மங்களமும் மகிழ்ச்சியும் உண்டாகும்



என்ன சொல்லுது எதிர்காலம்?

? என் பேரன் முன்கோபம், பிடிவாதம், அடிக்கடி மனம் மாறி எதிலுமே திடமான முடிவு எடுக்க முடியாமை போன்றவற்றால் அவதிப்படுகிறான். தற்போது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் நன்கு படிக்கக் கூடியவன்தான். ஆனாலும் பயப்படுகிறான். எந்தத் தடையுமின்றி படிப்பை முடிப்பானா? வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்க்கும் அம்சம் உள்ளதா? நல்ல உடல்நலத்தோடு தன் பெற்றோரை கவனிப்பானா? திருமணம் எந்த வயதில் நடைபெறும்? பெற்றோரின் விருப்பப்படி செய்து கொள்வானா. சகோதரியுடன் பாசத்துடன் இருப்பானா? தெய்வபக்தி ஏற்படவில்லை, தன் பேச்சைத்தான் கேட்க வேண்டும் என அடம் பிடிக்கிறான். அனுசரித்து செல்லும் மனப்பக்குவம் ஏற்பட வழி கூறுங்கள்.
- எஸ்.ருக்மிணி, ஈரோடு.

பேரன் ஜாதகத்தை சாராவளி எனும் பழைய நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தேன். சூரியன், புதன், சுக்கிரன், சனி, கேது ஆகிய ஐந்து கிரகங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இதனால் நீண்ட ஆயுள் அவருக்கு உண்டு. குருபகவான் நீசமாக இருந்தாலும் சனி வீட்டில் குரு, குரு வீட்டில் சனி என்ற பரிவர்த்தனை யோகம் உள்ளது. இதனால் உங்கள் பேரன் சமூகத்தில் கௌரவமான வாழ்க்கை வாழக்கூடிய அமைப்பு உண்டு. ஐந்து கிரகங்கள் ஒன்றாக இருந்தாலே கொஞ்சம் முன்கோபம் இருக்கத்தான் செய்யும். பிடிவாத குணமும் இருக்கும். இந்த ஐந்து கிரக சேர்க்கையில் சூரியன், சனி, கேது மூன்றும் கிரக யுத்தம் செய்து கொண்டிருக்கின்றன.

 இதனாலும், சூரியனின் ஒளிக் கீற்றில் சுக்கிரன் அஸ்தங்கமாகி சூரியனும், சுக்கிரனும் இரண்டரை பாகைக்குள் இருப்பதாலும் அவருக்கு முடிவெடுப்பதில் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும்; அடிக்கடி கோபம் வருகிறது. பிடிவாதமாகவும் இருக்கிறார். ராகுவும், சந்திரனும் சேர்ந்திருப்பதால் பெரிய பாதிப்புகள் இல்லை. சந்திரனும், ராகுவும் வெவ்வேறு நட்சத்திரங்களில் அமர்ந்திருப்பதாலும், கிட்டத்தட்ட பதினான்கு டிகிரியில் இரண்டு கிரகங்களும் விலகியிருப்பதால் சந்திரன், ராகுவால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

பரிகாரமும் தேவையில்லை. சனி லக்னத்தில் இருப்பதால் இவருக்கு எதிர்காலத்தில் சகிப்புத்தன்மை கொள்வார். இப்போது ஏழரைச் சனி முடிவடைந்துவிட்டது. எனவே, இனிமேல் படிப்பில் ஆர்வம் பிறக்கும். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை நல்ல முறையில் முடிப்பார். தசா புக்திகளை அடிப்படையில், சந்திர தசை, செவ்வாய் தசை முடிவடைந்து இப்போது ராகு மகாதசை நடைபெறுகிறது. இந்த ராகு மகாதசையில் 19.12.2014 அன்று சனி புக்தி முடிவடைந்து 20.12.2014 முதல் புதன் புக்தி தொடங்குகிறது.

புதன் வித்தைக்காரகன், கல்விக்குரிய கிரகம் நீசபங்கமடைந்து லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். எனவே, 20.12.2014 முதல் கல்வியில் ஆர்வம் உண்டாகும். இன்ஜினியரிங்கை நல்ல முறையில் முடிப்பார். கவலை வேண்டாம். இவருக்கு நல்ல மனநலமும், உடல் நலமும் 20.12.2014 முதல் எதிர்பார்க்கலாம். திருமணம் குறித்து கவலைப்படாதீர்கள். ஏனென்றால், அடுத்தடுத்து வரக்கூடிய தசா புக்திகளெல்லாம் இவருக்கு நன்றாக இருப்பதாலும் ஏழரைச் சனியை இவர் இப்போதே முடித்துவிட்டதாலும் திருமணம் நல்ல விதத்தில் நடைபெறும்.

7ம் இடத்தில் ராகு இருப்பதாலும் 7க்குரியவர் புதன், கேதுவுடனும், சனியுடனும் நிற்பதாலும் சரியானபடி பொருத்தம் பார்த்து மணப்பெண்ணை தேர்ந்தெடுப்பது நல்லது. செவ்வாய் சிம்மத்தில் இருப்பதால் சகோதரியுடன் பாசமாக இருப்பார். சகோதரியை கவனித்துக் கொள்வார்.

ஆனால், செவ்வாய் வக்ரமாகி இருப்ப தால் வெவ்வேறு நாடுகளில் அல்லது மாநிலங்களில் சகோதரியும் இவரும் வருங்காலத்தில் இருப்பார்கள். ஐந்து கிரகங்கள் லக்னத்தில் அமர்ந்திருப்பதால் ஒருவிதமான ஹீரோயிசமும் தன்னுடைய கருத்துகளுக்கு மற்றவர்கள் மரியாதை தர வேண்டும். தான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டுமென்ற எண்ணமும் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். வருங்காலத்தில் அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். குறிப்பாக 29 வயது முதல் இவருக்கு குரு மகாதசை தொடங்க இருக்கிறது. குரு மகாதசையில் பிடிவாத குணம் நீங்கும்.

மற்றவர்களுடன் அனுசரித்துப் போகக்கூடிய எண்ணங்கள் உருவாகும். சகிப்புத் தன்மையும் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நல்லது செய்யக்கூடிய எண்ணமும் அதிகரிக்கும். நல்ல மனப்பக்குவத்துடன் 29 வயது முதல் நடந்து கொள்வார்.

இவருக்கு வருங்காலமும் சிறப்பாகவே இருக்கும். இந்த கிரக யுத்தங்களும், கிரக அஸ்தங்களும் இவருடைய ஜாதகத்தில் இருப்பதற்கு பரிகாரமாக சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசனம் செய்வது நல்லது. அப்படியே சிதம்பரத்திற்குள்ளேயே அமைந்துள்ள தில்லை காளியையும் தரிசித்து வணங்கச் செய்யுங்கள். வருடம் ஒருமுறை சிதம்பரம் சென்று தரிசனம் செய்வதன் மூலமாக கிரக யுத்தத்தாலும், அஸ்தங்கத்தாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கும். எல்லா வளங்களும் உங்களுடைய பேரனுக்கு கிட்டும்.

? என்னுடைய மகளால் தாங்க முடியாத அளவிற்கு மனவேதனை, பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவளுடைய முதல் திருமணம் முறிந்தது. என் ஜாதகப்படி வரும் காலங்களிலாவது என் மகளால் மகிழ்ச்சி கிடைக்குமா? எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பாக்கித் தொகை கிடைக்க வாய்ப்புள்ளதா?
பரிகாரம் என்ன?
- வி.எம்.சுந்தரம், சென்னை.

உங்களுடைய ஜாதகத்தை ஜாதகப் பாரிஜாதம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தேன். விருச்சிக லக்னம், சிம்ம ராசியில் பிறந்திருக்கிறீர்கள். ஆனால், உங்களுடைய ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருப்பதாலும், லக்னாதிபதி சற்றே வலுவடைந்திருப்பதாலும்தான் அடுத்தடுத்து நீங்கள் ஏமாற்றங்களையும், இழப்புகளையும் சந்திக்க நேரிட்டது. உங்களின் பிரபல யோகாதிபதியான தன-பாக்யாதிபதியான அதாவது, லக்னத்திலிருந்து 2ம் வீட்டிற்கும், 5ம் இடத்திற்கும் உரியவரான குரு, ராசிக்கு 5ம் வீட்டிற்கும், 8வது வீட்டிற்கும் உரியவராக வருகிறார்.

அப்படிப்பட்ட குரு உங்களுடைய ஜாதகத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். ஆனால், டிகிரி வகையிலும், ஜாதகப் பாரிஜாதம் நூலின்படியும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி சிஸ்டத்தின் அடிப்படையிலும் பார்க்கும்போதும் குரு உங்களுக்கு ஆயில்யம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அமர்ந்திருக்கிறார். ஆனால், குரு உச்சமடைவது பூசம் நட்சத்திரத்தில்தான். உங்களின் லக்னத்திற்கு அஷ்டமாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் குரு அமர்ந்திருப்பதால்தான் உச்சம் பெற்றதற்கான பலம் உங்களுக்கு கிடைக்காது.

சாதாரணமாகப் பார்க்கும்போது குரு உச்சம் என்று தெரியும். ஆனால், குரு உங்களுக்கு மிகவும் பலவீனமாக இருக்கிறார். அதனால்தான் உங்களுக்கு மகளால் வேதனையும், இழப்புகளும், வருத்தங்களும் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. தற்சமயம் ராகு மகாதசை நடைபெற்று கொண்டிருக்கிறது. 28.12.2004 முதல் ராகு தசை தொடங்கியுள்ளது. 28.6.2015 வரை உங்களுக்கு ராகு தசையில் புதன் புக்தி நடைபெறும்.

புதன் உங்கள் ஜாதகத்தில் அஷ்டமாதிபதியாக வருகிறார். அஷ்டமம் வந்தால் அலைச்சல், பயணங்கள், திடீர் இழப்புகள், ஏமாற்றங்கள் இவற்றிற்கெல்லாம் உரியவராகவும் அதே சமயத்தில் யோகத்தை தரக்கூடிய லாபஸ்தானத்திற்கும் அதிபதியாகவும் வருகிறார். இப்படி புதன் கலந்து வருவதால்தான் நல்லதும், கெட்டதும் சேர்ந்து உங்களுக்கு ஏற்படும். புதன் அஷ்டமாதிபதி புக்தி நடைபெற்று கொண்டிருப்பதால்தான் நீங்கள் சொத்தை விற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. பாக்கித் தொகை நிச்சயம் உங்களுக்கு கிடைத்து விடும்.

கோச்சார கிரகங்களையும், தசா புக்திகளையும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, 28.6.2015 முதல் உங்களுக்கு நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பூமிக்காரகனும், லக்னாதிபதியுமான செவ்வாய் சூரியனுடனும், பாதகாதிபதியான சந்திரனுடன் சேர்ந்திருப்பதனால்தான் பூமியாலும் உங்களுக்கு சில பிரச்னைகளும், இழப்புகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஹோரா ரத்தினம் என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு பார்க்கும்போது பரிகாரமாக நீங்கள் திருச்செந்தூர் சென்று வருவது நல்லது. முடிந்தால் ராமநாதபுரத்திற்கு அருகேயே அமைந்துள்ள உத்தரகோசமங்கை எனும் தலத்தில் அருள்பாலிக்கும் ஈசனை வணங்கி வந்தால் கொஞ்சம் கர்ம வினைகளெல்லாம் நீங்கி நிம்மதி உண்டாகும்.

உங்கள் மகளுக்கும் இரண்டாவது திருமணம் செய்து வைக்கும் வாய்ப்பு உண்டாகும்.  17.7.2016 முதல் ராகு மகாதசையில் சுக்கிர புக்தி தொடங்குவதிலிருந்து பணவரவு, மனநிம்மதி, மகளுக்கு இரண்டாவது திருமணம் கூடி வரும் வாய்ப்பும் உள்ளது. குரு மகாதசை உங்களுக்கு மத்திம பலன் தருவதாக இருக்கும். எனவே, நீங்கள் குரு மகா தசையில் பணத்தை முதலீடு செய்து வியாபாரம் தொடங்குவது போன்ற பெரிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். 29.12.2022 முதல் குரு மகாதசை தொடங்கும். எனவே உங்களுக்கு நிம்மதியையும், ஆன்மிக நாட்டத்தையும், ஓரளவு வளர்ச்சியையும் தரக் கூடியதாக அமையும்.

? நான் கணவரை இழந்தவள். என் மகனுக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றது. ஒரு பேரன் உண்டு. எனது பையன் என்மேல் மிகவும் பிரியமாக இருப்பான். எனது மருமகள் தகப்பனை இழந்த பெண். ஏழ்மையான குடும்பம் நான் பாவம் என்று என் மகனுக்கு திருமணம் செய்து வைத்தேன். அனால், மருமகள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டேயிருக்
கிறாள். என் மகனை அமைதியாக இருக்கவே விடுவதில்லை.

நான் வேலைக்குப் போய்விடுவேன். என்னுடனும் சண்டை போட்டபடி இருக்கிறாள். என் மகனை தனியாகப் பிரித்துக் கொண்டுபோய் விடுவாளா? என் மகனை நம்பி நான் இருக்கிறேன். எனது எதிர்காலம் என்ன? எனக்கு வி.ஆர்.எஸ் கிடைக்குமா? என் மருமகள் திருந்தி வருவாளா? என் குடும்பம் அமைதியாக ஒற்றுமையாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்? - ஜே.சண்முகவள்ளி, காரைக்குடி.

உங்களுடைய ஜாதகத்தை பிருகத் ஜாதகம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தேன். நீங்கள் மிதுன லக்னம், சிம்ம ராசியில் பிறந்திருக்கிறீர்கள். மிதுன லக்னத்திற்கு பாதகாதிபதியான குருபகவான் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். புத்திரகாரகனான குரு புத்திர ஸ்தானத்தில் அமர்ந்ததால் புத்திர சூன்யம் என்று பழைய நூல்கள் கூறுகின்றன. அதனாலேயே உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் கருத்து மோதல்களெல்லாம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

உங்களுடைய ஜாதகத்தில் பூர்வ புண்யாதிபதியும், புத்திர ஸ்தானாதிபதியுமான சுக்கிரன் 6ம் வீட்டில் சென்று மறைந்திருக்கிறார். லக்னாதிபதி புதன், பாக்யாதிபதி சனி இப்படி பல முக்கிய கிரகங்களெல்லாம் 6ம் வீட்டில் சென்று மறைந்துவிட்டன.

அதனால், நீங்கள் கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உங்களுடைய மகனின் நட்சத்திரம் அவிட்டம், உங்களுடைய மருமகளின் நட்சத்திரம் விசாகம். இப்போது உங்கள் மருமகளுக்கு ஏழரைச் சனி நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏழரைச் சனி உங்கள் மருமகளுக்கு டிசம்பர் 2017 வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் கொஞ்சம் மகனோடும், மருமகளோடும் போராட்டம் இருக்கத்தான் செய்யும். உங்களுடைய ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்க்கும்போது நீங்கள், மகனை தனிக்குடித்தனம் வைப்பது நல்லது என்றே தோன்று கிறது. ஏனென்றால், உங்களுடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரன் 6ம் வீட்டில் மறைந்திருக்கிறார்.

எனவே, நீங்கள் மகனை பிரிந்தி ருப்பது நல்லது. உங்களுடைய மகனும் தனியாக இருந்தால் அவருடைய வாழ்க்கை இன்னும் முன்னேறும். 2018 முதல் உங்கள் மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் என நீங்கள் ஒன்று சேர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, நீங்கள் வி.ஆர்.எஸுக்கு முயற்சிக்கவேண்டாம். தொடர்ந்து நீங்கள் உத்யோகம் பார்ப்பது நல்லது. உத்யோக ஸ்தானம் வலுவாக இருப்பதால் கவலையடையாதீர்கள்.

உங்கள் மகனுக்கும், மருமகளுக்கும் நல்ல பொருத்தம் இருப்பதால் அவர்கள் நன்றாக இருப்பார்கள். 2018 ஜனவரி முதல் உங்கள் மருமகளுக்கு கோபம் குறையும். உங்கள் மகன், மருமகள், நீங்கள் என அனைவரும் நன்றாக அமைதியாக, நிம்மதியாக வாழ கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீமகாலிங்கேஸ்வரரை வணங்கி வாருங்கள். உங்களுக்கு எத்தனை வயதாகிறதோ அத்தனை நெய் தீபமேற்றி வில்வார்ச்சனை செய்து வாருங்கள். நிம்மதி கிட்டும். எல்லா வகையிலும் உங்களுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.     

? எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? என்னுடைய பெயர் ஹரிகிருஷ்ணா என்கிற கிரண்குமார் ஆகும். நான் சொந்தமாக தினசரி நாளிதழ் கடையை வைத்து விற்பனை செய்து வருகிறேன்.

- எம்.ஒய்.கிரண்குமார், குடியாத்தம். உங்களுடைய ஜாதகத்தை உத்திர காலமிர்தம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தேன். மீன லக்னம் கடக, ராசியில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கடின உழைப்பால் முன்னேறும் அமைப்பும் இருக்கிறது.

தற்சமயம் நடைபெறும் தசா புக்திகள், கோச்சார கிரகங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது 27.8.2015 முதல் உங்களுக்கு திருமண வாய்ப்பு உள்ளது. உங்களுடைய
ஜாதகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் 12ல் மறைந்திருப்பதால் ஜாதகப் பொருத்தம், கிரகப் பொருத்தம் பார்த்து திருமணம் முடிக்க வேண்டும்.

அதேபோல உங்களின் ஜாதகத்தில் மனைவி ஸ்தானத்திற்குரிய கிரகம் நன்றாக இருப்பதால் திருமணத்திற்கு பிறகு நல்ல முன்னேற்றம் உண்டு. மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பவராகவும், எல்லா வகையிலும் உங்களுக்கு ஆதரவு தரக்கூடியவராகவும் இருப்பார். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணவரவு உண்டு. திருமணம் விரைந்து முடியவும், திருமண வாழ்க்கை சிறக்க நீங்கள் பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனுக்கு நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். திருமணம் விரைந்து முடியும்.

? என் மகளுக்குத் திருமணமாகி ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் மகள், மருமகன் இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. திருமணமான அன்றிலிருந்தே பையன், தன் பெற்றோர் சொல்கேட்டு எங்கள் பெண்ணை உதாசீனப்படுத்துகிறார். தற்சமயம் அவர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.

தற்போது அவர் என் மகளை டைவர்ஸ் செய்து விடுகிறேன் என்று கூறுகிறார். எங்கள் பெண் இதுவரை எந்த முடிவும் கூறவில்லை. நாங்களும் எந்த முடிவுக்கும் வரவில்லை. இவர்கள் சேர்ந்து வாழ எதிர்காலம் துணையாக இருக்குமா? அல்லது விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவார்களா?
- ஒரு வாசகர், திருச்சி.

உங்களுடைய மகள், மருமகன் ஜாதகங்களை குமாரசுவாமியம், பிருகு சூத்திரம் ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தேன். உங்களுடைய மகள் கடக லக்னம், மீன ராசியில் பிறந்திருக்கிறார். ஆனால் மகளின் ஜாதகத்தில் புதன், சுக்கிரன், சூரியன், கேது ஆகிய நான்கு கிரகங்களும் 6வது வீட்டில் சென்று மறைந்து விட்டன. களத்திரக்காரகன் சுக்கிரன் 6ல் மறைந்தாலே திருமண வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும்.

 களத்திர ஸ்தானாதிபதி சனியும் நவாம்சத்தில் கேதுவுடன் சேர்ந்து நிற்பதும் மணவாழ்க்கையில் போராட்டத்தைத் தரும். மகளுக்கு தற்சமயம் சுக்கிர தசை; 22.5.2014 முதல் சுக்கிர தசையில் புதன் புக்தி தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. சுக்கிரன் 6ல் சென்று மறைந்திருப்பதால்தான் உங்களுடைய மகளின் வாழ்க்கை இப்படி இருக்கிறது. முப்பத்து ஐந்தேகால் வயது வரை இந்த சுக்கிர தசை இருக்கும்.

கடந்த ஐந்தரை வருடங்களாக உங்களுடைய மகளுக்கு கண்டகச்சனி, அஷ்டமத்துச்சனியெல்லாம் வரிசையாக நடைபெற்றது. அதனுடைய தாக்கத்தாலும் கணவன்-மனைவி இருவருக்குள்ளே சண்டை, சச்சரவு, பிரச்னை, பிரிவு என்று நிலவியது. இப்போது அஷ்டமத்துச் சனி முடிவடைந்துவிட்டது. இனிமேல் அதாவது, ஜனவரி 2015 முதல் உங்கள் மகளுக்கு நிம்மதி உண்டாகும். தசா புக்திகள், கோச்சார கிரகங்களெல்லாம் கொஞ்சம் வலுவடைகின்றன. நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

உங்களுடைய மருமகன் சிம்ம லக்னம், சிம்ம ராசியில் பிறந்திருக்கிறார். அவர் ஜாதகத்தில் சப்தமாதிபதி சனிபகவான் பகைபெற்று அமர்ந்திருப்பதோடு, நவாம்சத்தில் நீச்சகதியில் இருக்கிறார். அவர் ஜாதகத்திலும் லக்னாதிபதி சூரியனுடன், களத்திரக்காரகன் சுக்கிரனும், குடும்ப ஸ்தானாதிபதி புதனும் 6ல் மறைந்திருக்கிறார்கள்.

எனவே, அவருடைய ஜாதகத்திலும் சுக்கிரன் பலவீனமாக இருக்கிறது. 19.9.2008 முதல் அவருக்கு ராகு மகாதசை நடைபெற்று கொண்டிருக்கிறது. ராகு குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால்தான் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியற்ற, பிடிப்பற்ற போக்கு, மனைவியுடன் ஒத்துப்போக முடியாத நிலையெல்லாம் ஏற்பட்டுள்ளது.

நட்சத்திரப் பொருத்தங்களை மட்டும் பார்க்காமல் ஜாதகப் பொருத்தம், கிரகப் பொருத்தங்களையும் பார்த்து திருமணம் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருக்கும்போது, வரனின் ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருக்கிறதா என்று பார்த்திருக்க வேண்டும். இப்படி இருவருக்கும் சுக்கிரன் கெட்டுப் போயிருப்பதாலும், சப்தமாதிபதி பலவீனமாக இருப்பதாலும் தான் தொடர்ந்து சிக்கல்கள்.

இவர்கள் விஷயத்தில் நீங்கள் அதிகம் தலையிடாமல் கொஞ்சம் பொறுமை யாக இருங்கள். உங்கள் மகளின் போக்கிலேயே விடுவது நல்லது. அவர் முடிவெடுக்கட்டும். உங்கள் மகள் வாழ்க்கையில் உங்களுடைய கருத்துகளை திணிக்க வேண்டாம். உங்களுடைய மகளின் ஜாதகப்படி ஜனவரி 2015 முதல் கணவன்-மனைவி சேர்ந்து வாழ வாய்ப்பிருக்கிறது. ஆகவே விவாகரத்தைப் பற்றி யோசிக்காதீர்கள்.

அதனால் பொறுமையாக இருங்கள். இருவருக்கும் இணக்கமான அன்யோன்யமான சூழ்நிலை உருவாவதற்கு திருநள்ளாறு சென்று சனீஸ்வர பகவானை வணங்கிவிட்டு. திருக்கடையூர் சென்று ஸ்ரீஅபிராமி அம்மனுக்கு குங்குமார்ச்சனை செய்து வாருங்கள். இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் மகளின் வாழ்க்கையில் மங்களமும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

ஜோதிட  ரத்னா கே.பி.வித்யாதரன்