவைத்து பிரார்த்தித்துக்கொள்ள அது நிறைவேறுகிறது.
திருமணத் தடை நீங்க பெண்/பையன் ஜாதகத்தை இறைவனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து தருகின்றனர். அவர்களுக்குத் திருமணம் விரைந்து நடக்கிறது. உடமைகளை பறிகொடுத்தவர்கள் தங்களது வேதனையை ஒரு சீட்டில் எழுதி வீரபத்திர சுவாமியின் கரத்தில் கட்டி ஆராதனை செய்தால் களவு போன பொருள் திரும்ப கிடைத்துவிடுகிறது!
1981ல் கோயிலைப் புதுப்பிக்கும் போது இறைவன் கருவறை அருகே ஒரு பெரிய நாகம் பொக்கலின் இயந்திரத்தில் அடிபட்டு இறக்க, கோயிலுக்கு வெளியே அந்த நாகநாதருக்கு தனி ஆலயம் அமைத்து வழிபடுகின்றனர்.ஆலயத்தின் தலவிருட்சம் ஏரழஞ்சி மரம்.கொள்ளிடம் ஆற்றை மாலை போல் அணிந்த தோரணையில் கோயில் கொண்டிருக்கும் வில்லியாண்டவருக்கு அணைகாத்த குட்டி ஆண்டவர் என்ற பெயரும் உண்டு.கும்பகோணம்-சென்னை நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது அணைக்கரை.
- ஜெயவண்ணன்
|