ஒழுக்கம் நிலைக்க ஆன்மிகப் பயிற்சி தேவை
ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!
அழுக்குத் துணி. அதிலிருந்து அழுக்கை நீக்கி, துணியைப் புதியதாக ஆக்க வேண்டும். தண்ணீரில் முக்கி எடுத்தால் போதுமா? அதன் மீது சோப்பைத் தடவினால் போதுமா? தண்ணீரில் முக்கி எடுத்து, ஓரளவு நீரைப் பிழிந்து, அதன் மீது சோப்பைத் தேய்த்து, மறுபடி நீரில் முக்கி எடுத்து, பிழிந்து, மீண்டும் சோப்பு தேய்த்து,
சலவைக் கல்லில் அடித்து அடித்து, கசக்கிக் கசக்கி, மறுபடி நீரில் முக்கி எடுத்து, நீரை ஒட்டப் பிழிந்து, பளிச் பளிச்சென்று துணியை உதறி, கொடியில் போட்டு, அது பறந்துவிடாதிருக்க க்ளிப் விலங்கிட்டு, பளீரென அடிக்கும் வெயிலில் காயப்போட்டால்...அந்தத் துணியிலிருந்து அழுக்குப் போகும், துணியும் புதுத்துணியாகும்.
அதாவது, மாசு படிந்த ஒரு துணியை இத்தனை
தண்டனைக்குள்ளாக்கினால்தான் அதைவிட்டு அந்த மாசு விலகுகிறது! அப்படியானால் மனித மனம்?
அதற்கு நல்ல தண்ணீர் போன்ற பெற்றோர்-
குடும்பம் இருக்கிறது; நல்ல சோப்பு போன்ற உறவு, நட்பு
இருக்கிறது, உறுதியான க்ளிப் போன்ற குரு (ஆசிரியர்)
அமைகிறார். ஒளிவெள்ளமான இறையருள் இருக்கிறது.
இதனால் மனித மனம் மாசடையவேண்டிய அவசியமே இல்லாத சூழலில்தான் வளர்கிறது. ஆனாலும் அதிலும் மாசு படியத்தான் செய்கிறது. இந்த மாசைக் களைவது எப்படி? வெறும் தண்ணீர், சோப்பு, க்ளிப், வெயில் இருந்தால் மட்டும் போதாது, இவற்றோடு பிழிதல், கசக்குதல், அடித்தல், உதறுதல், வெயிலில் காய்தல் என்று சில கண்டிப்புகள் இருக்கத்தான் வேண்டும்.
ஆனால், அப்படி கண்டிக்கும்போது துணியைப் போல அவற்றை சுலபமாக எடுத்துக்கொள்ள மனித மனம் தயாராக இருக்குமா என்ன?
அதனால்தான் சில ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொள்ள குடும்பத்திலும், சமுதாயத்திலும் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும். அந்தப் பயிற்சிகளால் அடிப்படையிலேயே நல்ல ஒழுக்கத்தை மனதில் நிலைநிறுத்த முடியும். அப்போது கண்டிக்க வேண்டிய அவசியமே இருக்காது.
அப்படியே கண்டிக்க வேண்டியிருந்தாலும் அது மனசில் வலி ஏற்படுத்தாது. ‘நியாயம்தானே?’ என்ற சமாதான ஆறுதல்தான் மனசுக்குள் நிலவும். இயல்பாக அமைந்திருக்கக்கூடிய நல்லொழுக்கம் ஏதேனும் காரணமாக இடையில் திசைமாறும்போது, மீண்டும் நல்வழிக்குத் திருப்ப இந்தப் பயிற்சி உதவும். தவறிச் சென்ற பாதையிலிருந்து மீண்டு சரியான பாதைக்குக் கொண்டு செல்லும். யானையே அங்குசத்துக்கு அடங்குவதுபோல!
(பொறுப்பாசிரியர்)
(பிரபுசங்கர்)
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்