கருவைக் காத்தருளும் அம்மன்







சென்னையில் சேத்துப்பட்டு-நுங்கம்பாக்கத்திற்கு நடுவே ஓடும் கூவம் நதி மீது பாலம் கட்ட முடிவு செய்தார், ஓர் ஆங்கிலேய அதிகாரி. அதற்கான திட்டமும் தயாரானது. வெள்ளைக்கார அதிகாரியின் விரலசைவுக்கு கட்டுப்பட்டு வேலை செய்தாலும் நமது பாரம்பரிய முறைப்படி ஒரு வேலையைத் தொடங்கும் முன் பூஜை போட்ட பிறகே ஆரம்பிப்பது நம்மவர்களின் வழக்கம்.

அதே போன்று பூஜையெல்லாம் முடித்து, பாலம் கட்டும் பணி துரிதமாக நடந்தது. ஒருநாள், வேலைத் தொடங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் அந்த இடமே பரபரப்பானது. காரணம், பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை. எழில் கொஞ்சும் அவளது திருமேனி கண்டு அங்கிருந்தோர் சிலிர்த்தார்கள். ‘‘தாயே...’’ என்று கைகூப்பினார்கள். அப்படியே அந்த நதிக்கரையோரம் அவளை அமர வைத்து வழிபடத் தொடங்கினார்கள்.

அவளும் ஆனந்தமாய் அந்த இடத்தில் தன்னை இருத்திக் கொண்டாள். ‘நான் இருக்கிறேன் கவலைப்படாதே’ என்று தன்னை நாடி வந்தவர்களை வாரி அணைத்துக் கொண்டாள். அப்பகுதி மக்கள் தினமும் அவள் தாள் பணிந்து வணங்கிய பின்னரே தங்களது பணிகளைத் தொடங்கினார்கள். அப்படித் தொடங்கும் பணி, வெற்றிகரமாக நிறைவடையும் என்று திடமாக நம்பினார்கள். சேத்துப்பட்டு பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தாள் அன்னை.

அன்னையை தினமும் வணங்கும் அந்தப் பெண், அன்னைக்குப் பாலபிஷேகம் செய்தாள். மலர் மாலை சாற்றினாள். பிறகு கண்மூடி அன்னையின் திருமுகத்தை மனதில் நிறுத்தி, ‘‘தாயே எனக்கு கல்யாணமாகி ஏழு வருஷமாச்சு. இன்னும் என் வயித்துல ஒரு குழந்தையும் தங்கல. ஊர் வாய மூட முடியல தாயே... வார்த்தயாலயே கொல்லுறாங்க. எனக்கு ஒரு குழந்த பொறக்கணும். என் வயிறு குளிரணும். உன் கண்ண தெறந்து பாரு ஆத்தா’’ என்று வேண்டிக் கொண்டாள்.

அன்னை புன்னகைத்தாள். ‘இது தானே எனது முதல் வேலை. இதற்காகத்தானே இங்கு வந்தமர்ந்தேன்’ என்ற அன்னையின் பார்வை அந்தப் பெண்ணின் வயிற்றில் தங்கியது. கரு உருவாகத் தடையாய்   இருந்தவை களையப்பட்டன. பலவீனமான கர்ப்பப்பை பலப்பட்டது. அவள் மனதிலிருந்த கவலை முட்கள் பிடுங்கி எறியப்பட்டன. உடனே மலர்ந்தாள் அந்தப் பெண். தன்னுள் ஏதோ மாற்றம் ஏற்பட்டதையும் அவ்வாறு மாற்றியது அம்மன்தான் என்பதையும் உணர்ந்தாள். பத்தே மாதத்தில் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

அன்னையின் அருளால் தான் பெற்றெடுத்த குழந்தையோடு அன்னையின் ஆலயத்திற்கு வந்து, அன்னையின் பாதத்தில் குழந்தையைக் கிடத்தி, கண்ணீரால் நன்றி சொன்னாள். ‘‘பல வருசமாய் தங்காம கலைந்த கருவைக் காத்து, இந்த குழந்தைய தந்தவ நீதான்’’ என்று நிலம்பட விழுந்து வணங்கினாள். அன்னையின் அருளைக் கண்டு ஊரே மெய்சிலிர்த்தது. அன்னையின் கருணையை உரக்கப் பேசி சிலாகித்தது. அன்று முதல் அன்னையைக் ‘கருகாத்தம்மன்’ என்று அழைக்கத் தொடங்கியது.

பதினாறு குழந்தைகளைப் பெற்று, பிறந்த உடனேயே அவற்றைப் பறிகொடுத்த ஒரு நவாப், அன்னையின் கருணையைக் கேள்விப்பட்டு, அன்னையை உள்ளமுருக வேண்டிக் கொண்டான். அன்னையின் அருளால் குழந்தை வரம் பெற்றான். அவன் நன்றியோடு அன்னைக்கு கோயில் கட்டி வணங்கினான். அவன் கட்டிய அந்தக் கோயில் கடந்த 350 ஆண்டுகளாய் பலரது மனத் துயரத்திற்கு மருந்தாய் இருக்கிறது; கவலைத் தீர்க்கிறது.

 சென்னை சேத்துப்பட்டில், ஸ்பர்டாங்க் சாலையின் முனையில், கருகாத்தம்மன் என்ற பெயரோடு அமர்ந்துள்ள கிராம தேவதையான அன்னையின் கோயிலுள் நுழையும் போதே மஞ்சள் மணம் வீசுகிறது. வளாகத்தில் பானையில், பக்தியோடு அன்னைக்காக பொங்கல் வைத்துக் கொண்டிருக்கும் பெண்களைக் காணலாம். அழகிய சூலமும் பலிபீடத்தையும் வணங்கி முன்னே செல்ல, மூன்று படி இறங்கினால் அங்கே விநாயகரையும், வள்ளி -தெய்வானையோடு முருகனையும் கண்டு வணங்கலாம். துவார பாலகிகளை வணங்கி, அன்னையை தரிசிக்க அனுமதி கோரலாம். அங்கிருந்து மூன்று படி மேலேற, கர்ப்ப கிரகத்தில், கருவைக் காத்து குழந்தை வரம் அருளும் தேவியின் அற்புத தரிசனம்.


வலது காலை அசுரனின் தலை மேல் அழுத்தி வைத்து, இடது காலை மடக்கி அமர்ந்திருக்கும் அன்னைக்கு நான்கு கரங்கள். வலப்பக்க கரங்களில் தாமரை மொட்டும், சூலமும்; இடதுபுற கரங்களில் கபாலமும் பாம்புடன் கூடிய உடுக்கையும். சிரசின் பின்புறம் தீச்சுடர் ஒளியிட காட்சித் தரும் அன்னையின் அழகில் உள்ளம் கொள்ளை போகிறது. அன்னையிடம் உள்ளமுருக வேண்டிக்கொண்டு அங்கு பிரசாதமாகத் தரும் எலுமிச்சம்பழத்தை முறைப்படி சாப்பிட்டால் மழலைச் செல்வம் நிச்சயம் என்கிறார்கள் பலனடைந்தவர்கள்.

கோயிலின் பிராகாரத்தில் அரச மரமும் அதன் கீழே புதிதாக வைத்த நாகர் சிலையும் இருக்கிறது. முன்பிருந்த நாகர் சிலை அரச மரத்தினுள் தன்னை மறைத்துக் கொண்டு அருள்புரிந்து வருகிறது. கோயிலை வலம் வரும்போது துர்க்கை அம்மனையும் நவகிரகங்களையும் சப்த கன்னியரையும் தரிசித்து வணங்கலாம்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கு ஏராளமானோர் வந்து வழிபடுகிறார்கள். திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகையைப் போன்றே சக்திமிக்க இந்த அம்மனுக்கு இலங்கை, கனடா, அமெரிக்கா என கடல் கடந்து பல நாடுகளிலும் பக்தர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நம்பிக்கையோடு அன்னையின் பாதம் பணிந்து மழலைச் செல்வம் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிய ஆனந்தமாக இருக்கிறது. குழந்தை வரத்தோடு, வேண்டும் பிற வரமெல்லாம் தரும் கருகாத்தம்மனை ஒருமுறை சென்று தரிசனம் செய்யுங்கள். அவள் விழிக் கருணை அருளில் நனைந்து மகிழுங்கள்.
- எஸ்.ஆர்.செந்தில்குமார்