கனக மழை பொழியும் கனக மழை பொழியும்






மிகவும் தூய்மையான, ஸ்படிகம் போன்ற பளபளப்பான நீல
நிறத் திருமேனியுடன், தாமரைக் கண்களுடன், கௌஸ்துபம் ஒளிரும் திருமார்பில் வனமாலி எனும் மாலையணிந்து, பட்டுப் பீதாம்பரம் தரித்து, அலங்கார பூஷிதனாய் வைகுண்டத்தில் வாசம் செய்பவர் திருமால். சத்வ குணத்தோடு சங்கு, சக்கரம், கதை, வாள், வில் எனும் ஐந்து ஆயுதங்களைக் கையில் ஏந்தி பக்தர்களைக் காக்கும் பரந்தாமன் திருமால். இந்தத் திருமாலுக்கு சகல விதங்களிலும் உதவும் சக்தியே மகாலட்சுமி எனப் போற்றப்படுகிறாள்.

அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதிபராசக்தி எடுத்த தசமகாவித்யையின் வடிவங்களில் 10 வது வித்யையாக கமலாத்மிகா எனும் மகாலட்சுமி போற்றப்படுகிறாள். ‘இந்த தேவி தங்க நிறத்தினள். இமயம் போன்று உயர்ந்த நான்கு யானைகளின் துதிக்கையில் உள்ள பொன்மயமான அம்ருத கலசங்களால் அபிஷேகம் செய்விக்கப்படுபவள். நான்கு திருக்கரங்கள் கொண்டவள். ஜொலிக்கும் ரத்னாபரணங்கள் அணிந்து, வெண்பட்டாடை உடுத்தி, மேல் இரு கரங்களில் அன்றலர்ந்த தாமரை மலர்களை ஏந்தி, கீழிரு திருக்கரங்களில் அபயம், வரதம் தரித்தவள். சர்வாலங்கார பூஷிதையாகக் காட்சி தருபவள். கருடனைத் தன் வாகனமாகக் கொண்டவள். தாமரை மலரில் அமர்ந்தருள்பவள். மகாலட்சுமியான இவளே சகல சம்பத்துகளுக்கும் அதிபதி. புன்முறுவல் பூத்த நகையினள். மனத் திருப்தியளிப்பவள். சிருங்காரம் ததும்பும் வண்ணம், பொலிவு கொண்ட பேரழகி. திருமாலின் போக சக்தி’ என ஸௌபாக்ய லக்ஷ்மி உபநிஷத்து எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


‘இந்த தேவி ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு விதமாக அவதாரம் செய்கிறாள். பூமி எனும் ப்ருத்வியிலிருந்து (மண்) அவதாரம் செய்து சீதையானாள். தீயில் அவதரித்து தடாதகை எனும் மீனாட்சியானவளும் இவளே. தாமரை மலரில் பிறந்து, பார்க்கவ முனிவரால் வளர்க்கப்பட்டு, பார்கவியானாள். திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது அதிலிருந்து மகாலட்சுமியாக வெளிப்பட்டாள். சகல செல்வ வளங்களுக்கும் இவளே அதிபதி. தங்கநிற ஆடையை அணிந்தவள். மேன்மை, செழிப்பு எல்லாவற்றின் பிறப்பிடமும் இவளே. பார்ப்பதற்கு சாது போல் இருந்தாலும் மஹிஷாசுரனை அஷ்ட தசபுஜ துர்க்கையாக மாறி, கொன்றவள்’ என பெருமையுடன் கூறுகிறது, தேவி மகாத்மியம் எனும் துர்க்கா சப்தசதி. பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை என்னும் கூற்றுப்படி இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளை தாராளமாக வழங்கும் தயாநிதி இத்தேவி. பொருள் வளம் கொழிக்க இத்தேவியின் திருவருள் அவசியம்.

இத்தேவியை லட்சுமி, ஸ்ரீகமலா, கமலாலயா, பத்மா, ரமா, நளினீ, யுக்மகரா, மா, க்ஷீரோதஜா, அம்ருதா, கும்பகரா, விஷ்ணுப்ரியா எனும் பன்னிரண்டு நாமங்களினால் துதிப்பவரின் அனைத்துத் துன்பங்களும் தீயிலிட்ட பஞ்சு போலாகும்.

தனக்கு பிட்சையிட ஏதுமின்றி வீட்டில் இருந்த ஒரு நெல்லிக்கனியைத் தயக்கத்துடன்  அளித்து கலங்கி நின்ற ஒரு ஏழைப் பெண்மணியின் நிலைக்கு இரங்கி கனகதாராஸ்தவம் எனும் அற்புதத் துதியால் மகாலட்சுமியைத் துதித்தார், ஆதிசங்கர பகவத்பாதர். அதனால் மனம் குளிர்ந்த மகாலட்சுமி அந்தப் பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை மழையெனப் பெய்வித்தாள்.
ஸ்ரீமன்நிகமாந்த மகாதேசிகன், ஓர் ஏழைப் பிரம்மச்சாரியின் திருமணத்திற்காக, திருமகளைப் போற்றும் ஸ்ரீஸ்துதி எனும் ஒரு அரிய துதியைப் பாடி பொன்மழை பொழியச் செய்தார்.

ஸ்ரீம் பீஜத்தில் உறைபவள் இவள். அழகு, செல்வம், சந்தோஷம், சக்தி, அதிகாரம் போன்றவற்றை அருள்பவள். மன்மதனின் தாய். பாற் கடலில் உதித்தவள். சந்திரனின் சகோதரி. கமலா என்பது தாமரையைக் குறிக்கும். தாமரையில் அமர்ந்து தாமரையைத் தாங்கும் திருமகளாகிய கமலாத்மிகாவை உலகில் அனைவரும் அவள் கருணைக்காக வழிபடுகின்றனர். பூக்களில் தாமரைக்கு ஒரு விசேஷமான தன்மையுண்டு. சூரியனின் ஒளிக்குத் தகுந்தாற்போல் தன்னை ஆக்கிக் கொள்ளுவதுதான் அது. கிழக்கில் சூரியன் தோன்றும்போது மலர ஆரம்பித்து, அவன் ஒளியுடன் தன்னை மாற்றிக்கொண்டு அவன் மேற்கில் மறையும் போது தானும் குவிந்து மூடிக் கொள்ளும். அதனால், உலகிற்கு சக்தியையும் ஒளியையும் வழங்கும் நண்பனிடமிருந்து சக்தியைப் பெறும் தன்மை கொண்டிருக்கிறது, தாமரை. தேவி அதனைக் கைகளில் தரித்து அதன் மேல் அமர்ந்து தன் ஆற்றலை தெளிவுற அறிவிக்கிறாள். ஒவ்வொரு துறையிலும் நீக்கமறக் காணப்படும் அழகு இவளின் அருட் கடாட்சமே. கமலாத்மிகாவின் அருள் எந்தப் பொருளை விட்டு நீங்கினாலும் அப்பொருள் உபயோகமற்றதாகவும் பிறரின் வெறுப்பிற்கு உரித்தானதும் ஆகும். கவிகள், சிற்பிகள் போன்றோரிடம் காணப்படும் நுண்ணறிவு இவளுடைய தயவே. லட்சுமியின் கடாட்சம் பெற்றால்தான் பேறுகளைப் பெற முடியும் என்பதை வெங்கடாத்ரீ என்ற மகான் தன் லக்ஷ்மி ஸஹஸ்ரம் எனும் நூலில் உறுதியாகக் கூறியுள்ளார். திருமகளன்றி திருமாலுக்குப் பெருமைகள் இல்லை. ‘ஹரிவக்ஷஸ்தலவாஸினி’ என்று வடமொழியில் இத்தேவி அழைக்கப்படுகிறாள். ‘வடிவாய் நின் வல மார்பில் வாழ்கின்ற மங்கை’ என பெரியாழ்வாரும் குறிப்பிட்டுள்ளார். இத்தேவியின் பெருமைகள் ஸ்ரீஸூக்தத்தின் பதினைந்து ரிக்குகளிலும் போற்றப்படுகிறது.

  இவள் நறுமணம் மிகுந்த இடத்தில் வசிப்பதில் ஆர்வம் உடையவள் என்பதை கந்தத்வாராம் எனும் மந்திரம் கூறுகிறது. லட்சுமி கடாட்சம் உள்ளவர்கள் எதையும் சாதிக்க முடியும். பணம் பாதாளம் வரை பாயும் என்பது பழமொழி. அதை ‘துராதர்ஷாம்’ என்ற சொல் குறிப்பிடுகிறது. இவள் அருள் பார்வை பட்டவர்கள் வசிக்கும் இடத்திற்குப் பதினாறு பேறுகளும் தாமே சென்றடையும். அவர்கள் வாழ்க்கை, வனப்பும் கூடி புஷ்டியாகும் என்பதை ‘நித்யபுஷ்டாம்’ எனும் மந்திரம் எடுத்துரைக்கிறது.

துர்க்கா ஸுக்தம், ‘துர்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே’ எனக் கூறுவது போல் ஸ்ரீஸூக்தமும் ‘தாம் பத்மினீம்
சரணமஹம் ப்ரபத்யே’ என லட்சுமியை சரணடைய உபதேசிக்கிறது.

ஆனந்தர், கர்தமர், ஸிக்லீதர் போன்றோர் இந்த மகாலட்சுமி மந்திரத்தின் ரிஷிகளாவர். அக்னி பகவான் தேவதை. ஹிரண்யவர்ணம் என்பது பீஜம். காம்ஸோஸ்மிதாம் சக்தியாக கருதப்படுகிறது.

இவளின் அனுக்ரகம் ஏற்பட்டால் அழியா செல்வம், பெரியோர்களிடமும் விஷ்ணுவிடமும் பக்தி, சத்சந்தானம், நற்புகழ், தன-தான்ய, ஐஸ்வர்ய அபிவிருத்தி போன்றவை மென்மேலும் விருத்தியாகும். புகழுடன் பொலிவும் கூடும்.

பரம்பொருளாம் நாராயணனின் திருமார்பில் உறையும் இவள், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தன்னை உபாசிப்பவர்களுக்கு அருள்கிறாள். திருமால் ராமனாக வந்தபோது சீதையாகவும் கண்ணனாய் வந்தபோது ருக்மணியாகவும் ஸ்ரீநிவாஸனாய் வந்தபோது பத்மாவதியாகவும் அவதரித்தவள் திருமகளே.

வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும் அரசர்களிடம் ராஜ்யலட்சுமியாகவும் குடும்பங்களில் க்ரஹலட்சுமியாகவும் அழகுள்ளவர்களிடம் சௌந்தர்ய லட்சுமியாகவும் புண்யாத்மாக்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் க்ஷத்ரிய குலங்களில் கீர்த்திலட்சுமியாகவும் வியாபாரிகளிடம் வர்த்தகலட்சுமியாகவும் வேதங்கள் ஓதுவோரிடம் தயாலட்சுமியாகவும் பொலிபவள் இவளே. அழகின் உறைவிடம்... ஆனந்தத்தின் பிறப்பிடம் இவள்.

நம் வீட்டில் திருமகள் அருள்புரிய வேண்டுமெனில் பசுஞ்சாணம் கொண்டு வாசல் மெழுகிக் கோலமிட்டால் அவள் கட்டாயம் அருள்புரிவாள். அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

பசுவின் தேகத்தில் தேவர்கள் அனைவரும் தங்க இடம் பெற்றனர். அனைத்து இடங்களிலும் அனைவரும் இடம் பெற்ற நிலையில் தாமதமாக வந்தாள் திருமகள். கோமாதாவிடம் ‘‘எனக்கும் உன் பவித்திரமான தேகத்தில் இடம் தரக்கூடாதா?’’ எனக் கேட்டாள். அனைவரும் இடம்பெறாத இடம் தன் பிருஷ்ட பாகம். அதை எப்படி ஸ்ரீதேவிக்கு அளிப்பது எனத் தயங்கிய பசுவிடம் லட்சுமி, ‘‘உன் தேகம் முழுதுமே பவித்ரம். அதனால் உன்பின்பக்கமாகிய பிருஷ்ட பாகத்திலேயே நான் தங்குகிறேன்’’ எனக்கூறி அங்கே இடமும் பிடித்தாள். அதனால் அங்கிருந்து வரும் கோமியம், பசுஞ்சாணம் போன்றவை புனிதமாகிறது. பசுஞ்சாணியில் திருமகள் வாசம் செய்வதை ‘கரீஷிணிம்’ எனும் சொல் குறிக்கிறது. கோமயத்தைக் கொண்டு மெழுகப்பட்ட இடம் பவித்ரமானதும் லட்சுமி கடாட்சம் பெற்றதாகவும் ஆகிவிடுகிறது. திருமகளை வரவேற்கவென்றே சில வீடுகளில் காலையில் வாசலில் பசுஞ்சாணம் தெளித்துக் கோலமிடுகின்றனர்.

குளிர்ந்த ஒளியைத் தரும் சந்திரன் போன்று பிரகாசிப்பவள். கீர்த்தியுடையவள். தேவர்களால் துதிக்கப்படுபவள். பஞ்ச பூதங்களுக்கும் ஈஸ்வரி என்பதை ‘ஈம்’ பீஜம் குறிக்கிறது. இந்த மகாலட்சுமியைச் சரணடைந்தால் அமங்கலங்களும் அலக்ஷ்மியும் அகலும் என ஸ்ரீஸூக்தம் உறுதியாகக் கூறுகிறது. மகாலட்சுமி நிலைத்திருக்க தினமும் ஸ்ரீஸூக்த ஜபம் செய்யவேண்டும். உண்மையே பேச வேண்டும். தனியாக உப்பையும் வெறும் பாக்கையும் மெல்லக்கூடாது. அழுக்கு ஆடைகள் அணியக்கூடாது. எண்ணெய் தேய்த்துக் கொண்டு உணவு அருந்தக்கூடாது. ஆசார சீலத்துடனும் ஒழுக்கத்துடனும் இருந்து இத்தேவியை உபாசிக்க வேண்டும். உண்மை, வாய்மை, அவதூறு கூறாமை, சோம்பலின்மை போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். வெறும் தரையில் படுத்தும் எண்ணெய் தேய்த்துக் கொண்டேயும் இத்தேவியின் மந்திரத்தை ஜபிக்கக் கூடாது.

அகத்தியர் காசிகாண்டம் எனும் நூலில் திருமகளைப் பற்றி லக்ஷ்மி பஞ்சகம் எனும் ஐந்து அதியற்புதமான துதிகளைப் பாடிப் பணிந்துள்ளார். அதை அதிவீரராமபாண்டியனார்
தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அந்த துதியை பாராயணம் செய்பவர்களுக்கு செல்வ வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

திருமாலின் தசாவதாரங்களில் பெரும்பாலும் மகாலட்சுமி உடன் இருந்து அருள் புரிந்ததை புராணங்கள் வாயிலாக அறிய முடிகிறது. கூர்மவதாரம் எடுத்து மேருமலையைத் தாங்கிய போது பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு திருமாலை மணந்தாள் லட்சுமி. வராக அவதாரத்தின் போது அவருடன் இணைந்து வராகரை, லட்சுமி வராகராக்கியவள். நரசிம்மரின் கோபத்தைத் தணிக்க அவர் மடியில் அமர்ந்து அவரை சாந்தப்படுத்தி லட்சுமி நரசிம்மராக்கியவள். வாமன அவதாரத்தில் பெருமாள் பிரம்மச்சாரியாக உருமாறியபோதிலும் அவர் திருமார்பில் ‘அகலகில்லேன்’ என்று உறையும் திருமகளை மறைக்க தன் திருமார்பை மான் தோலால் திருமால் மறைத்ததாகக் கூறுவர். பரசுராம அவதாரம் பிரம்மச்சாரி. ராமவதாரத்தில் திருமகளே சீதையானாள். கிருஷ்ணாவதாரத்தில் லட்சுமியே ருக்மிணியானாள். பலராம அவதாரத்தில் திருமகளே ரேவதி எனும் பெயரில் அவரை மணந்தாள். இந்தக் கலியில் திருமால் எடுக்கப்போகும் கல்கி அவதாரத்தில் லட்சுமி வித்யா லட்சுமியாகத் தோன்றப்போவதாக பாகவதம் கூறுகிறது.

வரலட்சுமி விரதம், வெள்ளிக்கிழமை விரதம், வைபவலட்சுமி விரத, கோபூஜை, அட்சய திருதியை பூஜை போன்றவை திருமகளுக்குரிய விரதங்களாகக் கருதப்படுகின்றன.

தங்கத்தில் திருமகள் உறைகிறாள். அதனாலேயே மங்களகரமான திருமாங்கல்யம் தங்கத்தில் செய்யப்படுகிறது. திருமகள் உறையும் காரணத்தினாலேயே தங்கத்தாலான ஆபரணங்களைக் காலில் அணியக் கூடாது என்று சொல்லப்படுகிறது. மஞ்சள் மங்கலமான பொருள். சௌபாக்ய லட்சுமி மஞ்சளில் வாசம் செய்வதால் மஞ்சள் பூசிக் குளித்த பெண்கள் லட்சுமிகரமாகத் தோற்றமளிக்கின்றனர் என்கிறோம். சுமங்கலிகளின் வகிட்டில் திருமகள் உறைவதாக ஐதீகம். எனவே சுமங்கலிப் பெண்கள் வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர். பூஜைகளின்போது நிவேதிக்கப்படும்
தாம்பூலத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். மேலும், ஸ்வஸ்திக் சின்னம், வெண் சாமரம், பூரணகும்பம், அடுக்கு தீபம், ரிஷபம், வலம்புரிச் சங்கு, ஸ்ரீவத்ஸம், குடை போன்ற எட்டு பொருட்களிலும் திருமகள் உறைவதால் இவை அஷ்டமங்கலப் பொருட்கள் என போற்றப்படுகின்றன.

பால், தேன், தாமரை, தானியக் கதிர்கள், நாணயங்கள் ஆகிய ஐந்திலும் திருமகள் வாசம் செய்வதால் இவற்றை பஞ்சலட்சுமிகள் என்பர். பாலை குழந்தைகளுக்கும் தேனை பெண்களுக்கும் தாமரையை ஆலயங்களில் அர்ச்சனைக்கும் நாணயங்களை ஆடவர்க்கும் தானியக் கதிர்களை பறவைகளுக்கும் தானமாகத் தர திருமகள் திருவருள் சித்திக்கும்.

வில்வம், தாமரை, வெற்றிலை, நெல்லி, துளசி மாவிலை போன்றவை திருமகள் அருள் பெற்ற தெய்வீக மூலிகைகளாக கருதப்படுகின்றன. பாற்கடலில் இருந்து தோன்றியதால் உப்பும் திருமகள் வடிவமாகவே கருதப்படுகிறது. இன்றும் முதல் தேதியன்று முதன் முதலில் கல் உப்பு வாங்கினால் திருமகள் அருள் கிட்டும் எனும் நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

ஸௌந்தர்யலக்ஷ்மி, கீர்த்தி லக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, சந்தானலக்ஷ்மி, மேதா லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி, துஷ்டி லக்ஷ்மி, புஷ்டி லக்ஷ்மி, ஞான லக்ஷ்மி, சாந்தி லக்ஷ்மி, சாம்ராஜ்ய லக்ஷ்மி, ஆரோக்ய லக்ஷ்மி. அன்ன லக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி, நாக லக்ஷ்மி, கிருஹ லக்ஷ்மி, மோட்ச லக்ஷ்மி என அனைத்து லக்ஷ்மிகளும் கமலாத்மிகா எனும் மஹாலக்ஷ்மியின் திருவடிவங்களே.
இன்றும் நகரத்தார் இல்ல பெண்மணிகள்,
‘காடு வெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடு கட்டிக் கொண்டிருக்கும் வேள் வணிகர் வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா! இலக்குமியே
என்றைக்கும் நீங்காதிரு’
- எனும் துதியால் தினமும் திருமகளை துதிப்பது வழக்கம்.

பத்மவனத்தில் வசிப்பதால், பத்மத்தில் பிரியம் கொண்ட யானைகளின் நாதத்தினாலே உணரப்படுபவள் இத்தேவி. தன் தாமரை ஆசனத்தில் குல்குலு, தமகன், குரண்டகன், சலன் போன்ற நான்கு யானைகளின் முழக்கத்திலே மகிழ்ந்து கொலுவிருப்பவள். இந்த நான்கு யானைகளும் பக்தர்களுக்கு தர்மம், காமம், அர்த்தம், மோட்சம் எனும் நான்கையும் அருள வல்லவை. இந்த தேவி நமக்கு எல்லா செல்வங்களை யும் வளரச் செய்யட்டும் என மங்கள ஸம்ஹிதை எனும் நூல் கூறும் இந்தத் தேவியின் திருவுருவை மனதினில் தியானித்து இக, பர, சுகம் பெற்று ஞான பக்தியால் ஆராதிப்போம்.

லக்ஷ்மி கடாட்சமே அனைத்திற்கும் மூலம். எவ்வளவு நல்லவனாக இருந்தும் அறிஞனாக, நற்குணங்கள் கொண்டவனாக இருந்தும் சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தும் செல்வம் எனும் லட்சுமி கடாட்சம் இல்லையென்றால் உலகம் அவனை மதிப்பதில்லை. இக்கருத்தை ஔவையார் கூட

‘கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லோரும் சென்றால் எதிர்கொள்வர் இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய்
வேண்டாள்
செல்லா(து) அவன் வாயிற் சொல்’

- எனும் பாடலின் மூலம் குறிப்பிட்டுள்ளாள். ‘கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி’ என்றார் கவியரசு கண்ணதாசன்.

எனவே தனம் எனும் செல்வம் நம் வாழ்விற்கு இன்றியமையாதது. அதை அருளும் கமலாத்மிகாவான மகாலட்சுமியைப் போற்றி பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.
படம்: ஸி.ஏ.ராமச்சந்திரன்
(அடுத்த வழிபாடு - மங்கலங்கள் அருளும் மாதங்கி)