அக்ஷய திருதியை



அள்ள அள்ளக் குறையாது வழங்கும்

அக்ஷய திருதியை-21.4.2015

சித்திரை மாதம் பிறக்கிறது என்றவுடன் நம் அனைவரின் நினைவிற்கும் வருவது அக்ஷய திருதியை. அதுவும் கடந்த சில வருடங்களாக தீபாவளிக்கு இணையாகப் பெண்களால் பேசப்படும் பொன்னாள். நகைக்கடை அதிபர்களின் திருவிழா நாள் இது. ஏழை, பணக்காரன் என யாராக இருந்தாலும் சரி, தங்களால் இயன்ற குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்ற கருத்து தற்போது வெகுவாகப் பரவியுள்ளது. அப்படி என்னதான் சிறப்பு இந்த அக்ஷய திருதியைக்கு?

பிரதி வருடம் சித்திரை மாதம் அமாவாசை கழிந்த மூன்றாவது நாள் இந்த அக்ஷய திருதியை நாள் வரும். ‘க்ஷயம்’ என்றால் குறைவு, ‘அக்ஷயம்’என்றால் குறைவில்லாத அல்லது என்றுமே குறையாத, என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு யுகத்திலும் இந்த அக்ஷய திருதியை நாள் ஆனது மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பிரம்மா தனது படைப்புத் தொழிலைத் துவங்கியது இந்த நாளில்தான். அக்ஷய திருதியை நாளில் தனது படைப்புத் தொழிலைத் துவங்கிய பிரம்மா எந்தவிதக் குறையும் இன்றி தொடர்ந்து தனது பணியைச் செய்துகொண்டிருக்கிறார்.

சந்திரன் தனது 27 மனைவிகளுள் ரோகிணியின் மீது மட்டும் தீராத காதல் கொண்டு மற்றவர்களை புறக்கணிக்கிறான் என்ற புகாரின் பேரில் அவனது மாமனார் ஆன தக்ஷனின் சாபத்திற்கு உள்ளாகி தேய்ந்து போகிறான். அந்த நிலையில் சந்திரன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து சாப விமோசனம் பெற்ற நாள் இந்த அட்சய திருதியை. சந்திரனின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ‘அக்ஷய’ என்று வரம் அருளினார். தக்ஷனின் சாபத்தால் தேய்ந்து வந்தாலும் இறைவன் அருளிய அக்ஷய என்ற வரத்தால் மீண்டும் சந்திரன் வளரத் தொடங்குகிறான் என்பது புராண காலத்துக் கதை.

இக்ஷ்வாகு குல இளவரசன் பகீரதனின் விடாமுயற்சி யால் கங்கை நதி ஆகாயத்தி லிருந்து பூமிக்கு வந்தது இந்த அக்ஷய திருதியை நாளன்றுதான். அன்று முதல் இன்று வரை வற்றாத ஜீவ நதியாக கங்கை பிரவாகித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நிஜத்தில் கண்டு வருகிறோம். அக்ஷய திருதியை நாள் அன்று நம் பாரத பூமிக்கு வந்ததால் இன்றளவும் குறைவில்லாமல் நீர்வளம் நிரம்பிய நாடாக நம் தேசத்தை கங்காதேவி  காத்துக்கொண்டிருக்கிறாள்.

துரியோதனின் உத்தரவின் பேரில் திரௌபதியின் துகிலை துச்சாதனன் உரியும்போது ‘கண்ணா... நீயே எனக்கு கதி’ என்று தன்னைச் சரணடைந்த அந்த அபலையின் மானத்தைக் காக்க கண்ணன் ஓடோடி வருகிறான். அவன் அருளால் புடவையின் நீளம் குறையில்லாமல் வளர்ந்து கொண்டேயிருக்க, துகிலுரித்த துச்சாதனன் மயங்கி விழுந்ததுதான் மிச்சம். இவ்வாறு திரௌபதியின் மானம் காக்க கண்ணன் புடவையை அருளியது இந்த அக்ஷய திருதியை நாளில் என்கிறது மகாபாரதம்.

திருமால் தனது பத்து அவதாரங்களில் ஒரே நேரத்தில் இரண்டு அவதாரமாக வாழ்ந்து காட்டியது துவாபரயுகத்தில். பலராமன் ஆகவும், கண்ணன் ஆகவும் யதுகுல சகோதரர்களாக, கோசம்ரக்ஷணை என்பது மிகவும் இன்றியமையாதது என்பதை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டினர். பசுக்களை பராமரித்தால் குறையில்லாத செல்வம் நிறைந்திருக்கும் என்பதை உலகிற்கு உணர்த்திய பலராமன் பிறந்தது இந்த அக்ஷய திருதியை அன்றுதான்.

பாண்டவர்கள் வனவாசம் செய்த காலத்தில் காட்டினில் உணவு சமைக்க மிகவும் சிரமப்பட்டாள் திரௌபதி. பீமனுக்கு உணவு சமைக்க வேண்டும் என்பதற்காக அல்ல, தங்களை நாடி வரும் முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் குறையின்றி அமுது படைக்க இயலாது போகிறதே என்று மனம் வருந்தினாள். செய்வதறியாது திகைத்த திரௌபதி சூரிய பகவானை நினைத்து வழிபட்டாள். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசீர்வதித்தார் சூரிய பகவான். குறையின்றி உணவினை வழங்க வல்லது என்பதால் அதற்கு அக்ஷய பாத்திரம் என்ற பெயர் வந்தது.

இதெல்லாம் சரி, தங்க நகை வாங்கி வைப்பதற்கும், இந்த அக்ஷய திருதியை நாளுக்கும் என்ன சம்பந்தம்? செல்வத்திற்கு அதிபதியான குபேரன் முதன்முதலில் மகாலக்ஷ்மியிடம் இருந்து செல்வத்தைப் பெற்ற நாள் இந்த அக்ஷய திருதியை நாள். செல்வத்தினை பாதுகாத்து, பெருக்கும் பொறுப்பினை மகாலக்ஷ்மி தாயாரிடம் அக்ஷய திருதியை நாளில் பெற்றுக் கொண்டதால் குபேரனின் கிடங்கினில் செல்வம் என்பது அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது என்பது நமது நம்பிக்கை.

இது மட்டுமல்ல, வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய சிநேகிதனும், துவாரகையின் அரசனுமான ஸ்ரீகிருஷ்ணனை சந்திக்கச் சென்றபோது தனது மனைவி கொடுத்து அனுப்பிய அவல் மூட்டையை கண்ணனிடம் கொடுக்காமல் தயங்கி நிற்க, புரிந்து கொண்ட கண்ணன் குசேலனின் கையில் இருந்த அவலை வாங்கி வாயில் போட்டு ‘அக்ஷய’ என்று வாய் திறந்து அருளினான். மறு கணமே சுதாமா என்கிற குசேலனின் குடிசை மாட மாளிகையாக மாறியதோடு மட்டுமல்லாமல் அவனது இல்லத்தில் செல்வமும் நிறைந்தது. இவ்வாறு கண்ணன் தனது வாய் திறந்து ‘அக்ஷய’ என்று அருளியது இந்த அக்ஷய திருதியை நாளில்.

இந்த கலியுகத்தில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் தனக்கு நெல்லிக்கனியை பிட்சையிட்ட ஏழைப் பெண்மணியின் துயர்துடைக்க கனகதாரா ஸ்தோத்ரம் படைத்து மகாலட்சுமியின் அருளினால் அந்தப் பெண்மணியின் இல்லத்தில் செல்வத்தை நிறையச் செய்தது இந்த அக்ஷய திருதியை நாளில். கனகம் என்றால் தங்கம் என்று பொருள். தாரை என்றால் விடாமல் பொழிவது. இவ்வாறு தங்கத்தை விடாமல் பொழியச் செய்யும் சக்தி படைத்த கனகதாரா ஸ்தோத்ரத்தை சங்கரர் இயற்றியது இந்த அக்ஷய திருதியை நாளில் என்பதால் இந்த நாளானது தங்கத்திற்கு முக்கியத்துவம் தரும் நாளாக அமைந்துவிட்டது.

அக்ஷய திருதியை என்றதும் தங்கத்தினை மட்டும் நினைவில் கொள்ளும் நாம் மேற்சொன்ன கதைகளில் இருந்து முக்கியமான ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள மறந்துவிடுகிறோம். அக்ஷய திருதியை நாளில் செல்வம் சேரும் என்பதை மட்டும் புரிந்துகொள்ளும் நம்மால் இந்தக் கதைகளில் சொல்லப்பட்டுள்ள உட்கருத்தினை அறிந்துகொள்ள இயலவில்லை. தனது வீட்டினில் பிட்சையிடுவதற்கு எதுவும் இல்லாவிட்டாலும் ‘பவதி பிட்சாந்தேஹி’ என்று வாசலில் வந்து நிற்கும் சங்கரனுக்கு அந்த ஏழைப் பெண்மணி தன்னால் இயன்ற நெல்லிக்கனியை எவ்வித தயக்கமும் இன்றி பிட்சையிட்டாள்.

கண்ணனுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையென்றாலும் தன்னால் இயன்ற அவலையும் வெல்லத்தையும் கலந்து தனது கணவனிடம் கொடுத்து அனுப்பினாள் ஏழை குசேலனின் மனைவி. வனவாசம் செய்யும்போது கூட அந்த கஷ்டமான சூழலிலும் தங்களை நாடி வரும் ரிஷிகளும், முனிவர்களும் வயிறார உண்ண வேண்டும்,

 அவர்கள் பசியினைப் போக்க வேண்டும் என்பதற்காக சூரிய பகவானிடமிருந்து அக்ஷய பாத்திரத்தைப் பெற்றுக் கொண்டாள் திரௌபதி. ஆக, அக்ஷய திருதியை நாளில் அடுத்தவர்களுக்கு அன்னமிட வேண்டும் என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இறைக்கின்ற ஊற்றுதான் சுரக்கும். நாம் அள்ளி அள்ளி கொடுத்தால்தான் நம் வீட்டினில் அள்ள அள்ளக் குறையாத செல்வம் சேரும் என்பதே அக்ஷய திருதியை நாளில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியதாகும்.

ஜோதிடவியல் ரீதியாக ஆராய்ந் தால் நவகிரஹங்களில் நம் கண்களுக்குத் தெரிகின்ற சூரியனும், சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அக்ஷய திருதியை நாள். அதாவது, சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் காலமே அக்ஷய திருதியை நாள் ஆகும். சூரியனும், சந்திரனும்தான் நமக்கு உணவினை அளிக்கும் கோள்கள். நீர் வளத்தினைத் தருவது சந்திரன்.

சூரியனின் அருளில்லாவிட்டால் பயிர்கள் விளையாது. சூரியன், சந்திரனின் ஆசியினால்தான் பயிர்கள் விளைகின்றன. குறைவின்றி வயிறு நிறைய சாப்பிடுகிறோம். அவர்கள் உச்ச வலிமையோடு சஞ்சரிக்கும் காலத்தில் அன்னதானத்தினைச் செய்தோமேயானால் அன்னத்திற்கு என்றுமே பஞ்சம் வராது. தங்கத்தை நம்மால் சாப்பிடமுடியாது. எவ்வளவு தான் தங்க நகைகளைச் சேர்த்து வைத்தாலும், தவித்த வாய்க்குத் தண்ணீர் வேண்டும். தாகத்தைத் தீர்த்து வைப்பவனிடம்தான் தங்கமும் சேரும்.

எல்லாவற்றிற்கும் மேலாக சிவபெருமான் பிட்சாடனர் ஆக அலைந்தபோது அவருக்கு பிச்சையிட, அன்னையானவள் அன்னபூரணியாக வடிவெடுத்து வந்ததும் இந்த அக்ஷய திருதியை நாளில் என்று சிவபுராணம் சொல்கிறது. மகத்துவம் வாய்ந்த இந்த நன்னாளில் நகைகள் வாங்கி சேர்த்து வைப்பது மட்டும் நம் நோக்கமாகிவிடக் கூடாது.. அக்ஷய திருதியை என்றால் அன்னதானம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். (குறிப்பாக நகைக்கடை அதிபர்கள் அக்ஷய திருதியை நாளில் அன்னதானம் செய்வதன் மூலம் மேன்மேலும் தங்கள் வியாபாரம் சிறக்கக் காண்பார்கள்.

நகை வாங்குவதற்கு வரும் வாடிக்கையாளர்களுக்குக் கூட தங்களால் இயன்ற உணவினை அளிக்கலாம். வியாபாரம் பெருகுவதோடு வயிறு நிறையும் வாடிக்கையாளர்களின் வாழ்த்துகளையும் பெறலாம்.) இந்த நாளில் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அது காலமெல்லாம் தொடர்ந்து கொண்டிருக்கும்.

அக்ஷய திருதியையின் பெருமையைப் புரிந்து கொண்டு அந்த நாளில் ஆதரவற்ற முதியவர்கள், அநாதைக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு நம்மால் இயன்ற அன்னதானத்தினையும், பொருளுதவியையும் செய்வோம். தங்கம் மாத்திரமல்ல, எல்லாவிதமான வளங்களும் அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு நம் வாழ்வினில் வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.